02/03/2026
கொடிகாமம் வெள்ளாம்போக்கட்டி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய சிகரம்!
+++++++++++++++++++++++++++++
கொடிகாமம் வெள்ளாம்போக்கட்டி கிராமசேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட, கிராம அலுவலரால் தெரிவுசெய்யப்பட்ட தேவையுடைய 21 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மார்ச் 1ம் திகதி வெள்ளாம்போக்கட்டி பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.
சிகரம் நிறுவனத்தின் ஏற்பாட்டில், அதன் நிறுவுநர் கோ.றுஷாங்கன், அந்த ஊரைப் பூர்வீகமாகக் கொண்ட தமது பாட்டனார் முன்னாள் டிறிபேக் கல்லூரி தலைமை ஆசிரியர் காலஞ்சென்ற க.மயில்வாகனம், தமது தாயார் முன்னாள் சாவகச்சேரி மகளிர் கல்லூரி மற்றும் கனகரத்தினம் மகாவித்தியாலய ஆங்கில ஆசிரியர் காலஞ்சென்ற அனுஷ்யாதேவி கோடீஸ்வரன், பெரிய தாயாரான முன்னாள் யாழ் இந்து மகளிர் கல்லூரி கணித ஆசிரியர் காலஞ்சென்ற சரஸ்வதிப்பிள்ளை ஞானசம்பந்தன் ஆகியோரின் நினைவாக இந்த உதவிகளை மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்திருந்தார்.
கிராமசேவையாளர் கந்தசாமி தர்மேந்திரா அவர்களின் ஏற்பாட்டில் ஒழுங்குசெய்யப்பட்ட இந்த நிகழ்வில், சமுர்த்தி உத்தியோகத்தர் சதீஸ் யாழினி, கிராம அபிவிருத்திச்சங்க பொருளாளர் பொன்னையா திருப்பதி, விவசாய சம்மேளன உபதலைவர் வல்லிபுரம் நவரத்தினம், கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்களான இளையதம்பி கனகரத்தினம், கந்தையா தபோநிதி மற்றும் இளைப்பாறிய ஆசிரியை கந்தசாமி சாந்தாயகி ஆகியோர் இணைந்து மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கினர்.
இந்த நிகழ்வில் வெள்ளாம்போக்கட்டி கிராமத்தின் அபிவிருத்தி, குறிப்பாக அந்தக் கிராம மாணவர்களின் கல்வி மேம்பாடு, ஒழுக்க விழுமியங்கள், எதிர்கால தொழில்வாய்ப்புக்கள், தொழில்மையமான கல்வி வாய்ப்புக்கள் என்பன தொடர்பாக சிகரம் நிறுவுநர் கோ.றுஷாங்கன் மாணவர்களின் பெற்றோர்களுக்கு விளக்கபுரையாற்றினார்.
26/02/2026
05/02/2026
04/02/2026