அகில மியான்மர் தமிழ் இந்து ஆன்மிக இதழ் Estb2016

அகில மியான்மர் தமிழ் இந்து ஆன்மிக இதழ் Estb2016

Share

Tamwe

06/07/2025
16/03/2022

******************உ******************
#உண்மைக்_கல்வி :
(ဖေ့စ်ဘွက် စာမျက်နှာ-213)

தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

#உள்ளத்தில்_எவ்வளவுக்கெவ்வளவு அமைதி நிலவுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு #இன்பம் மேலிடுகிறதென்பது பிரத்தியக்ஷ அநுபவம். மன அமைதியின் உயர்நிலையே மேலான புருஷார்த்தமாகும். அமைதி குறையக் குறையத் துன்பமும் வளரும். மனிதர்கள் தங்கள் துன்பங்கள் நீங்குவதற்கு முயற்சி செய்யும்போது, பிறரைத் துன்புறுத்தவும் நேருகிறது. இவ்விதம் ஒவ்வொருவரும் சந்தர்ப்பங்களை ஒட்டி மற்றவர்களைத் துன்புறுத்த முயலும்போது சமுதாயத்தில் குழப்பம் ஏற்படுகிறது. அவ்விதம் குழப்பம் நேரும் போதெல்லாம் அதை அடக்கி அமைதியையும், சமாதானத்தையும் நிலை நிறுத்த அரசாங்க அதிகாரிகள் சட்டத்தின் மூலம் நடவடிக்கைகள் எடுக்கிறார்கள். ஆயினும், உண்மையான பரிகாரம் யாதெனில், மக்கள் எல்லோரும் புலன்களைப் பறிக்கும் வெளி விஷயங்களிலிருந்து தங்கள் மனஸைத் திருப்பி அதைத் தங்கள் வசமாக்கி அமைதியாக இருக்க எப்பொழுது முற்படுகிறார்களோ, அப்போதுதான் துன்பம் அவர்களை அணுகாமல் இருக்கும். அதோடு அவர்களால் பிறருக்குத் துன்பம் விளையாமலும் இருக்கும். நல்ல கல்வியைப் பயிலும் பயனாகத்தான் இத்தகைய வெளி அமைதியும் உள் அமைதியும் நம் நாட்டிலே தொன்று தொட்டு சித்தித்து வந்திருகின்றன.

#நம் பாரத நாட்டின் முற்காலக் கல்வியின் முதல் நோக்கம் மன அமைதியை அடைவதேயாகும். புதிது புதிதாகத் தோன்றும் பௌதிக விஞ்ஞான ஆராய்ச்சித் துறைகளில் மேன்மேலும் கல்வியைப் பெருக்குவதில் தவறில்லை. ஆனால், அதன் பயனை தர்ம மார்க்கத்தில் மட்டுமே உதவுமாறு செய்தால்தான் நாடும் மக்களும் உயர்வான அமைதி நிலையை அடைய முடியும். இவ்வாறில்லாமல் புலன்கள் போன வழியே அவைகளை பிரயோஜனப்படுத்திக் கொண்டிருந்தால், எத்தனை படிப்பும் விஞ்ஞான அறிவும் இருந்தாலும் கெட்ட எண்ணங்களும் துராசைகளுந்தான் வளரும். இன்னல்களும் துன்பங்களும் பெருகும்.

#உண்மையான கல்வி என்பது ஆத்மஞானம் அடைய உதவுவதேயாகும். ஆத்ம ஞானத்தாலேயே மக்கள் அமரத்துவம் அடைகிறார்கள். எதற்கு மேலாக ஒரு பயன் உலகில் இல்லையோ அந்தப் பயனை உண்மைக் கல்வி அளிக்கிறது. மற்ற விதமான கல்விப் பயிற்சிகளெல்லாம் உலகப் பயன்களைத்தான் அளிக்கின்றன. ஆனாலும் அவையும் படிப்படியாகப் பரமாத்மாவை சேர உபயோகப்படலாம். உலகப் பயன் என்பது பொதுவாகப் பொருள் திரட்டுவதையே குறிக்கின்றது. பொருள்கூட பலவித தருமங்களை செய்யப் பயன்படுகிறது. லௌகிக தருமங்களும் பிரம்ம ஞானத்துக்குத் சாதகமாகின்றன. ‘தனக்கு விதிக்கப்பட்ட கர்மங்களைச் சரிவர நடத்துவதாலும், தவத்தினாலும், இறைவனை வணங்கி வழிபடுவதாலும் ஒருவன் ஆத்ம ஞானத்தை அடைகிறான்’ என ஆதி ஆசாரியர்கள் கூறியுள்ளார்கள்.

#ஆத்ம ஞானத்தை அளிக்கும் கல்வியைப் பரவித்யை எனவும், மற்றவற்றை அபரவித்யை எனவும் கூறுவர். பரவித்யை எனும் பிரம்ம ஞானம், இப்போது நமக்குக் கொஞ்சங்கூடப் புலனாகாத பரம ஸத்தியத்தை நாம் அறிவதில் நேரான பலனை அளிக்கிறது. அஞ்ஞான இருளைப் போக்குகிறது. கண்களுக்குப் புலனாகாத தர்மத்தின் லட்சணத்தை வேதம், ஸ்மிருதி இவைகளின் மூலமாகத்தான் அறிய முடியும். ஞானத்துக்குப் பிரத்தியக்ஷம், அநுமானம், யுக்தி இவை மட்டுமின்றி வேதம், அநுபவம் இவ்வகையான பிரமாணங்களே ஆதாரமாக இருக்கின்றன. இது ஆதிசங்கர பகவத் பாதாசாரியர்களின் தீர்மானம். ஆனாலும், மனிதனது புத்தி நுட்பத்தால் கண்களுக்குப் புலனாகும் பயனை மட்டும் விளக்கக்கூடிய #வான_சாஸ்திரம், #அரசியல், #பொருளாதாரம், #சரித்திரம், #ஸயன்ஸ்கள் இவைகளும், வெளிநாட்டாரது ஆராய்ச்சி முறைகளும் கற்பிக்கப்படுவதும் நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவியாகத்தான் இருக்கிறது.

#ஆஸ்திக மயமான கல்வி போதனையுடன் அந்நிய நாட்டாரின் முறைகளைக் கலந்து போதிப்பதில் நாம் மிகவும் ஜாக்கிரதையுடன் நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். நமது ஆத்ம சுத்தி, அந்தரங்க சுத்தி, ஒழுக்கம் – இவற்றைக் கல்வியின் உறுபயனாகக் கருத வேண்டும். நம் புலன்களுக்கு மட்டுமே சுக உணர்ச்சியையும், மகிழ்ச்சியையும் எளிதில் தரக்கூடிய வகையில் உள்ள எல்லா அம்சங்களையும் போதனா முறையிலிருந்து விலக்கவேண்டும். மேலை நாட்டவரின் நடை, உடை, பாவனை, உணவு, உரையாடல் முதலியவைகளில் ஈடுபட்டு அவைகளைக் கையாளுவோமேயானால் படிப்படியாக நமது பண்பாடு, அறம் இவைகளிலிருந்து நாம் நழுவி, நமது ஆன்ம நலனுக்கு இடையூறு செய்துகொள்வதோடு, புண்ணிய பூமியாகிய இந்தப் பாரத நாட்டுக்கே கெடுதல் ஏற்படுத்தி விடுவோம்.

