நாடோடி Nomad

நாடோடி Nomad Social Studies Updates

 #மதுரை_விளக்குத்_தூண் மதுரையை சுற்றி கோட்டையும் அதைச்சுற்றி அகழியும் இருந்தது. 18 மற்றும் 19ம் நூற்றாண்டுகளில் அந்த அகழ...
14/12/2025

#மதுரை_விளக்குத்_தூண்

மதுரையை சுற்றி கோட்டையும் அதைச்சுற்றி அகழியும் இருந்தது. 18 மற்றும் 19ம் நூற்றாண்டுகளில் அந்த அகழி முழுக்க முழுக்க சீர்கேடு மிகுந்த பகுதியாக மாறி நகரில் வியாதிகள் பரவ மட்டுமல்லாமல் வியாதிகள் உருவாக்கும் இடமாகவும் அந்த அகழியும் கோட்டையும் காரணமாகியது. ஆதலால் கோட்டையை இடித்து அந்த மண்ணை கொண்டே அகழியை நிரப்பும் திட்டத்தை அன்றைய மதுரை கலெக்டர் பிளாக்பர்ன். உருவாக்கினார். நகரத்தை விரிவுபடுத்திய அப்போதைய கலெக்டர் பிளாக்பர்னின் நினைவாக 1840களில் இந்த விளக்கு கம்பம் (விளக்குத்தூண்) அமைக்கப்பட்டது.

https://www.facebook.com/share/16Bj2hVwW9/

- நாடோடி Nomad

 #திரு_வ_கீதா  #அவர்களின்  #நிகழ்வுக்கான  #பின்னூட்டம் கிட்டத்தட்ட ஒரு நாற்பது வருடங்களுக்கு முன்பு வரை குழந்தைகளை பராமர...
05/09/2025

#திரு_வ_கீதா #அவர்களின் #நிகழ்வுக்கான #பின்னூட்டம்

கிட்டத்தட்ட ஒரு நாற்பது வருடங்களுக்கு முன்பு வரை குழந்தைகளை பராமரிப்பதற்கென்றே ஒரு அமைப்பு சமூகத்தில் இருந்தது. குழந்தைகளுக்கு அறநெறிகளை (அறம் காலத்திற்கேற்றார் போல் மாறுபடலாம்) போதிக்கவும், நல்லது எது கெட்டது எது என பகுத்தறிய தனது அனுபவத்தின் மூலம் கற்றுக் கொடுக்கவும், சமயத்தில் பாடங்களை செயல்பாட்டின் மூலம் கற்றுக் கொடுக்கவும், கதை சொல்லவும், நாட்டுப்புற பாடல்கள் சொல்லிக் கொடுக்கவும், அனைவரையும் ஒன்றாக மொட்டை மாடியிலோ கிணற்றடியிலோ உட்கார வைத்து நிலாச்சோறு ஊட்டி ஒற்றுமையை வலியுறுத்தவும், திருவிழாக்களையும் திருநாட்களையும் தொலைக்காட்சிகள் சினிமாக்கள் இன்றி கொண்டாடவும், பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க கற்றுத்தரவும் என இருந்த அந்த அமைப்பு கடந்த நாற்பது வருடங்களில் முற்றிலுமாக சிதைந்து போனது! கூட்டுக் குடும்பம் என்ற அமைப்பு தான் அது. தேவைகள் அதிகமாகி சேமிப்புகள் தேவையின்றி தவணைகளில் பூர்த்தி செய்யும் நுகர்வு பொருளாதார அமைப்பில் குழந்தை வளர்ப்பின் தத்துவங்கள் பொருளாதாரம் சார்ந்ததாக மாறி விட்டது. குழந்தைகளுக்கும் சேர்த்து பணம் சம்பாதிக்கும் ஒரு குடும்ப அமைப்பில், பெற்றோர்களால் குழந்தைகளுக்கு பணம் செலவழிக்க முடிகிறதே ஒழிய, நேரம் செலவிட முடியவில்லை.

இந்த வெற்றிடத்தை யார் நிரப்புவது? பள்ளியும் ஆசிரியரும் இன்றி யாரால் முடியும்? ஏற்கனவே தங்களது குழந்தைப் பருவத்தை இழந்து தவிக்கும் இவர்களுக்கு ஆசிரியர்கள் அன்றி யாரால் அந்த குழந்தை பருவத்தை கொடுத்து விட முடியும். காலை ஏழு மணிக்கு ஒரு ஆசிரியரை பெற்றோர் அழைத்து "சார்.. பல் வெளக்காம காபி குடிக்க உட்கார்ந்திருக்கான் சார் அவன்! நீங்க சொன்னா கேப்பான்! கொஞ்சம் சொல்லுங்க சார்...!" என்று சொல்லும் போது எரிச்சல் வரத்தான் செய்யும்! ஆனால் அதில் ஒரு பெருமிதம் வெளிப்படும். பெற்றோர் ஆசிரியர் சந்திப்பில் "சார்.. எம்பொண்ணு காலேல சாப்பிடாமயே கெளம்பிர்றா சார்.. கொஞ்சம் சாப்பிட்டு கெளம்ப சொல்லுங்க சார்.. நீங்க சொன்னா கேப்பா சார்..." என்று ஒரு பெற்றோர் கேட்பது எங்களுக்கு பெருமிதம் தானே! இந்த அங்கீகாரத்தை யார் எங்களுக்கு வழங்குகிறார்கள்? அந்தக் குழந்தைகள் தானே! இந்த அங்கீகாரம் தான் ஆசிரியர்களுக்கு இந்த சமுதாயத்தில் யாருக்குமே இல்லாத பொறுப்பையும் வழங்குகிறது. இந்த பொறுப்பை நிச்சயமாக ஆசிரியர் சமுதாயம் தட்டிக் கழிக்க முடியாது.

