18/07/2026
*பாடசாலை வரலாறு*
மலையகத்தின் தலைவாசலான எட்டியாந்தோட்டை நன்னகரிலே மனிதனை வழிப்படுத்தவும் நற்சமூகத்தை தட்டியெழுப்பவும், கல்விதனை வளர்தெடுக்கவும் தோற்றம் பெற்றதே எட்டியாந்தோட்டைக் கல்விச்சாலை. இது 1960 ம் ஆண்டுக்கு முன் தோற்றம் பெற்று தனியாரின் கொள்கை அடிப்படையில் பாதிரியார்களின் நிர்வாகத்தின் கீழ் செயற்பட்டது. இக்காலப் பகுதியில் 1-10 வரையான பெண்களுக்கான வகுப்புக்கள் எட்டியாந்தோட்டை நல்லாயன் கன்னியர் மடத்திலும், பாலர் வகுப்பு, முதலாம் வகுப்பு ஆகிய இரண்டு ஆண்டுகளுக்குமான வகுப்புக்களும் அதே நல்லாயன் கன்னியர் மடத்திலும் நடைபெற்று வந்தது. இவ்வாறே 2-10 வரையான ஆண்களுக்கான வகுப்புக்கள் புனித கபிரியல் கல்லூரியிலும் நடைபெற்று வந்தது. இக்காலப்பகுதியில் இதற்குப் பொறுப்பாகவும், அதிபராகவும் திரு. ரொட்டிரிகோ அவர்கள் பணியாற்றி வந்தார்.
இவ்வாறு தனியாரின் பொறுப்பில் அங்கம் வகித்த இப்பாடசாலைதனை 1962ம் ஆண்டு அரசாங்கம் பொறுப்பேற்றது. இதன்பின் ஆங்கில மொழிப் பிரிவில் இருந்த வகுப்புக்களை தமிழ்மொழி, சிங்களமொழி அடிப்படையில் பிரித்து 1-5 வரையான தமிழ் வகுப்புக்கள் புனித மரியான் தமிழ் வித்தியாலயத்தில் கலவன் பாடசாலையாகவும், 1-5 வரையான சிங்களப் பிரிவு வகுப்புக்கள் சிறிவர்தன சிங்கள வித்தியாலயத்திலும் ஆரம்பிக்கப்பட்டது. 6-10 வரையான ஆண்கள் வகுப்புக்கள் புனித கபிரியல் கல்லூரியிலும், 6-10 வரையான பெண்களுக்கான வகுப்புக்கள் நல்லாயன் கன்னியர் மடத்திலும் ஆரம்பிக்கப்பட்டது. இக்காலப் பகுதியில் திரு. ஏ.வி. கோமஸ், திரு. K. சுந்தரலிங்கம், திரு. P.C.M. விஜயசாமி ஆகியோர் தமிழ்மொழிப் பிரிவிற்கு அதிபர்களாக கடமையாற்றி வந்தனர். இவ்வாறே 1963ம் ஆண்டு 6 வரையிருந்த வகுப்புக்கள் 8ம் வகுப்பு வரை புனித மரியான் தமிழ் வித்தியாலயத்தில் உயர்த்தப்பட்டது. இக்காலப் பகுதியில் திரு. இராயப்பு அவர்கள் அதிபராகப் பணியாற்றி வந்தார்.
இவ்வாறு படிப்படியாக வளர்ந்த இப்பாடசாலையில் 1964ம் ஆண்டு மார்சு 15ம் திகதி திரு. ஆறுமுகம் அவர்கள் பதவியேற்றார். இவ்வாறு நான்கு ஆண்டுகளாக இவர் அதிபராகப் பணியாற்றிய பின் 1968-07-03 இல் திரு. செல்வநாயகம் அவர்கள் அதிபராகப் பதவியேற்றார். இதன் பின் 1969-01-02 இல் திரு. ஏ. சிவப்பிரமணியம் அதிபராக பதவியேற்று, தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சேவையாற்றி வந்தார். இதன் பின் 1974-01-08 இல் திரு. அ. கனகசிங்கம் அவர்கள் அதிபராகப் பதவியேற்றார்.