#பாரத_நாட்டில் தற்காலம் நமது மக்கள் பெரும்பாலும் சிறு பிராயம் முதலே தம் தேசத்துக்குரிய ஒழுக்கம், பண்பாடு, இறைவணக்கம், ஆத்ம தியானம், இவ்விதமான பழக்கமே இல்லாமலிருந்து வருகின்றனர். விஞ்ஞானத்தைப் பயில்வதில் மட்டுமின்றி வாழ்முறையிலும்கூட வெளிநாட்டாரது முறைகளையே பின்பற்றி வருகின்றனர். இதனால் மக்களுக்கு இந்த உலகத்தின் சாமானிய இன்பத்தையும் மறு உலகத்தின் பேரின்ப வழியையும் அடையத் தடை ஏற்படுகின்றதென்பது தெளிவு. ஆஸ்திகப் பரம்பரையில் தோன்றிய நமது குழந்தைகளுக்குச் சிறு வயது முதலே நமது பண்புக்குரிய தர்மம், ஒழுக்கம், பக்தி, ஞானம் முதலியவற்றைக் கடைப்பிடித்து ஒழுகுவதற்கு அநுகூலமான கல்வியைப் போதிக்க வேண்டியதே நம் முதற் கடமை.

தொடரும்...
பெரியவாள் திருவடிகளே சரணம்

🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏

#அகில_மியான்மா_தமிழ்_இந்து_ஆன்மிக_இதழ்"
(முகநூல்ஆன்மிக தகவல்கள் வெளியீடு பக்கம் -213)
ஸ்தாபகம் Established -2016

#မြန်မာနိုင်ငံလုံးဆိုင်ရာ_တမီလ်_ဟိန္ဒူ_ဘာသာရေး_အကြောင်းသိကောင်းစရာများ"
(ဖေ့စ်ဘွက် စာမျက်နှာ-၂၁၃)
(စတင်ဖြန့်ဝေခြင်းစတင်တည်ထောင်သည့်နှစ် -2016)

#இப்படிக்கு:
🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏சிவஸ்ரீ.நா.கா.சுந்தரமூர்த்தி தலைமைசிவாச்சாரியரின் குமாரர்கள்,மியான்மர் நான்காம் தலைமுறை அர்ச்சகர்கள்.
சிவாகமசெல்வர்,சிவஸ்ரீ.N.K.S. ஜெகதீஸ்வரன் குருக்கள்.B.A யாங்கோன்,மியான்மர். (2022/3/16)

သျှီဝသျှရီ.N.K.S.ဂျေကသီးစ်ဝါရန်း ဆွာမီပဏ္ဏိသ်(ခ)ဦးတင်ရွှေ ဆရာတော် B:A.ရန်ကုန်မြို့။

13/02/2022

******************உ******************
#குற்றத்தைக்_குறைக்கும்_வழி :

தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

#ராஜாங்கம் எதற்காக இருக்கிறது? ஒரு தேசத்தில் அதிக பலம் உள்ளவர்கள், குறைந்த பலம் உள்ளவரை ஹிம்ஸிக்கலாம். பெரிய கூட்டத்தார் சிறிய கூட்டத்தாரை கஷ்டப்படுத்தலாம். பலர் சேர்ந்து ஒருவனை நிர்பந்தப்படுத்தி அவனது சொத்து, வீடு முதலியவற்றை ஆக்கிரமித்துக் கொள்ளலாம். இப்படி எல்லாம் நேராமல் தேசத்தில் ஒழுங்கு இருக்கச் செய்வதற்கு ஏற்பட்டதே ராஜாங்கம்.

#தப்புச் செய்பவர்களை அவ்விதம் செய்யாமல் தடுப்பதற்காக ராஜாங்கம் என்ன செய்கிறது? தண்டனை தருகிறது. தண்டனை உண்டு என்ற பயம் இருப்பதாலேயே பலர் தப்புச் செய்யாமல் தடுக்கப்படுகிறார்கள்.

#ஹிம்ஸை செய்த ஒருவனுக்கு அவன் செய்ததைக்காட்டிலும் ராஜாங்கம் அதிக ஹிம்ஸை தருகிறது. பத்து ரூபாயை அவன் திருடுவதால், திருட்டுக் கொடுத்தவருக்கு சிறிது கஷ்டம் உண்டாகிறது. திருடியவனுக்கோ அதைவிடப் பெரிய கஷ்டமாகப் பல நாட்கள் சிறைவாசம் விதிக்கப்படுகிறது. இப்படிச் செய்தால்தான் அவன் மீண்டும் அந்தத் தப்பு பண்ணமாட்டான். மற்றவர்களும் அந்தத் தப்பைப் பண்ணப் பயப்படுவார்கள் என்கிற அடிப்படையில் தண்ட நீதி அமைந்திருக்கிறது. மனித இயல்புப்படி (Psychology) பார்க்கும் போது இதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

#ஆனால் இதனிலும் சிலாக்கியமான ஓர் உபாயத்தையும் அரசாங்கம் அதே சமயத்தில் விருத்தி செய்யவேண்டும். குற்றம் இழைத்த பின் ஒருவரைத் தண்டிப்பதும், ஒருவர் சுபாவமான தர்ம உணர்ச்சி இல்லாமல் தண்டனைக்காகப் பயந்தே குற்றம் செய்யாமல் இருக்கச் செய்வதும் இரண்டாம் பட்சம்தான். குற்றம் செய்கிற எண்ணமே தோன்றாமல் இருக்கச் செய்வதுதான் சிலாக்கியமானது.

#முதலில் ஒருவன் ஹிம்ஸை தருவது, பிறகு அரசாங்கம் அவனுக்கு அதைவிட அதிக ஹிம்ஸை தருவது என்கிற ‘அர்த்த சாஸ்திர’ நீதியையே நடைமுறையில் கடைபிடிக்க வேண்டியிருந்தாலும், இந்த அர்த்த சாஸ்திரமும், தர்ம சாஸ்திரத்தின் காலில் விழுந்து கிடக்க வேண்டியதுதான் என்பதை ராஜாங்கம் ஒரு லட்சிய நிலையாகவாவது (Ideal) புரிந்து கொள்ள வேண்டும்.

#தர்ம_சாஸ்திரப்படி நடக்கும் ஸத்துக்கள் உருவாவதற்கு உரிய சூழ்நிலையை அரசாங்கம் காப்பாற்றிக் கொடுத்தால், ஜனங்களுக்கு குற்றம் செய்கிற உணர்வே கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிடும். தர்மம் அறிந்தவர்கள், தர்மத்தை அநுஷ்டிப்பவர்கள் விருந்தியாவதற்கு வசதி இருந்தால் அவர்கள் மற்றவர்களிடமும் தங்கள் வாழ்க்கை உதாரணத்தாலேயே சாந்தத்தையும் ஒழுக்கத்தையும் பரப்புவார்கள். சண்டை, பூசல், குற்றம் எல்லாம் குறையும்.

#முதலில் ராஜாங்கப் பதவியில் உள்ளவர்கள் தர்ம சீலர்களாய் இருக்க வேண்டும். ‘இவர்கள் செய்வதும் சொல்வதும் சொந்த நன்மைக்காக அல்ல; நம் நன்மைக்காகத்தான்’ என்று ஜனங்கள் நம்பிக்கை வரக்கூடிய தர்மிஷ்டர்கள் தர்மப்படியே ராஜாங்கம் நடத்த வேண்டும். தர்மிஷ்டர்கள் தர்மங்களை சாந்தமாக எடுத்துச் சொன்னால் ஜனங்கள் அதன்படியே நடப்பார்கள்.

