18/09/2014
கம்பீரம் குறையாத கம்பீர் அணி!
By dn, ஹைதராபாத்
First Published : 18 September 2014 03:39 AM IST
புகைப்படங்கள்
சென்னை அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில், ஐபிஎல் சாம்பியனான கொல்கத்தா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தோல்வியின் விளிம்பில் இருந்த கொல்கத்தா அணிக்கு முக்கியமான கட்டத்தில் ஆண்ட்ரூ ரùஸல், டென் டஸ்சடே அதிரடியாக அரைசதம் அடித்து கை கொடுத்தனர்.
சாம்பியன்ஸ் லீக் டி-20 தொடர் ஹைதராபாதில் புதன்கிழமை தொடங்கியது. முதல் ஆட்டத்தில் ஐபிஎல் சாம்பியனான கொல்கத்தாவும், சென்னை அணியும் மோதின.
முதலில் பேட் செய்த சென்னை அணிக்கு டுவைன் ஸ்மித், பிரண்டன் மெக்கல்லம் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே தப்பிப் பிழைத்த ஸ்மித் அதை சாதகமாகப் பயன்படுத்தத் தவறினார். அவர் 13 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
கைகொடுத்த சுழற்பந்து: கொல்கத்தா கேப்டன் கம்பீர் சுழற்பந்து வீச்சாளர்களிடம் பந்தைக் கொடுத்தார். அதற்கு நல்ல பலனும் கிடைத்தது. சுனில் நரைன், பியூஷ் சாவ்லா, யூசுஃப் பதான் ஆகியோர் ரன் ரேட்டைக் கட்டுப்படுத்தினர். 19 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்த மெக்கல்லம், யூசுஃப் பதான் பந்தில் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
பொறுப்புடன் ஆடி வந்த ரெய்னா (28 ரன்கள்), சுனில் நரைன் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். டூ பிளஸ்ஸிஸ் (14 ரன்கள்), சாவ்லா பந்தில் நடையைக் கட்டினார். பின்னர் கேப்டன் தோனி, பிராவோ இருவரும் இணைந்து ரன் ரேட்டை உயர்த்தினர்.
நரைன் பந்தில் தடுமாற்றம்: கம்மின்ஸ் வீசிய 17-வது ஓவரில் பிராவோ இரண்டு சிக்ஸர்கள் பறக்க விட்டார். ஆனால், சுனில் நரைன் வீசிய அடுத்த ஓவரின் ஐந்து பந்துகளையும் பிராவோ வீணடித்தார். கடைசி ஓவரின் முதல் பந்தில் ஒரு பவுண்டரியும், கடைசி பந்தில் சிக்ஸரும் அடித்தார் தோனி.
இருபது ஓவர்களில் சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது. தோனி 35 ரன்களுடனும் (20 பந்து), பிராவோ 28 ரன்களுடனும் (28 பந்து) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
தொடக்கமே அடி: கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் மன்விந்தர் பிஸ்லா (2 ரன்கள்), கம்பீர் (6 ரன்கள்) மற்றும் மணிஷ் பாண்டே (டக் அவுட்) ஆகியோரை நெஹ்ரா அனுப்பி வைத்தார். மொஹித் சர்மா பந்தில் 1 ரன்னில் ஆட்டமிழந்தார் யூசுஃப் பதான்.
சூரிய குமார் யாதவ் 19 ரன்களில் வெளியேற டென் டஸ்சடே, ரùஸல் ஆகிய இருவரும் ஆட்டத்தின் போக்கையே மாற்றினர்.
ரùஸல் அரைசதம்: ரவீந்திர ஜடேஜா ஓவரில் இரண்டு சிக்ஸர், பவுண்டரி அடித்து வியக்க வைத்தார் ரùஸல். மறுமுனையில் நின்றிருந்த டஸ்சடேவும் சிக்ஸர் பறக்க விட, கொல்கத்தா அணி வெற்றியை நோக்கி நடைபோட்டது.
மொஹித் சர்மா வீசிய 16-வது ஓவரில் இரண்டு சிக்ஸர், பவுண்டரி விளாசி அரைசதத்தைக் கடந்தார் ரùஸல். சென்னை ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்த ரùஸலை, அடுத்த ஓவரில் நெஹ்ரா பெவிலியன் அனுப்பி வைத்தார். அவர் சரியான சமயத்தில் 58 ரன்கள் (25 பந்துகள்) அடித்தார்.
மறுமுனையில் நின்றிருந்த டஸ்சடே பொறுப்புடன் ஆடி ஆட்டத்தை முடித்து வைத்தார்.
19 ஓவரில் 7 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 159 ரன்கள் எடுத்து கொல்கத்தா வெற்றி பெற்றது. டஸ்சடே 51 ரன்களும் (41 பந்து), சாவ்லா 4 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை தரப்பில் நெஹ்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரùஸல் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.