இக்காலப்பகுதியில் 8ம் வகுப்பு வரை உயர்தப்பட்ட வகுப்புக்கள் நாளடைவில் 9ம் வகுப்பு வரை உயர்த்தப்பட்டன. இதே நேரம் மாணவர்களினதும், ஆசிரியர்களினதும் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டது. இதனால் பாடசாலையில் இட நெருக்கடிப் பிரச்சினை ஏற்பட்டது. இப்பிரச்சினையினைத் தீர்கும் முகமாக, மாணவர்களின் கல்வி வளர்சிக்குத் தேவையான வசதிகளை உள்ளடக்கியதாகப் புதிய கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்கு ஆலோசனை முன்வைக்கப்பட்டது. இதன் நன்மையாகவே 1985-1986 ஆண்டு காலப்பகுதியில் பன்முகப்படுத்தப்பட்ட வரவு, செலவுத்திட்ட நிதியிலிருந்து புதிய மாடிக்கட்டிடத்திற்கு அத்திவாரம் இடப்பட்டு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இக்கட்டிடத்தினை எழுப்புவதற்கான இப்பிரதேச மக்களின் நலன்கருதி எட்டியாந்தோட்டைப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. கே. வின்சன்ட் பெரேரா அவர்களால் பாராளுமன்றத்தில் ஆலோசனை முன்வைக்கப்பட்டதுடன் இன்னும் பல உதவிகளையும் வழங்கியமை என்றும் குறிப்பிடப்பட வேண்டியதொன்றாகும். இதன் பெறுபேறாக எழுந்த அலிவத்த எதும் இடத்தில் அமைக்கப்பட்ட புதிய மாடிக் கட்டிடம் எட்டியாந்தோட்டைப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. கே. வின்சன்ட் பெரேரா அவர்களின் அழைப்பின் பேரில் மட்டக்கிளப்பு பாராளுமன்ற முதலாவது அங்கத்தவரும், பிரதேச அபிவிருத்தி இந்துக் கலாசார அலுவல்கள், தமிழ்மொழி அமுலாக்கல் அமைச்சருமாகிய மாண்புமிகு செல்லையா இராசதுரை அவர்களால் 1986-09-06 ம் திகதி திறந்து வைக்கப்பட்டது. இங்கு 10-11 வகுப்புக்கள் இடம்பெற்றன.
காலம் செல்ல, ஆண்டு 1-9 வரை காணப்பட்ட வகுப்புக்களும் புதிய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இக்காலப்பகுதியில் இங்கு திரு. P.C.M. விஜயசாமி அவர்கள் அதிபராகக் கடமையாற்றினார். இவரது சேவைக்குப் பின் 1988-01-13 இல் திரு. ஆர்.ஜீ.ஆர். கலாநேசன் அவர்கள் அதிபராகப் பதவியேற்றார். இக்காலகட்டத்தின் பின் திரு. அரசரட்ணம் அவர்கள் 30 ஆசிரியர்களையும் கொண்டு பாடசாலையை இனிதே நடாத்தி வந்தார். இவ்வாறு இவரின் சேவையின் காரணமாக 1993-10-08 இல் முதன்முதலில் பாடசாலையில் உயர்தர வகுப்பு, கலைப்பிரிவில் ஆரம்பிக்கப்பட்டது.
இவ்வாறு பாடசாலை வளர்ச்சியடைய, நாளடைவில் மீண்டும் ஒரு புதிய கட்டிடம் தேவைப்பாடாக இருந்தது. இதனால் அதிபரின் பெரும் முயற்சியின் காரணமாக 1993ம் ஆண்டு புதிய மாடிக் கட்டிடத்திற்கு அத்திவாரம் இடப்பட்டு 1995ம் ஆண்டு புதிய 2-மாடிக்கட்டிடம் நிறைவு படுத்தப்பட்டது. இவ்வாறான நிகழ்ச்சிக்கு முன்னதாக இருந்த அதிபர்களின் இடமாற்றம் காரணமாக 1995 ம் ஆண்டு திரு. என். கணேசலிங்கம் அவர்கள் அதிபராக பதவியேற்று தனது சேவையினை தொடர்ந்தார். இவ்வாறு இவரின் நற் சேவையினாலும், அயராத உழைப்பினாலும் பாடசாலையில் பல முன்னேற்றங்களை ஏற்படுத்தி வருகின்றார். இது மட்டுமின்றி இவரது உழைப்பின் காரணமாக பாடசாலையின் இட நெருக்கடியைக் குறைக்கும் பொருட்டு 1998ம் ஆண்டு புதிய மூன்று மாடிக்கட்டிடத்திற்காக அத்திவாரம் இடப்பட்டு, 2000 மிலேனிய ஆண்டில் நிறைவு பெற்றது.
இது மட்டுமின்றி, 1998ம் ஆண்டு பாடசாலையில் புதியதோர் திருப்பமாக எத்தனையோ கஸ்டத்தின் மத்தியில் உயர்தர வர்த்தகப்பிரிவு இவ் அதிபரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ்வாறு இவ் ஐந்து ஆண்டுகளாக சேவை மனப்பான்மையுடன் தனது சேவையை திறம்பட ஆற்றி வரும் இவ் அதிபரால் எமது எட்டியாந்தோட்டை புனித மரியான் தமிழ் மகா வித்தியாலயம் பல வெற்றிச் சாதனைகளை நிலைநாட்டி இருக்கின்றமை மிகையாகாத ஒன்றாகும்.
🛑👉👉👉
👉அன்பான பழைய மாணவர்களே,
எமது பாடசாலையின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக ஒவ்வொரு வாரமும் எமது பாடசாலையின் வரலாறு தொடர்பான முக்கியமான கேள்விகளை முன்வைக்க எதிர்பார்க்கிறோம்.
இந்த விடயங்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்த பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் வரலாற்றை அறிந்தவர்கள் தங்களின் பதில்களையும் மேலதிக தகவல்களையும் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
🛑இந்த வாரத்தின் முதலாவது வரலாற்றுக் கேள்வி:
🎓 எமது பாடசாலையில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான முதல் மாணவர் யார்?
எந்த வருடம்? அவர் எந்த Batch?
தெரிந்தவர்கள் தங்களின் நினைவுகள், ஆதாரங்கள் மற்றும் தகவல்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
"எமது பாடசாலையின் வரலாறு – எமது அனைவரின் பொறுப்பு"