#இப்படிக் குற்றமே இல்லாமல் ஆக்குகிற காரியத்தை ராஜாங்கத்தார் மட்டும் செய்ய முடியாது. தர்மசீலர்களான மற்றவர்களும் சேர்ந்து இந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும். இவ்வாறு தர்மிஷ்டர்கள் கைங்கரியம் செய்வதற்கு அநுகூலமான சூழ்நிலையை ராஜாங்கம் ஏற்படுத்தித் தரவேண்டும்.

#போலீசையும் கோர்ட்டையும் விருத்தி செய்வதைவிட தர்மக்ஞர்களை விருத்தி பண்ணுவதில் ராஜாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும். சொந்த நலனைக் கருதாமல், உபதேசத்தைப் பணம் பண்ணும் தொழிலாக்காமல், பரோபகாரமே லக்ஷியமாகக் கொண்டு சாந்தமாகத் தர்மங்களை எடுத்துச் சொல்கிறவர்களுக்கு ராஜாங்கம் உற்சாகம் தரவேண்டும். இந்த உற்சாகத்தாலேயே மேலும் பலர் அவ்விதம் உருவாவார்கள். எடுத்துச் சொல்வதைவிட எடுத்துக்காட்டாகத் தாங்களே இருப்பதுதான் அதிக சக்தி வாய்ந்தது.

#கோர்ட்டுகள் அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிகமாகின்றன என்றே அர்த்தம். இதற்குப் பதில் கோயில்கள் அதிகமானால் எங்கும் சாந்தம் பரவும். பழைய கால ராஜாக்கள் கோர்ட்டுகளுக்குப் பதிலாகக் கோயில்களைக் கட்டி வந்தார்கள். பழைய கோயில்களைப் புதுப்பித்தார்கள். அந்தக் கோயில்களிலேயே பொழுது போக்குக்கான சகல கலைகளும் கூடத் தெய்வீகமாக்கப்பட்டு அர்ப்பணமாயின. ஜனங்களும் ஆலய வழிபாடு செய்து சாந்தர்களாக இருந்தார்கள். இப்போதுள்ளது போலச் சமூகச் சச்சரவு, பூசல் எல்லாம் அப்போது இல்லை.

#சட்டம் போட்டுக் குற்றம் செய்யாமல் தடுப்பதைவிட, ஒரு நல்ல மார்க்கத்தைக் காட்டி, அதில் ஜனங்களைத் திருப்பித் தப்பைப் பண்ணவும் செய்யவும் அவகாசத்தைக் குறைக்க வேண்டும். இப்படி தண்டத்தைக் காட்டாமல் நல்லதைக் காட்டித் தேசத்தில் சாந்தியை உண்டாக்குவதுதான் சிலாக்கியம். இந்த சாந்திதான் நிலைத்து நிற்கும். சாந்தர்களுக்கும், ஸத்துக்களுக்கும், தர்மிஷ்டர்களுக்கும் ராஜாங்கம் மதிப்புத் தந்தாலே தேசத்திலும் ஜனங்களிடையே இந்த நல்ல பண்புகள் விருத்தியாகும்.

தொடரும்...
பெரியவாள் திருவடிகளே சரணம்

🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏

#அகில_மியான்மா_தமிழ்_இந்து_ஆன்மிக_இதழ்"
(முகநூல்ஆன்மிக தகவல்கள் வெளியீடு பக்கம் -211)
ஸ்தாபகம் Established -2016

#မြန်မာနိုင်ငံလုံးဆိုင်ရာ_တမီလ်_ဟိန္ဒူ_ဘာသာရေး_အကြောင်းသိကောင်းစရာများ"
(ဖေ့စ်ဘွက် စာမျက်နှာ-၂၁၁)
(စတင်ဖြန့်ဝေခြင်းစတင်တည်ထောင်သည့်နှစ် -2016)

#இப்படிக்கு:
🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏சிவஸ்ரீ.நா.கா.சுந்தரமூர்த்தி தலைமைசிவாச்சாரியரின் குமாரர்கள்,மியான்மர் நான்காம் தலைமுறை அர்ச்சகர்கள்.
சிவாகமசெல்வர்,சிவஸ்ரீ.N.K.S. ஜெகதீஸ்வரன் குருக்கள்.B.A யாங்கோன்,மியான்மர். (2022/2/13)

သျှီဝသျှရီ.N.K.S.ဂျေကသီးစ်ဝါရန်း ဆွာမီပဏ္ဏိသ်(ခ)ဦးတင်ရွှေ ဆရာတော် B:A.ရန်ကုန်မြို့။

20/01/2022

*****************உ******************
#அறமும்_அன்பும்_அரசாங்கமும்

அரசனே தர்மத்துக்குக் காரண புருஷன்—”ராஜா தர்மஸ்ய காரணம்”—என்று ஒரு முதுமொழி இருக்கிறது. இதன் அர்த்தம் என்ன என்று பார்க்கலாம்.

#முதலில் தர்மம் என்றால் என்ன?

மனிதராகப் பிறந்த எல்லோருக்கும் பசி, தாகம் இருக்கிறது. அவர்கள் வசிக்க ஓரிடம் வேண்டியிருக்கிறது. குளிர், வெயிலிலிருந்து காப்பாற்றிக் கொள்ளவும், மானத்தை ரட்சித்துக் கொள்ளவும் ஆடை அணிய வேண்டியிருக்கிறது. இதற்கெல்லாம் மனிதன் வசதி செய்துகொள்ள வேண்டும். ஏதோ ஒரு தொழிலைச் செய்தே இதற்கு வசதி செய்து கொள்கிறான். அத்தியாவசியமான சுய தேவையைப்பூர்த்தி செய்துகொள்வதோடு ஒவ்வொரு மனிதனும் பிறர் விஷயமாகச் சில கடமைகளையும் நிறைவேற்ற வேண்டியிருக்கிறது. ஒவ்வொருவனும் ஏதோ ஒரு குடும்பத்தில் பிறப்பதால் அந்தக் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், பிற்பாடு கல்யாணமானதும் மனைவி மக்களுக்கும் பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. தன்னுடைய சமுதாயம், தேசம் இவற்றுக்கெல்லாம் மனிதன் கடமை ஆற்றவேண்டியிருக்கிறது. பலவிதத்தில் சுய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளலாம்; பலவிதத்தில் வீடு, நாடு இவற்றுக்கான கடமைகளைச் செய்யலாம். ஆனால் மனத்துக்குத் தோன்றியபடியெல்லாம் இவற்றைச் செய்யாமல், எவருக்கும் தீங்கு விளைவிக்காத விதத்தில், அதீதமான காமமும் குரோதமும் கலக்காமல் செய்ய வேண்டும். தன்னையும் மேம்படுத்திக்கொண்டு, அனைவரையும் உயர்த்துகிற விதத்தில் தொழிலையும் கடமையையும் செய்ய முடியும். இவ்வாறு சம்பந்தப்பட்ட அனைவரது ஆத்ம அபிவிருத்திக்கும் அநுசரணையாக இக உலகக் காரியங்களைச் செய்வதற்குத்தான் “தர்மம்” என்று பெயர்.

#பலர் கூடி வாழ்கிற சமூகத்தை, அவர்களது பலவிதமான காரியங்களில் உரசலில்லாமல், சமூகம் முழுவதும் ஆத்மாபிவிருத்தி அடையும் முறையில் சீராக வைத்திருக்க வேண்டும். இப்படிச் செய்வதே ராஜாங்கத்தின் கடமை. பிரஜைகளின் லௌகிக வாழ்க்கையை ஒழுங்கு செய்து, அவர்கள் ஆத்மாபிவிருத்தி அடைகிற வாய்ப்புகளையெல்லாம் பூர்த்தி செய்து தரவேண்டியது ராஜாங்கத்தின் பொறுப்பு. இதனாலேயே “ராஜா தர்மஸ்ய காரணம்” என்றனர்.

