04/01/2026
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் ஒஸ்மானியாவில் சிரமதான நடவடிக்கை – பல்வேறு சிரமதான பொருட்களும் அன்பளிப்பு
யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் ஏற்பாட்டில் பதில் அதிபர் எம்.எஸ்.எப்.சப்னா அவர்களின் தலைமையில் சிரமதான நடவடிக்கை (30) இடம்பெற்றது.
பாடசாலை விடுமுறை காலப்பகுதியான நிலையில் பாடசாலையின் புதிய தவணை ஆரம்பத்திற்கு முன்னர் சிரமதானம் செய்து பாடசாலையை கல்வி நடவடிக்கைகளுக்கு ஏற்ப தயார்ப்படுத்தும் முகமாக மேற்படி சிரமதானம் பாடசாலை அதிபர் அவர்களின் கோரிக்கையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மேற்படி அமைப்பினால் பாடசாலையின் தொடர் தூய்மைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக பல்வேறு உபகரணங்களும் கையளிக்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.
இச் சிரமதான நடவடிக்கையில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஊடகப்பிரிவு
யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி
2026.01.04
24/12/2025
தரம் ஒன்று மாணவர் அனுமதி – பள்ளிவாசல் நிர்வாகங்களின் ஒத்துழைப்பை கோரி பதில் அதிபர் சப்னா பகிரங்க அழைப்பு
எமது பாடசாலையின் 2026ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்று புதிய மாணவர் அனுமதி தொடர்பான தற்போதைய நிலமைகள், விண்ணப்பித்துள்ள புதிய அனுமதிக்கான மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தளவில் காணப்படுகின்றமை, மாணவர்களுக்கு நன்கொடையாளர்களினால் வழங்கப்படவுள்ள உதவித்திட்டங்களின் விபரங்கள் தொடர்பிலும், புதிய மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க ஒவ்வொரு பள்ளிவாசல்களும் தங்களது மஹல்லா எல்லைகளுக்குள் வசிக்கும் மஹல்லாவாசிகளில் இன்னும் பாடசாலைகளில் இணையாதவர்களை இனங்கண்டு எமது பாடசாலையில் இணைக்கும் செயற்பாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று, பள்ளிவாசல்களின் உதவியை நாடி மேற்படி விபரங்களை விபரித்து கடிதம் ஒன்றை பதில் அதிபர் ஜனாபா எம்.எஸ்.எப்.சப்னா அவர்கள் பின்வரும் பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கு தனது பிரதிநிதி ஊடாக நேரடியாக (24) அனுப்பிவைத்துள்ளார்.
1. சின்னப் பள்ளிவாசல்
2. அபூபக்கர் பள்ளிவாசல்
3. பெரிய பள்ளிவாசல்
4. சின்ன மொஹிதீன் பள்ளிவாசல்
5. பெரிய மொஹிதீன் பள்ளிவாசல்
6. காமால் பள்ளிவாசல்
7. நூர் பள்ளிவாசல்
8. சிவல பள்ளிவாசல்
9. முஹம்மதிய்யா ஜும்ஆ மஸ்ஜித்
10. அல்லாப் பிச்சை பள்ளிவாசல்
மேற்படி பள்ளிவாசல்களின் ஒத்துழைப்பைக் கோரும் பதில் அதிபர் எம்.எஸ்.எப்.சப்னா அவர்களின் கடிதம் முன்னாள் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் பழைய மாணவர் சங்கத்தின் கணக்காய்வாளருமான செல்வன் எஸ்.எம்.சசான் அவர்களினால் பள்ளிவாசல் பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டன.
பாடசாலையின் கடிதங்களைப் பெற்றுக் கொண்ட நிர்வாகத்தினர், பள்ளிவாயில் பிரதம இமாம்கள் உரிய நடவடிக்கைகளை தமது பள்ளிவாசல் மஹல்லா எல்லைக்குள் மேற்கொள்வதாகவும், தரம் ஒன்றுக்கான புதிய மாணவர்களை அதிகரிக்கச் செய்ய முடியுமான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் பதில் அதிபர் சார்பில் விஜயம் செய்திருந்த பிரதிநிதியிடம் உறுதியளித்துள்ளமை விசேட அம்சமாகும்.
