10/11/2025
என் அல் இல்மியாவின் அன்புப் பிள்ளைகளே!
இரு வருடங்கள்…
இரு வருடங்கள் முழுமையாய்
உங்கள் கனவுகளை, காலங்களை, துள்ளித் திரியும் பள்ளிப் பருவத்தை புத்தகங்களில் புதைத்தீர்கள்.
காலை விடியலுக்கு முன்னே எழுந்து,
இரவு நட்சத்திரங்கள் மறையும் வரை
தனிமையில் பேனாவுடன் உரையாடினீர்கள்.
கூத்து, கும்மாளம், விளையாட்டுத் திடல்,
நண்பர்களின் சிரிப்பு , அரட்டை,
தூக்கத்தின் இனிய கனவுகள்,
குடும்பத்துடன் குதூகலித்த மாலை நேரங்கள்—
எல்லாவற்றையும் துறந்து,
அம்மாவின் கண்ணீரையும்,
அப்பாவின் மௌனப் புன்னகையையும்
நெஞ்சில் சுமந்து,
ஒரு எதிர்காலத்தை நெய்தீர்கள்.
இரு வருடங்களாய்
ஒவ்வொரு நாளும் பக்கங்களாய் உங்கள் வியர்வையால் நனைந்தது,
ஒவ்வொரு கோடும் உங்கள் கண்ணீரால் மங்கியது,
ஒவ்வொரு பயிற்சித் தாளும்
உங்கள் தனிமையின் கை ரேகையாய் மாறியது.
இன்று…
இன்று அந்த இரு வருடங்களின்
பொன் நூல் முடிச்சு போடும் நாள்!
இன்று உங்கள் பேனா
உங்கள் கனவுகளை
உலகுக்குக் காட்டும் நாள்!
என் பிள்ளைகளே,
அச்சம் வேண்டாம்.
உங்கள் நெஞ்சில்
இரு வருடங்களின் அறிவுத் தீப்பொறிகள்
இன்னும் சிவந்து எரிகின்றன.
அவை உங்களை வழிநடத்தும்.
கவனமாய் எழுதுங்கள்.
தைரியமாய் எழுதுங்கள்.
ஒவ்வொரு விடையையும்,
உங்கள் பெற்றோரின் பிரார்த்தனை,
ஆசிரியர்களின் நம்பிக்கை, அதுவே
எங்கள் பாடசாலையின் பெருமை.
துணிந்து நில்லுங்கள், என் செல்வங்களே!
இன்று உங்கள் நாள்!
இன்று உங்கள் வெற்றியின் முதல் பக்கம்!
அல் இல்மியா உங்களோடு இருக்கிறது—
ஒவ்வொரு ஆசிரியரின் மனம் நிறைந்த ஆசியும்,
ஒவ்வொரு நண்பரின் புன்னகையும்,
ஒவ்வொரு பெற்றோரின் ஆனந்த கண்ணீரும்
உங்கள் பின்னே நிற்கின்றன.
வெல்வீர்கள்!
நிச்சயம் வெல்வீர்கள்!
வெற்றி உங்கள் கைகளில்
பொன் மலராய்ப் பூக்க காத்திருக்கிறது!
எல்லா மாணவர்களுக்கும்
எங்கள் இதயம் நிறைந்த வாழ்த்துகள்!
எழுதுங்கள்…
உலகை ஆளப்போகும் வாரிசுகளே
இன்று எழுதுங்கள்! சரித்திரத்தின் வெற்றியை.....
வெல்க! வெல்க! வெல்க!
அல் இல்மியாவின் பிள்ளைகளே,
வெல்க
வாழ்த்துக்கள்.!!!
அல் இல்மியா .......
வெல்பொதுவெவ.