#ராஜாங்கம், தனி மனிதர்கள் இவர்களுக்குப் பலவிதமான காரியங்கள் ஏற்பட்டிருக்கின்றன. எத்தனை காரியம் இருந்தாலும் அதற்கெல்லாம் மூலமும், நோக்கமும் அன்பு என்ற ஒன்றாகவே இருக்க வேண்டும். காரியம் என்று ஏற்பட்டால் அதன் விளைவுக்கு ஆளாகிற ஒன்றும் இருக்கத்தான் செய்யும். ‘காரியம் செய்பவன்’ இருப்பதுபோல் ‘காரியத்தின் விளைவுக்கு ஆளாகிற ஒருவனு’ம் இருந்தே தீருவான். விளைவை அநுபவிக்கப் போகிறவர்களிடம் பூரண அன்பு வைத்தே எந்தக் காரியமும் செய்ய வேண்டும். அன்பிலேயே எந்தக் காரியமும் பிறக்க வேண்டும்.

#உலக விகாரங்களில் யுத்தம் முதலியனவும் அத்தியாவசியமாகிவிடுகிற நிர்ப்பந்தம் ஏற்படுவதுண்டு. சிலருக்கு தண்டனை தர வேண்டி நேருகிறது. ஆனால், யுத்தம் செய்யும் போதும், தண்டனை தரும்போதும்கூட எதிராளியிடம் துவேஷம் கொள்ளாமல் அன்புடனேயே செய்ய வேண்டும்.

#காரியம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் காரியம் செய்கிற மனசில் அன்பு தவிர வேறெதுவும் இருக்கக்கூடாது. அன்பு வேறு; புத்தரும் காந்தியும் சொன்ன அஹிம்சை வேறு. அன்பினால் லோக க்ஷேமத்தைச் செய்யும்போது, தப்புச் செய்பவர்களுக்கு ஹிம்சை செய்வதைத் தவிர்க்க முடியாமற் போகலாம். அப்போது ஹிம்சையில் தோஷமும் இல்லை. ஆனால், தண்டனை பெறுகிறவர்களிடமும் நம் மனசில் அன்பே இருக்க வேண்டும். லோகக்ஷேமத்தை மட்டுமின்றி அவனுடைய க்ஷேமத்தையும் — அதாவது இனிமேலும் இந்த கெடுதல்களைச் செய்து அவன் பாபத்தைத் பெருக்கிக் கொள்ளக்கூடாது என்பதையும் — உத்தேசித்தே அவனுக்கு ஹிம்சை தரவேண்டியிருக்கிறது என்ற உணர்வோடு சிட்சிக்கவேண்டும். காமம், குரோதம், துவேஷம், வஞ்சனை இவற்றைப் பூரணமாக நீக்கிவிட்டு, லோகக்ஷேமத்துக்காக எந்தக் காரியமும் செய்யலாம். அன்பு ஒன்றே சகல காரியங்களுக்கும் வழித்துணை (guide) யாகிவிட்டால் உலகில் உள்ள பல தீமைகள் தானாகச் சிறுகச் சிறுகச் மறைந்து போகும். இது என்னுடைய உபதேசம் (Message) அல்ல; இதுவே பாரத தேசத்தின் சகல ரிஷிகளும் முனிவர்களும் தந்திருக்கிற உபதேச சாரம்.

தொடரும்...
பெரியவாள் திருவடிகளே சரணம்

🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏

#அகில_மியான்மா_தமிழ்_இந்து_ஆன்மிக_இதழ்"

(முகநூல்ஆன்மிக தகவல்கள் வெளியீடு பக்கம் -210)
ஸ்தாபகம் Established -2016

#မြန်မာနိုင်ငံလုံးဆိုင်ရာ_တမီလ်_ဟိန္ဒူ_ဘာသာရေး_အကြောင်းသိကောင်းစရာများ"
(ဖေ့စ်ဘွက် စာမျက်နှာ-၂၁၀)
(စတင်ဖြန့်ဝေချင်းစတင်တည်ထောင်သည့်နှစ် -2016)

#இப்படிக்கு:
🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏சிவஸ்ரீ.நா.கா.சுந்தரமூர்த்தி தலைமைசிவாச்சாரியரின் குமாரர்கள்,மியான்மர் நான்காம் தலைமுறை அர்ச்சகர்கள்.
சிவாகமசெல்வர்,சிவஸ்ரீ.N.K.S. ஜெகதீஸ்வரன் குருக்கள்.B.A யாங்கோன்,மியான்மர். (2022/1/20)

သျှီဝသျှရီ.N.K.S.ဂျေကသီးစ်ဝါရန်း ဆွာမီပဏ္ဏိသ်(ခ)ဦးတင်ရွှေ ဆရာတော် B:A.ရန်ကုန်မြို့။

07/01/2022

★★★★★★★★★உ★★★★★★★★
#எது_சுயராஜ்யம்?

சுதேசி, சுயராஜ்யம் என்று இப்போழுது எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால், நடை, உடை, பாவனை எல்லாவற்றிலும் வெள்ளைக்காரன் மாதிரி இருக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். இவைகளெல்லாம் உள்ள மட்டும் நாம் பரதேசிகள் தான்; நம் நாடு பராதீனத்திலுள்ள ராஜ்யம்தான். வாஸ்தவமான சுயராஜ்யம் வரவேண்டுமென்றால் நம்முடையை தேசத்தின் ஆசார அநுஷ்டானங்கள் எப்படி இருந்தன என்பதைக் கவனித்து, இப்பொழுது இருப்பதை அப்படி மாற்றினால் நல்லது என்று உணர்ந்து, அதற்கு வேண்டிய காரியங்களைச் செய்வதுதான். நம்முடைய தேசத்துப் பழைய வழக்கங்கள், தர்மங்கள், ஆத்ம சம்பத்துக்கள் மாறாமல் இருக்க வேண்டும். பிற தேசத்தார்கள் மாதிரி நாம் இருக்க வேண்டும் என்று நினைப்பது தப்பு. வெளிநாட்டார் சொல்லாமலே, நாமே அவர்களுடைய பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்டபின், அரசியலில் மட்டும் அடிமைத்தனம் இருந்ததென்ன, போயென்ன?

#உண்மையான சுயராஜ்யமானால், நம்முடைய சுதந்திரப்படி நடத்தும் சட்டசபை எனில், நம்முடைய தர்மராஜ்யம் ஆதியில் எப்படி இருந்தது, அதை மீண்டும் கொண்டுவர என்ன செய்ய வேண்டுமென்பதை ஆலோசிக்க வேண்டும். நமக்கென்று ஒரு பண்பாடும், நாகரிகமும் உண்டு. இருக்கட்டுமே; அதையே ஏன் கட்டிக் கொண்டு அழ வேண்டுமென்றால், ‘நமது’ என்கிற வெறும் பாசத்துக்காக இப்படிச் சொல்லவில்லை. எத்தனையோ புராதன நாகரிகங்கள் காலப் பிரவாகத்தில் அடித்துக் கொண்டு போனபோதிலும், நம் பண்பாடும், நாகரிகமும் பாறாங்கல் போல எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாக நிலைத்திருப்பதாலேயே இதற்கு ஒரு விசேஷம் இருக்கத்தான் செய்கிறதென்று உணர்ந்து, அதையே நாமும் அநுசரித்து வாழவேண்டும். நாம் நாமாக இருக்க வேண்டும். எவ்வளவு பலம் நமக்கு உண்டோ அவ்வளவையும் நம்மை நிஜமான நம்மவர்களாக்குவதில் உபயோகப்படுத்த வேண்டும்.