ஊடகப்பிரிவு
யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி
2025.12.24
24/12/2025
பதில் அதிபர் எம்.எஸ்.எப்.சப்னா – முஸ்லிம் மாநகரசபை உறுப்பினர்கள் சந்திப்பு
யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியின் பதில் அதிபர் ஜனாபா எம்.எஸ்.எப்.சப்னா அவர்களுக்கும் யாழ்ப்பாணம் மாநகரசபையின் முஸ்லிம் மாநகரசபை உறுப்பினர்களுக்குமிடையிலான விசேட சந்திப்பு இன்று (24) அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இச் சந்திப்பில் எமது பாடசாலையின் 2026ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்று புதிய மாணவர் அனுமதி தொடர்பான தற்போதைய நிலமைகள் தொடர்பிலும், விண்ணப்பித்துள்ள புதிய அனுமதிக்கான மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தளவில் காணப்படுகின்றமை தொடர்பிலும், மாணவர்களுக்கு நன்கொடையாளர்களினால் வழங்கப்படவுள்ள உதவித்திட்டங்கள் தொடர்பிலும், இன்னும் மாணவர்கள் அனுமதியை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் அதிபர் முஸ்லிம் மாநகரசபை உறுப்பினர்களுக்கு தெளிவுபத்தினார்.
அதிபரின் தெளிவுபடுத்தல்களை தொடர்ந்து முஸ்லிம் மாநகரசபை உறுப்பினர்கள் கூட்டாக கருத்து வெளியிடுகையில் சமூகத்தின் மிக முக்கியமான இரு முஸ்லிம் பாடசாலைகளில் ஒன்றான ஒஸ்மானியாக் கல்லூரியின் எதிர்காலம் தொடர்பில் அக்கறையுடன் செயற்படுவதாகவும், 2026 ஆம் ஆண்டுக்கான புதிய தரம் ஒன்று மாணவர் அனுமதி விண்ணப்பங்களை அதிகரிக்கச் செய்வதற்கு தங்களால் முடியுமான நடவடிக்கைகளையும், சமூக ஊக்கப்படுத்தல்களையும் வழங்குவதாகவும் குறிப்பிட்டனர்.
மேலும் உறுப்பினர்கள் குறிப்பிடுகையில் இதுவரையான காலப்பகுதிகளில் இவ்வாறான முக்கிய விவகாரங்கள் தொடர்பிலும் முன்பிருந்த அதிபர்களால் மக்கள் பிரதிநிதிகளை அணுகி முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும், தற்போது மாணவர்கள் இணைப்பை அதிகரிக்க பதில் அதிபர் தம்மை அழைத்து ஒத்துழைப்பை கோரியிருப்பது வரவேற்கத்தக்கது என்றும், அதிபரின் கோரிக்கைக்கு எம்மால் முடிந்த ஒத்துழைப்புக்கள் தேவையான விடயங்களில் அவ்வப் போது கோரும் போது நிச்சயம் வழங்குவோம் என்றும் உறுதியளித்தனர்.
மேற்படி விடயம் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளான மாநகரசபை உறுப்பினர்களின் ஆதரவினையும், ஒத்துழைப்புக்களையும் கோரும் வகையில் அதிபரால் கோரிக்கை கடிதங்களும் மாநகரசபை உறுப்பினர்களிடம் தனித்தனியாக கையளிக்கப்பட்டன.
மேற்படி விசேட சந்திப்பில் யாழ்ப்பாணம் மாநகரசபை உறுப்பினர்களான கௌரவ பி.எஸ்.எம்.சரபுலனாம், கௌரவ எம்.றொயிஸ், கௌரவ ஆர்.எப்.றிஸ்லா மற்றும் கௌரவ என்.எம்.அப்துல்லாஹ் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஊடகப்பிரிவு
யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி
2025.12.24
23/12/2025
யாழ் ஒஸ்மானியாவில் சர்வதேச அறபு மொழித் தினம்
கல்வி அமைச்சின் சுற்றுநிரூபத்திற்கு அமைவாக தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரியில் சர்வதேச அறபு மொழித் தினம் பாடசாலையின் பதில் அதிபர் ஜனாபா எம்.எஸ்.எப்.சப்னா அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக (22) மஹ்மூத் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் மாணவர்களின் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன், மாணவர்களின் திறமைகளும், ஆற்றல்களும் சிறப்பாக வெளிக்கொணரப்பட்டது. இந் நிகழ்வுக்காக மாணவர்களை தயார்ப்படுத்திய இஸ்லாம் பாட ஆசிரியர் மற்றும் வகுப்பாசிரியர்களை பாடசாலை சார்பில் பாராட்டுகின்றோம்.
இந் நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஊடகப்பிரிவு
யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி
2025.12.23
23/12/2025
ஊடக அறிக்கை,
யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி.
யாழ்ப்பாணம்.
