18/01/2026
மனம் மீளும் நேரம் - தொடர் 9
=============
✒️ அம்னா அஸ்வர் (ஊக்குவிப்புப் பயிற்றுநர்: சேப்பிங் லைவ்ஸ், வாழ்வியல் மேம்பாட்டு நிறுவனம்)
மனஉறுதியானது ஈருலக வெற்றிக்கான அடித்தளமாக காணப்படுகிறது. பொதுவாக நம் ஒவ்வொருவருக்கும் இயல்பாகவே எதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆம், நாம் அனைவரும் இம்மை,மறுமை ஆகிய ஈருலகிலும் வெற்றி பெற முயற்சிக்க வேண்டும். ஆனால், வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை மட்டும் போதுமா? இல்லை. வெற்றி என்ற இலக்கை அடைவதற்கு அதற்கான சரியான பாதையை முறையாகத் தேர்ந்தெடுத்து அதில் நிலைத்திருந்து பயணிக்க வேண்டும். பாதையைத் தேர்ந்தெடுத்துவிட்டால் பயணம் இலகுவாகிவிடுமா? இல்லை. பயணம் தொடங்கிய பின்னர் தான் பல்வேறு சோதனைகளும், எதிர்மறை எண்ணங்களும்,தடைகளும், மனச் சோர்வுகளும் நம்மை எதிர்கொள்கின்றன. அத்தகைய நேரங்களில் எமது மனதை திடப்படுத்திக் கொள்ளத் தயாராக வேண்டும் .
இதற்கான முதற்கட்டமாக இறைவனிடம் முழு நம்பிக்கையுடன் பிரார்த்தனை புரிவது மிக அவசியமாகும். 'யா அல்லாஹ்! எனது நெஞ்சை விரிவாக்கி, திடப்படுத்துவாயாக!' என்ற இந்த துஆவை தினமும் பிரார்த்தனைகளில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். மன அழுத்தம், சோர்வு, பயம் போன்ற அனைத்தையும் நீக்கி சிந்தனையில் தெளிவையும், செயல் துணிவையும் அளிப்பது அல்லாஹ்வின் உதவியினால் மாத்திரமே சாத்தியம் ஆகும். அடுத்து, நம்மை நாமே புரிந்துகொள்ள நேரம் ஒதுக்கிக்கொள்ளல். சுய விசாரணை (முஹாசபா) செய்து கொள்வது ஒரு முஃமினின் (நம்பிக்கையாளரின்) முக்கிய பண்பாகும். எமது செயல்கள், நோக்கங்கள், தவறுகள் ஆகியவற்றை சிந்தித்துப் பார்ப்பது இறைவனுடனான நெருக்கத்தை அதிகரிக்கவும், ஈருலக வாழ்வில் வெற்றி பெறவும் பெரிதும் துணைபுரிகிறது.
உடல் வலிமை குறைந்தவர்கள் கூட மனவலிமையின் காரணமாக மாபெரும் வெற்றிகளை அடைந்திருக்கிறார்கள். மன வலிமை உடலின் இயக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. 'என்னால் முடியும்' என்ற உறுதியான நம்பிக்கை மனதில் உருவாகும் போது உடல் தானாகவே அதற்கான முயற்சியை ஆரம்பிக்கிறது. அந்த இயக்கம் மிகவும் வலிமையானதாகவும் தொடர்ச்சியானதாகவும் மாறிவிடுகிறது.
பண பலமும், உடற் பலமும் கூட மனபலத்துடன் போட்டியிடும்போது தோல்வியடைவதைக் காண்கிறோம் அல்லவா?
'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பார்கள். மனதை அலங்கரிப்பதற்காக எவ்வளவு தியாகம் செய்ய முடியுமோ, அதற்கும் அப்பால் தியாகம் செய்யத் தயாராக வேண்டும். அப்போதுதான் வெற்றி பெறுவதற்கான பாதை நமக்கு இலகுவாக மாறுகிறது.
அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான்:
'நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது.' (அல்-குர்ஆன் 94:5 )
ஒரு செயல் கடினமான செயலாகத் தோன்றினாலும், அதற்குப் பின்னால் வெற்றிக்கான பெரிய ரகசியம் மறைந்திருக்கிறது.
ஆகவே, மனதை திடப்படுத்திக்கொள்ளத் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். மனஉறுதியை வளர்த்துக்கொள்ள உதவக்கூடிய நல்ல உறவுகளுடன் உறவை பலப்படுத்தில் கொள்ளல், நேர்மறையான முறையில் ஊக்குவிக்கும் நபர்களுடன் தொடர்பில் இருத்தல், மன உறுதி கொண்ட நபர்களின் வாழ்க்கை வரலாறுகள் மற்றும் பயனுள்ள புத்தகங்களை அதிகமாக வாசிப்பதனுடாகவும்
மனதை திடப்படுத்தி கொண்டு ஈருலக வாழ்வின் வெற்றியை நோக்கி புறப்படுவோம்!
(மனம் மீளும்...)