#வெள்ளைக்கார வேஷத்திலே உள்ள நம்மவர்கள் சட்டம் செய்கிறார்கள்; அதற்கு அடிமையாக நாம் இருக்கிறோம் என்றால் அதில் சுதந்திரத்தின் சாரமே இல்லை. நம்முடைய சம்பிரதாயங்களை அநுசரிக்காதவர்களுக்கு வோட்டுக் கொடுத்து வரும் ராஜ்யம் அடிமை ராஜ்யம்தான். லௌகிக விஷயங்கள்கூட ஆத்ம சம்பந்தமாகவும் தெய்வ சம்பந்தமாகவும் இருந்த முறைதான் நம்முடையது. அதன்படி இருந்தால் உத்கர்ஷத்தை (உயர்வை) அடையலாம் என்பதை அறிந்து, நமக்கு எந்த மாதிரி ஸ்வதந்திரம் உண்டோ அதை, அந்த முறையை நிலை நிறுத்துவதிலேயே பயன்படுத்த வேண்டும். தர்மம், தொழில்முறைமுதலியவைகளை அறிந்தவர்களையும், அநுஷ்டானம், ஒழுக்கம் உடையவர்களையுமே ராஜ்ய நிர்வாகத்தில் வைத்துக் பார்க்கவேண்டும். அவர்கள் நம்முடைய சாஸ்திரப்படி தர்ம ராஜ்யத்தை ஸ்தாபித்து, இது நன்றாக நடக்கிறது என்று காட்டி, மற்ற தேசத்தவர்களும் இதை அநுசரிக்கச் செய்ய வேண்டும். அப்படி நடத்திக்காட்டுவதற்கு நம்முடைய சாஸ்திரங்களை யெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும். வழிகாட்டும் புஸ்தகங்கள் பல இருக்கின்றன. இவை இருப்பதால்தான் நானும் இதையெல்லாம் சொல்லவாவது முடிகிறது. இல்லாவிட்டால் எல்லாம் மறந்து போயிருக்கும். அவைகளைப் பார்த்து அந்தப்படி ஏன் நடக்கக்கூடாது? அந்தப்படி பண்ணுகிறவர்களை ஏன் சட்ட சபைக்கு அனுப்பக்கூடாது என்று எல்லா ஜனங்களும் ஆலோசித்துப் பார்க்க வேண்டும். நமக்குக் கொடுக்கப்படும் சுதந்திரத்தை இவ்விதம் பிரயோஜனப்படுத்தி, லோகத்தில் தர்மத்தை நடத்திக் காட்டி, மற்ற தேசத்தவர்களுக்கும் வழிகாட்டிப் பரமேசுவரனுடைய அநுக்ரஹத்தைப் பெற வேண்டும்.

தொடரும்...
பெரியவாள் திருவடிகளே சரணம்

🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏

#அகில_மியான்மா_தமிழ்_இந்து_ஆன்மிக_இதழ்"
(முகநூல்ஆன்மிக தகவல்கள் வெளியீடு பக்கம் -209)
ஸ்தாபகம் Established -2016

#မြန်မာနိုင်ငံလုံးဆိုင်ရာ_တမီလ်_ဟိန္ဒူ_ဘာသာရေး_အကြောင်းသိကောင်းစရာများ"
(ဖေ့စ်ဘွက် စာမျက်နှာ-၂၀၉)
(စတင်ဖြန့်ဝေချင်းစတင်တည်ထောင်သည့်နှစ် -2016)

#இப்படிக்கு:
🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏சிவஸ்ரீ.நா.கா.சுந்தரமூர்த்தி தலைமைசிவாச்சாரியரின் குமாரர்கள்,மியான்மா நான்காம் தலைமுறை அர்ச்சகர்கள்.
சிவாகமசெல்வர்,சிவஸ்ரீ.N.K.S. ஜெகதீஸ்வரன் குருக்கள்.B.A யாங்கோன்,மியான்மர்(2022/1/7).

11/11/2021

ஹரஹர சங்கர ஜெயஜெய சங்கர
#ஜெகத்குரு_திருவடிகளே_சரணம்

11/11/2021

#அன்பு

உலகத்தில் நாம் காண்கிற அன்பை மூன்று வகையாகப் பிரிக்கலாம். மகான்கள், யோக்கியர்கள், சத்தியசந்தர்கள், பரோபகாரிகள், ஞானிகள், அநுக்கிரக சக்திவாய்ந்த உத்தமர்கள் ஆகியோரிடம் அவர்களது குணத்துக்காக அன்பு ஏற்படுகிறது. பந்துக்களுடனும் சிநேகிதர்களுடனும் சேர்ந்து பழகுவதால் அவர்களிடம் ஒருவித அன்பு உண்டாகிறது. மூன்றாவது, ஒரு காரியத்துக்காக, லாபத்துக்காக சிலரிடம் அன்பு வைக்கிறோம். உதாரணமாக வியாபாரத்தில் சகாயம் செய்வார் என்பதற்காக ஒரு தனிகரிடம் அன்பு பாராட்டுகிறோம். சம்பளம் கொடுக்கிறார் என்பதால் யஜமானரிடம் அன்பாக இருக்கிறோம்.

#இந்த மூவகை அன்பும் உண்மையானதல்ல; சாசுவதமானதல்ல. யஜமானர், “நீ போய்விடு” என்றால் உடனேயே நம் அன்பும் போய்விடும். பழகினவர்கள் தூர தேசம் போனாலோ, காலகதி அடைந்தாலோ, வேறு விதத்தில் அவர்களுடன் பழக்கம் போய்விட்டாலோ நாளடைவில் அன்பும் போய்விடுகிறது. முதலில் பிரிவின்போது அழுத அழுகை அப்புறம் எப்படியோ மறைந்து விடுகிறது. உண்மையான அன்பானால், அந்த அழுகை என்றைக்கும் அப்படியேதானே இருக்க வேண்டும்? உத்தம புருஷர்களான மகான்களிடம் வைக்கும் அன்புகூட நிரந்தரமில்லைதான். மகான்களிடம் உத்தம குணம் குறைந்தால் — அல்லது குறைந்ததாக நமக்குத் தோன்றினாலே போதும் — அவரிடம் வைத்த அன்பும் குறைந்து விடுகிறது.

#மூவகை அன்பும் காரணத்தால் ஏற்பட்டது. எனவே தான் அவை நிரந்தரமாக இருக்கவில்லை. உத்தம புருஷர்களிடம் இன்ன குணம் இருக்கிறது என்பதால், அந்தக் குணத்தைக் காரணமாகக் கொண்டே அன்பு வைக்கிறோம். அதோடு அவர்கள் நம்மை உத்தாரணம் செய்வார்கள் (உய்விப்பார்கள்) என்ற சுய காரியமும் உள்ளூற இருக்கவே செய்யும்.

#இப்படியெல்லாம் எக்காரணமும் வியாஜமும் இன்றி பிரியமாக இருப்பதுதான் உண்மை அன்பு. ஒருவர் நம்மிடம் நெருங்கிப் பழகாவிட்டாலும் சரி, அவருக்கு ஆத்ம குணங்களும் அநுக்கிரக சக்தியும் இல்லாவிட்டாலும் சரி – அப்போதும் நாம் அவரிடம் மாறாத அன்பு வைத்தால் அதுவே உண்மையான அன்பு.