2025.12.22
2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்று – புதிய மாணவர் அனுமதி தொடர்பானது
எமது பாடசாலையின் 2026ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்று புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இது வரையில் தங்களது பிள்ளைகளை பாடசாலையில் இணைத்துக் கொள்வதற்காக தங்களது விண்ணப்பங்களை வழங்காதவர்கள் அதிபர் அலுவலகத்தில் மாணவர் அனுமதி விண்ணப்பங்களைப் பெற்று எதிர்வரும் 2025.12.29 ஆம் திகதி திங்கட் கிழமைக்கு முன்னர் பூர்த்தி செய்து, பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ் பிரதியுடன் இணைத்து உடனடியாக சமர்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
மேற்படி விண்ணப்பங்களை ஏற்கும் இறுதித்திகதியின் பின்னர் பெற்றோர் சந்திப்பு இடம்பெற்று தேசிய மட்ட தரம் ஒன்று புதிய மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான வேலைத்திட்டங்களுக்கு அமைவாக உரிய காலப்பகுதியில் எமது பாடசாலை மாணவர்களையும் உள்ளீர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
எமது பாடசாலையில் இணைந்து கொள்ளும் புதிய 2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்று மாணவர்களுக்கு பின்வரும் உதவித்திட்டங்களை வழங்க பல்வேறு தரப்பினரும் முன்வைந்துள்ளனர்.
உம்மு சாரா பவுண்டேசன்
1. பாடசாலை சீருடைத் துணி – 1 செட்
2. பாடசாலை சப்பாத்து – 1 செட்
செரண்டிப் கல்வி அபிவிருத்தி நிறுவனம்
1. பாடசாலை புத்தகப்பை – 1
2. கல்வி ஊக்குவிப்பு கொடுப்பனவு (முதல் 40 மாணவர்களுக்கே இப் பண உதவிக் கொடுப்பனவு)
தரம் ஒன்று புதிய மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்கும், பாடசாலையின் கல்வி முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் சமூக செயற்பாட்டாளர்களும், பொது அமைப்புக்களும் இது போன்று முன்வந்துள்ள நிலையில் தரம் ஒன்றில் இணையவுள்ள எமது சிறார்கள் இஸ்லாமிய மார்க்க சூழலில் தமது பாடசாலைக் கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பத்திலிருந்தே கற்கக் கூடிய வகையில் வரலாற்றையும், பாரம்பரியங்களையும் கொண்ட பல்வேறு சமூக ஆளுமைகளை உருவாக்கிய எமது ஒஸ்மானியாக் கல்லூரியிலேயே இணைக்கப்படுவதை ஒவ்வொரு பெற்றோரும் உறுதிப்படுத்துமாறும், அதற்காக சமூக ஆர்வலர்கள் வழிகாட்டுமாறும் பகிரங்கமாக கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
நன்றி.
இவ்வண்ணம்.
எம்.எஸ்.எப்.சப்னா,
பதில் அதிபர்
யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி
06/12/2025
இராணுவத்தின் பங்களிப்புடன் ஒஸ்மானியாக் கல்லூரி வளாகம் துப்பரவாக்கல் பணிகள் முன்னெடுப்பு
டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சாபிநகர் கிராம மக்கள் தங்குவதற்கான இடைத்தங்கல் முகாமாக யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி கடந்த 2025.11.27 – 2025.12.01 ஆம் திகதி வரை செயற்படுத்தப்பட்டது.
அந்த வகையில் இடைத்தங்கல் முகாமாக செயற்பட்ட பாடசாலையின் வெளிப்புற சுற்றாடலை முழுமையாக துப்பரவு செய்யும் வேலைத்திட்டமானது யாழ் முஸ்லிம் கல்வி அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில் பாடசாலை பதில் அதிபர் எம்.எஸ்.எப்.சப்னா அவர்களின் தலைமையில் இராணுவ தலைமை பொறுப்பதிகாரி துசாந்த ஜெயவர்த்தன அவர்களின் தலைமைத்துவத்தில் 14ஆம் கஜபாகு இராணுவ பிரிவு மற்றும் நாவாந்துறை இராணுவ படையணியும் இணைந்து கடந்த (2) முன்னெடுக்கப்பட்டது.
இம் மாபெரும் சிரமதான நடவடிக்கையின் ஊடாக பாடசாலையின் வளாகம் முழுமையாக துப்பரவு செய்யப்பட்டது. குறிப்பாக பாடசாலையின் முன்றல் புற்கள் வெட்டப்பட்டு முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டது. பாடசாலை உள்ளக மைதான மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டன, முறிந்த மரங்கள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டன. இவ்வாறு பாடசாலை வெளிப்புறம் முழுமையாக சிரமதான நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டன.