அப்படிப்பட்ட அன்பு யாருக்காவது இருக்கிறதா? ஒரே ஒருவருக்கு இருக்கிறது. ஸ்வாமிதான் அந்த ஒரே ஒருவர்.

ஸ்வாமிக்கு நம்மிடம் இருக்கும் அன்புக்கு ஒரு காரணமும் இல்லை. காரணத்தை அவர் பாராட்டுவதாக இருந்தால் நமக்கு ஒருவேளை சோறுகூடப் போடமாட்டார்! நம் பிழைகளையெல்லாம் பொறுத்துக் கொண்டு, நம்மை இந்த மட்டும் காப்பாற்றுபவர் அன்பு மயமான பரமேசுவரனே. இந்தப் பரமசிவ அன்பின் திரிபே உலகில் காணும் மூன்றுவகை அன்புகளும்.

அந்தக் காரணமற்ற பரமசிவ அன்பை நாமும் அப்பியசிக்க வேண்டும். தப்புச் செய்பவன் என்று காரணம் பார்த்து நாம் ஏன் ஒருவனை வெறுக்க வேண்டும்? நாமே தப்புச் செய்கிறோமே, அப்போதும் நம்மை நாமே உதறித் தள்ளுகிறோமா? அப்படியே மற்றவர்களிடத்திலும் இருக்க வேண்டும். மகா பெரியவர்களிடத்தில் அன்பு இருக்கவேண்டும். இன்னும் சொல்லப்போனால் அவனிடமே அதிக அன்பு வைக்க வேண்டும். “நாம் தப்புச் செய்வது போலவே இவனும் செய்கிறான். இவன் மனம் இவனை இப்படித் தூண்டுகிறது. அந்த மனத்தை நல்லதாக்க முயற்சி பண்ணுவோம்” என்று நினைக்க வேண்டும். ஈசுவர கிருபையால் அநுக்கிரக சக்தி பெற்றிருப்பவர்கள், அதைக் கொண்டு பாபியிடம் உள்ள பாபங்களை நிவிருத்தி பண்ணுவதையே முக்கியமாகக் கொள்ள வேண்டும்.

ஆரம்பத்தில் ஒரே ஒரு மனிதனிடம் காரணமில்லாத தூய அன்பை வைக்கப் பழகிவிட்டால், பின்னால் அதுவே நம்மை அன்பு மயமாக்கி, அந்த அன்பை எல்லோரிடமும் பரப்ப உதவி புரியும். குருவிடம் இவ்விதம் பயன் எதிர்பாராமல் பூரண அன்பு வைக்கப் பழகவேண்டும் என்பது பெரியோர்கள் ஏற்படுத்தியுள்ள விதி. குருவிடம் காரணம் பார்க்காமல், வியாஜம் இல்லாமல் அன்பு செலுத்த ஆரம்பிக்க வேண்டும். பின்பு அந்த அன்பு தருகிற ஆனந்தத்தில் பழகிப் பழகி லோகம் முழுவதும் குருவாக நினைத்து, சமஸ்தப் பிராணிகளிடமும் காரணமில்லாத சமமான அன்பு செலுத்த வேண்டும். லோகம் முழுவதும் அன்பை நிரப்பினால் அதுவே ஆனந்த நிலை, அதுவே பரிபூர்ண நிலை; அதுவே பரம சாந்தி.
தொடரும்...
பெரியவாள் திருவடிகளே சரணம்

🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏

#அகில_மியான்மா_தமிழ்_இந்து_ஆன்மிக_இதழ்"
(முகநூல்ஆன்மிக தகவல்கள் வெளியீடு பக்கம் -208)
ஸ்தாபகம் Established -2016

#မြန်မာနိုင်ငံလုံးဆိုင်ရာ_တမီလ်_ဟိန္ဒူ_ဘာသာရေး_အကြောင်းသိကောင်းစရာများ"
(ဖေ့စ်ဘွက် စာမျက်နှာ-၂၀၈)
(စတင်ဖြန့်ဝေချင်းစတင်တည်ထောင်သည့်နှစ် -2016)

#இப்படிக்கு:
🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏சிவஸ்ரீ.நா.கா.சுந்தரமூர்த்தி தலைமைசிவாச்சாரியரின் குமாரர்கள்,மியான்மர் நான்காம் தலைமுறை அர்ச்சகர்கள்.
சிவாகமசெல்வர்,சிவஸ்ரீ.N.K.S. ஜெகதீஸ்வரன் குருக்கள்.B.A யாங்கோன்,மியான்மர். (2021/11/11)

သျှီဝသျှရီ.N.K.S.ဂျေကသီးစ်ဝါရန်း ဆွာမီပဏ္ဏိသ်(ခ)ဦးတင်ရွှေ ဆရာတော် B:A.ရန်ကုန်မြို့။

21/10/2021

#அன்பும்_துன்பமும் :

#மனிதப் பிறவி எடுத்ததன் பயனே அன்பு செலுத்துவதுதான். அன்பு செலுத்துவதில் உள்ள ஆனந்தம் வேறு எதிலும் இல்லை. தனக்கென்று பொருள் சேர்ப்பதில், புகழ் சேர்ப்பதில், அலங்காரம் செய்து கொள்வதில், தாற்காலிகமாக இன்பம் கிட்டலாம். ஆனாலும் இவற்றில் உள்ளம் நிறைவு பெறுவதில்லை. உள்ளத்துக்கு நிறைவான ஆனந்தம் அன்பு செலுத்துவதிலேயே உண்டாகிறது. அன்பு செலுத்தும் போது நமக்கு எத்தனை கஷ்டம் வந்தாலும், தேக சிரமம் வந்தாலும் பணச்செலவானாலும் இதெல்லாம் தெரிவதேயில்லை. அன்பின் ஆனந்தமும் நிறைவுமே இந்தத் துன்பத்துக்கெல்லாம் மேலாகத் தெரிகிறது. அன்பு செலுத்தாத வாழ்க்கை வியர்த்தமே.

#அன்பு செலுத்தும்போது துன்பமே தெரிவதில்லை என்கிறேன். ஆனால் கடைசியில் ஒரு நாள் அன்பு செலுத்தப்பட்ட வஸ்துவே நமக்குப் பெரிய துன்பத்தைக் கொடுத்து விடுகிறது. நாம் ஒருவரிடம் அன்பு வைக்கிறோம். கடைசியில் ஒருநாள் அவர் நம்மைவிட்டுப் போயே போய் விடுகிறார். அல்லது நாமாவது அவரை விட்டு ஒருநாள் போகத்தான் போகிறோம். அப்போது, ‘ஐயோ, நம்மிடமிருந்து போய்விட்டாரே’ என்றோ, அல்லது ‘ஐயோ, நாம் இவரை விட்டுப் போகிறோமே’ என்றோ பெரிய துக்கம் உண்டாகிறது. இத்தனை காலமாக அன்பு தந்த ஆனந்தமும் நிறைவும் கடைசியில் பொய்யாகி, இந்தத் துன்பத்திலேயே முடிந்தது என்று மனசு கலங்குகிறோம். அன்பின் முடிவான பலன் துன்பம்தானா என்று பெரிய சலிப்பு உண்டாகி விடுகிறது. எத்தனைக்கெத்தனை அன்பு வைத்தோமோ, அத்தனைக்கத்தனை துன்பம் பிரிவின் போது உண்டாவதைப் பார்க்கிறோம். அன்பே செலுத்தாமல் சுய காரியவாதியாகவோ, அல்லது ஜடமாகவோ இருக்கிற ஜன்மாவே சிலாக்கியமானதோ என்று கூடத் தோன்றிவிடும். அப்படிப் பட்டவனுக்கு இந்தப் பிரிவுத் துன்பமே இல்லையல்லவா?