இச் சிரமதான நடவடிக்கையில் யாழ்ப்பாணம் மாநகரசபை உறுப்பினர்களான கௌரவ என்.எம்.அப்துல்லாஹ், கௌரவ எம்.றொயிஸ், பாடசாலையின் ஆசிரியர்களான ரணித்தா, பர்ஜானா, ரிசானா, பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களான ஜனாப்.சியாத், ஜனாப்.ஆசாத், ஜனாப் றிப்தி, பழைய மாணவர் சங்க உறுப்பினர் எஸ்.சசான், யாழ் முஸ்லிம் கல்வி அபிவிருத்திக்குழு உறுப்பினர்களான ஜனாப் நிம்ரூஸ், ஜனாப் றொக்கிஸ், ஒரு சில பெற்றோர்கள், ஒரு சில மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இச் சிரமதான நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கான காலை நேர டீ மற்றும் சிற்றூண்டி மதிய நேர குளிர்பானம் என்பவற்றை யாழ் முஸ்லிம் கல்வி அபிவிருத்திக்குழு வழங்கியிருந்தது. மாநகரசபை உறுப்பினர் அப்துல்லாவின் ஏற்பாட்டில் பாடசாலை முன்வளாக குப்பைகள் மாநகர உழவு இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.
பாடசாலை உள்ளக மைதானம் மற்றும் வளாக குப்பைகள் தனியார் உழவு இயந்திரம் வாடகைக்கு அமர்த்தப்பட்டு 4 லோடுகளில் அகற்றப்பட்டது. தனியார் வாகனத்திற்கான கொடுப்பனவு 14 000 ரூபாய் (பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு செயலாளர் 5000.00, பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர் றிப்தி 5000.00 மற்றும் யாழ் முஸ்லிம் கல்வி அபிவிருத்திக்குழு 4000.00) என மூவரது பங்களிப்பில் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேற்படி சிரமதான நடவடிக்கைக்கு உடனடி ஏற்பாட்டை செய்த யாழ் முஸ்லிம் கல்வி அபிவிருத்திக்குழு உறுப்பினர்களுக்கும், சிரமதானத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் பாடசாலை கல்விச் சமூகம் சார்பில் பாடசாலையின் பதில் அதிபர் என்ற வகையில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
எம்.எஸ்.எப்.சப்னா
பதில் அதிபர்
யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி
2025.12.06
01/12/2025
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
எமது பாடசாலை இடைத்தங்கல் முகாமாக செயற்பட்டு இன்று அங்கிருந்த குடும்பங்கள் அனைவரும் அவரவர் வீடுகளுக்கு பாதுகாப்பாக சென்றுள்ளார்கள். தற்போது ஏற்பட்ட அனர்த்தால் எமது பாடசாலையை துப்புரவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே அதற்காக இராணுவத்தினரின் உதவியின் மூலமாக எமது பாடசாலையை சுத்தம் செய்வதற்கு நாளை 2025.12.02 காலை 8.30 மணிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஆகவே அனைத்து ஒஸ்மானியா கல்லூரியின் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் சமூக ஆர்வலர்கள், சமூக மட்ட பிரதிநிதிகளை கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
குறிப்பு -
சிரமதானத்திற்கு தேவையான விளக்கமாறு, குப்ப வாரி, மண்வெட்டி போன்ற சிரமதான உபகரணங்களை தம்மோடு எடுத்து வருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
M. S. F. ஸப்னா
பதில் அதிபர்
யா/ஒஸ்மானியா கல்லூரி
30/11/2025
இடைத்தங்கல் முகாமுக்கு பதில் அதிபர் சப்னா விஜயம்
யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி இடைத்தங்கல் முகாமுக்கு பாடசாலை பதில் அதிபர் எம்.எஸ்.எப்.சப்னா அவர்கள் இன்று (30) விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். இவ் விஜயத்தின் போது ஜே 86 சோனகதெரு தெற்கு கிராம அலுவலர் அவர்களை சந்தித்து தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களின் நிலமைகள் தொடர்பில் கேட்டு அறிந்து கொண்டார்.
மேலும் பாடசாலை பிரதான வளாகம் இடைத்தங்கல் முகாமுக்கு வழங்கப்பட்டுள்ளமையினால் பாடசாலையின் வகுப்பறைகள், கட்டடத் தொகுதிகள் மற்றும் தளபாடங்களின் பாதுகாப்பு தொடர்பிலும் பார்வையிட்டு உறுதிப்படுத்தினார்.
பதில் அதிபரின் இவ் விஜயத்தின் போது யாழ்ப்பாணம் மாநகரசபை உறுப்பினர் கௌரவ ஆர்.எப்.றிஸ்லா, மற்றும் யாழ்ப்பணம் பெண்கள் அபிவிருத்தி மையத்தின் தலைவி என்.சியானா உள்ளிட்டோரும் இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த பாதிக்கப்பட்ட மக்களின், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்களின் நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஊடகப்பிரிவு
யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி
2025.11.30