#ஆனால் உண்மையில் சுய காரியவாதி பாபத்தைத்தான் மூட்டைக் கட்டுகிறான். மனிதப் பிறவி எடுத்துவிட்டு, ஆனந்தம், நிறைவு முதலியன இல்லாமல் மரம், மட்டை, கல் மாதிரி ஜடமாக இருப்பதும் பிரயோஜனம் இல்லை.

#அன்பு செய்தாலும் முடிவில் துன்பம், அன்பு இல்லாமல் இருந்தாலோ வாழ்க்கையில் ருசியே இல்லை. இப்படியானால் என்ன செய்வது? மாறாத, மாளாத அன்பை உண்டாக்கிக் கொள்வதே வழி. நம்முடைய அன்புக்குரிய வஸ்து நம்மை விட்டு என்றும் பிரிந்து போகாததாக இருக்க வேண்டும். அப்படி ஒரு வஸ்து இருந்து, அதனிடம் அன்பை வைத்து விட்டால் நாமும் அதுவும் ஒருநாளும் பிரியப் போவதில்லை. எப்போதும் ஆனந்தமாக, நிறைவாக இருக்கலாம்.

#அதாவது, என்றும் மாறாமல் இருக்கிற ஒரே வஸ்துவான பரமாத்மாவிடம் அன்பைப் பூரணமாக வைத்துவிட வேண்டும். பரமாத்மா நம்மைவிட்டு ஒருபோதும் நீங்குவதில்லை. நம் சரீரத்திலிருந்து உயிர் பிரிந்தாலும், பிரிகிற உயிர் பரமாத்மாவிடமிருந்து பிரியாமல் அவரிடமே கலந்து விடும். அவரிடம் வைக்கிற அன்பே சாசுவதமாக இருக்க முடியும்.

#அழியாத பரமாத்மாவிடம் அன்பாக இருக்க வேண்டும் என்றால் வேறு யாரிடமும் அன்பாக இருக்கக்கூடாதா, மற்ற எல்லோரும் என்றோ ஒருநாள் நசிப்பவர்கள்தானே என்ற கேள்வி எழலாம். பரமாத்மாவிடம் அன்பை நாம் மேலும் மேலும் வளர்த்துக்கொண்டால் அவருக்கு வேறாக யாருமே இல்லை என்று தெரியும். மரணமடைகிற மனிதர்களாக எண்ணி, அதுவரை யாரிடமெல்லாம் துக்க ஹேதுவான அன்பை வைத்திருந்தோமோ அவர்களும்கூட இப்போது அழியாத பரமாத்ம ஸ்வரூபமாகவே தெரிவார்கள். இப்படி உலகம் முழுவதையும் பரமத்மாவாகவே பார்த்து அன்பு செலுத்த வேண்டும். அப்போது நம் அன்பு ஒரு நாளும் துக்கத்துக்கு மூலமாக ஆகாமலே இருக்கும்.

#எல்லோரையும் பரமாத்ம ஸ்வரூபமாகப் பார்த்து அன்பு செலுத்த முடியாவிட்டாலும், ஆத்ம குணம் நிறைந்த பெரியவர்கள், நல்ல ஞானமும் அருளும் நிறைந்த ஸத்குரு ஆகியோரைப் பரமாத்மாவாகக் கருதி, அன்பு செலுத்துவது சுலபமாக முடிகிறது. அப்படிப்பட்டவர்களிடம் அன்பு வைத்து ஆத்மார்ப்பணம் செய்துவிட்டால் போதும். அவர்கள் மூலமாக பரமாத்மா நமக்கு அநுக்கிரகம் பண்ணி விடுவார். நம் அன்புக்குப் பாத்திரமானவர் மரணமடைந்தாலும்கூட, ‘பரமாத்மா வேஷமாகப் போட்டுக் கொண்ட ஒரு சரீரத்துக்குத் தான் அழிவு உண்டாயிற்று. இப்போது சரீரி பரமாத்மாவோடு ஒன்றாகிவிட்டார்’ என்ற ஞானத்தோடு பிரிவுத் துன்பத்துக்கு ஆளாகாமல் இருப்போம். நம் அன்பு கொஞ்சம்கூடக் குறையாமல் அப்படியே எந்நாளும் நிற்கும். ஈச்வரனிடம், ஸாதுக்களிடம் இந்த அன்பை அப்யசிக்க ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக சமஸ்த ஜீவராசிகளுக்கும் விஸ்தரிக்க வேண்டும். அதுவே ஜன்மா எடுத்தன் பயன்.

தொடரும்...
பெரியவாள் திருவடிகளே சரணம்

🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏

#அகில_மியான்மா_தமிழ்_இந்து_ஆன்மிக_இதழ்"
(முகநூல்ஆன்மிக தகவல்கள் வெளியீடு பக்கம் -207 )
ஸ்தாபகம் Established -2016

#မြန်မာနိုင်ငံလုံးဆိုင်ရာ_တမီလ်_ဟိန္ဒူ_ဘာသာရေး_အကြောင်းသိကောင်းစရာများ"
(ဖေ့စ်ဘွက် စာမျက်နှာ-၂၀၇)
(စတင်ဖြန့်ဝေချင်းစတင်တည်ထောင်သည့်နှစ် -2016)

#இப்படிக்கு:
🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏சிவஸ்ரீ.நா.கா.சுந்தரமூர்த்தி தலைமைசிவாச்சாரியரின் குமாரர்கள்,மியான்மர் நான்காம் தலைமுறை அர்ச்சகர்கள்.
சிவாகமசெல்வர்,சிவஸ்ரீ.N.K.S. ஜெகதீஸ்வரன் குருக்கள்.B.A யாங்கோன்,மியான்மர். (2021/10/21)

သျှီဝသျှရီ.N.K.S.ဂျေကသီးစ်ဝါရန်း ဆွာမီပဏ္ဏိသ်(ခ)ဦးတင်ရွှေ ဆရာတော် B:A.ရန်ကုန်မြို့။

15/09/2021

★★★★★★★★★உ★★★★★★★★
#கோபம்_கொள்ளத்_தகுதி_ஏது? :

நமக்கு அநேக சந்தர்ப்பங்களில் கோபம் வருகிறது. முக்கியமாக இரண்டு விதங்களில் கோபம் வருகிறது. ஒருவன் ஒரு தப்புக் காரியம் செய்தால், அவனிடம் #கோபம் ஏற்படுகிறது. அல்லது ஒருவன் நம்மைத் தூஷித்தால் அவனிடம் கோபம் வருகிறது. யோசித்துப் பார்த்தால் எவரிடமும் இந்த இரண்டு விதங்களிலும் கோபப்படுவதற்கு நமக்கு யோக்கியதை இல்லை என்று தெரியும்.

#ஒருவன் தப்புப் பண்ணுகிறான் என்றால் கோபம் கொள்கிறோமே, அப்படியானால் நாம் தப்புப் பண்ணாதவர்களா? ஒருவனை பாபி என்று துவேஷிக்கும்போது, நாம் அந்தப் பாபத்தைப் பண்ணாதவன்தானா என்று நினைத்துப் பார்க்க வேண்டும். காரியத்தில் பண்ணாவிட்டாலும் மனஸால் பண்ணியிருப்போம். நாம் அநேக தப்புகளை, பாபங்களைப் பண்ணிக் கொண்டேதான் இருக்கிறோம். நம்மைவிடப் தப்பும் பாபமும் பண்ணுகிறவர்களும் இருக்கலாம். நம் மனசு ஏதோ ஓர் அளவுக்குப் பக்குவம் அடைந்திருப்பதால் நாம் இந்த அளவு பாபத்தோடு நிற்கிறோம். அவனுடைய மனசுக்கு இந்தப் பக்குவம்கூட வராததால் இன்னும் பெரிய பாபம் பண்ணுகிறான். நாம் செய்கிற தவறுகளை திருத்திக் கொள்வதற்கு எத்தனை பாடுபட வேண்டியிருக்கிறது? நம்மையும்விட மோசமான நிலைக்கு இறங்கிப் பாபங்களைச் செய்யப் பழகிவிட்ட இன்னொருத்தனின் மனசுக்கும் அதிலிருந்து மீளுவது சிரமமான காரியம்தான். அப்படிப்பட்டவனோடு நாம் சேர்ந்திருக்க வேண்டும் என்பதில்லை. அஸத் ஸங்கத்தைவிட்டு ஸத் ஸங்கத்தில் சேர்வதுதான் ஆத்மாபிவிருத்திக்கு முதல் படி என்று சகல சாஸ்திரங்களும் சொல்கின்றன. ஆனால் பாபிகளை நாம் வெறுப்பதிலும் அவர்களைக் கோபிப்பதிலும் பயனில்லை. அவர்களுடைய மனசும் நல்ல வழியில் திரும்ப வேண்டும் என்று பிரார்த்திப்பதொன்றே நாம் செய்ய வேண்டியது. ஈசுவராநுக்கிரகத்தில் நம்மில் யாருக்காவது அநுக்கிரக சக்தி கிடைத்திருந்தால், அதை இந்தப் பாவிகள் கடைத்தேறுவதற்கே உபயோகிக்க வேண்டும்.

#நம் கோபம் எதிராளியை மாற்றாது. அவனுக்கும் நம்மிடம் கோபத்தை வளர்ப்பதுதான் அதன் பலன். இரண்டு பக்கங்களிலும் துவேஷம் வளர்ந்துகொண்டே போகும். ஒருத்தன் தன் தப்பைத் தானே உணர்ந்து திருந்தச் செய்யாமல், நம் கோபத்துக்குப் பயந்து சரியாக செய்வதில் நமக்குப் பெருமையில்லை. இது நிலைத்தும் நிற்காது. அன்பினாலேயே பிறரை மாற்றுவதுதான் நமக்குப் பெருமை. அதுதான் நிலைத்து நிற்கும்.

#ஒருத்தன் பாபம் செய்ய அவனுடைய மனசு, சந்தர்ப்பம் இரண்டும் காரணமாகின்றன. நாம் பல பாபங்களைச் செய்ய முடியாமல் சந்தர்ப்பமே நம்மைக் கட்டிப் போட்டிருக்கலாம். எனவே, ஒரு பாபியைப் பார்க்கும்போது, ‘அம்பிகே! இந்தப் பாபத்தை நானும்கூடச் செய்திருக்கலாம். ஆனால் அதற்குச் சந்தர்ப்பம் தராமல் நீ கிருபை செய்தாய். அந்தக் கிருபையை இவனுக்குச் செய்யம்மா’ என்று பிரார்த்திக்க வேண்டும்.

#இரண்டாவதாக, நம்மை ஒருத்தர் துவேஷிக்கிறார் என்று கோபம் கொள்ள வேண்டியதில்லை. நாம் எத்தனை தூஷணைக்குத்தக்கவர் என்பது நம் உள்மனசுக்குத் தெரியும். ஒருகால் நம்மை தூஷிக்கிறவர் நாம் செய்யாத தவற்றுக்காக நம்மைத் திட்டிக் கொண்டிருக்கலாம். ஆனால் நாம் செய்த தவறுகள் அதைவிடப் பெரியவை என்றும் நம் அந்தரங்கத்துக்குத் தெரியும். நம் தவறுகளைக் கழுவிக்கொள்வதற்காக ஒவ்வொரு நாளும் அம்பாளிடம் பச்சாபத்துடன் அழ வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம். இந்த நிலையில் உள்ள நாம், பிறரைத் தப்புத் கண்டுபிடித்து கோபிக்க நியாயம் ஏது?

‘ #நாம் தப்பே செய்யவில்லை என்றால், அப்போது பிறரைக் கோபிக்கலாமா?’ என்றால் இப்படித் தப்பே பண்ணாத நிலையில் நாம் அன்பு மயமாகிவிடுவோம். அப்போது நமக்குப் பாவியிடமும் கருணை தவிர, எந்தப் பாவனையும் இராது. கோபமே உண்டாகாது. நாம் தப்புச் செய்தவர்கள் என்றாலோ, நமக்குப் பிறரைக் கோபிக்க யோக்கியதை இல்லை. தப்பே பண்ணாத நிலையிலே எல்லாம் அம்பாளின் லீலைதான் என்று தெரிகிறது. லீலையில் யாரை பூஷிப்பது, யாரைத் தூஷிப்பது? எப்படிப் பார்த்தாலும் கோபம் கூடாதுதான்.

#மநுஷ்யனைப் பாபத்தில் அழுத்துகிற இரண்டு பெரும் சக்திகள் காமமும் குரோதமும் என்றார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா. அதாவது நம் கோபத்தினால் நமக்கேதான் தீங்கு செய்து கொள்கிறோம். பெரும்பாலும் நம்முடைய கோபத்தை எதிராளி பொருட்படுத்துவதே கிடையாது. ஆத்திரப்படுவதால் நாமே நம் சரீரம், மனசு இரண்டையும் கெடுத்துக் கொள்வதோடு சரி. அன்பாக இருப்பதுதான் மனிதன் ஸ்வபாவமான தர்மம். அதுதான் ஆனந்தமும். அன்பு நமக்கும் ஆனந்தம், எதிராளிக்கும் ஆனந்தம். அன்பே சிவம் என்பார்கள். நாம் எல்லோரும் அன்பே சிவமாக அமர்ந்திருக்கப் பிரயாசைப்பட வேண்டும்.

🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏
தொடரும்...
பெரியவாள் திருவடிகளே சரணம்

#அகில_மியான்மா_தமிழ்_இந்து_ஆன்மிக_இதழ்"
(முகநூல்ஆன்மிக தகவல்கள் வெளியீடு பக்கம் -206 )
ஸ்தாபகம் Established -2016

#မြန်မာနိုင်ငံလုံးဆိုင်ရာ_တမီလ်_ဟိန္ဒူ_ဘာသာရေး_အကြောင်းသိကောင်းစရာများ"
(ဖေ့စ်ဘွက် စာမျက်နှာ-၂၀၆)
(စတင်ဖြန့်ဝေချင်းစတင်တည်ေထင်သည့်နှစ် -2016)

இப்படிக்கு:
🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏சிவஸ்ரீ.நா.கா.சுந்தரமூர்த்தி #தலைமைசிவாச்சாரியரின் குமாரர்கள்,மியான்மர் நான்காம் தலைமுறை அர்ச்சகர்கள்.
சிவாகமசெல்வர்,
சிவஸ்ரீ.N.K.S. #ஜெகதீஸ்வரன் குருக்கள்.B.A யாங்கோன்,
மியான்மர். (2021/09/15)

#သျှီဝသျှရီ.N.K.S.ဂျေကသီးစ်ဝါရန်း #ဆွာမီ_ပဏ္ဏိသ်(ခ)ဦးတင်ရွှေ #ဆရာတော် B:A.ရန်ကုန်မြို့။

Want your school to be the top-listed School/college in Yangon?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Yangon