ஒரு கூட்டுக் குடும்ப அமைப்பு இல்லாத தருணத்தில் அந்த வெற்றிடத்தை ஒரு ஆசிரியரால் மட்டுமே நிரப்ப முடியும் என்பதை வெகு தீர்க்கமாக நம்பும் ஒரு ஆசிரியர் நான். திரு வ கீதா அவர்கள் கூறியதில் ஒன்றுக்கு நான் முற்றிலும் ஒத்துப் போகிறேன்! இந்தப் பணி கடினமாகத் தான் இருக்கிறது‌. அடிக்கடி மன உளைச்சலுக்கு ஆளாகிறோம்! ஆனால் வகுப்பறை தான் எங்கள் STRESS BUSTER! எத்தனை கவலைகள் இருந்தாலும் வகுப்பறை அவற்றை மறக்கடித்து விடும். எங்களுக்கும் இது அவசியமாகிறது. சமீபத்தில் என் உடன் பணிபுரியும் ஒரு ஆசிரியர் தனது முன்னாள் மாணவரின் திருமணத்திற்கு சென்று வந்துவிட்டு " 'சாரால தான் நான் டாக்டர் ஆனேன்!'னு அந்த பொண்ணு கிட்ட சொல்லி அந்தப் பையன் பொண்ணு ரெண்டு பேரும் என் கால்ல விழுந்துட்டாங்க சார்! ஒரே தர்மசங்கடமா போயிருச்சு!" என்று பெருமிதமாக கூறிக்கொண்டே இருந்தார்.. இருக்கிறார். இந்த அங்கீகாரம் எல்லாம் வேறு எந்த சமூக அமைப்புக்கு கிடைக்கிறது? இந்த அங்கீகாரத்தை அங்கீகாரம் செய்யும் ஆசிரியர் சமுதாயம் அந்த பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு தானே ஆக வேண்டும்??

- நாடோடி Nomad

 #பிடித்ததை_செய்வதா,  #கிடைத்ததை_செய்வதா,  #உகந்ததை_செய்வதா? பொதுவாகவே இன்றைய Motivational Speakers (ஊக்கமூட்டும் பேச்சா...
18/08/2025

#பிடித்ததை_செய்வதா, #கிடைத்ததை_செய்வதா, #உகந்ததை_செய்வதா?

பொதுவாகவே இன்றைய Motivational Speakers (ஊக்கமூட்டும் பேச்சாளர்கள்) "பிடித்ததை செய்யுங்கள், அதில் தான் நீங்கள் உயரத்தை எட்ட முடியும்!" என்றுரைக்கிறார்கள். இதில் நான் கடுமையாக முரண் படுகிறேன். என்னைப்பொறுத்தவரை இது ஒரு எதிர்மறை சிந்தனை.

நம்மைச்சுற்றி உள்ள சூழல் கடுமையான மாற்றத்திற்கு உள்ளாகக் கூடியது. மாற்றம் ஒன்றே மாறாதது. நம்மைச் சுற்றி உள்ள சூழல் என்பது தட்பவெப்ப சூழல் மற்றும் சுற்றுச்சூழல் மட்டுமல்ல, அரசியல், பொருளாதார மற்றும் உலகளாவிய சூழல் எல்லாமே உட்பட்டது தான். ஒரு காலத்தில் சிவில் இன்ஜினியரிங்கிற்கு பெரும் செல்வாக்கு இருந்தது! அப்புறம் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் என்று மாறிய சூழல் பின்னர் கம்ப்யூட்டர் சயின்ஸில் வந்து நின்றது. இன்றைக்கு ஏஐ!! இந்த மாற்றங்கள் சகஜம் தான். இந்திய வர்த்தகத்தை மட்டுமல்ல உலக வர்த்தகத்தையே டிரம்ப் நாசப்படுத்திக் கொண்டு இருக்கிறார். இதை ஒரு வருடத்திற்கு முன் யாரும் எதிர்பார்க்கவில்லை. ஜவுளித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆக சூழல் என்பது நம் கட்டுப்பாட்டில் இல்லை.

நம் அனைவருக்கும் பொருளாதாரம் மிக முக்கியம். நமக்கு பிடித்த ஒன்று அன்றைய சூழலுக்கு ஒத்துப்போக வேண்டும். அதாவது நமக்கு பிடித்த ஒன்று அன்றைய சூழலில் நாம் சம்பாதிக்க ஏற்றதாக இருக்க வேண்டும். அதாவது நமக்கு பிடித்த ஒரு துறை நமது பொருளாதார தேவையை பூர்த்தி செய்வதோடல்லாமல் நமது குடும்பத்தின் பொருளாதார அந்தஸ்தை அடுத்த கட்டத்துக்கு நகற்றுவதாக இருக்க வேண்டும். அது இல்லாத ஒன்று நிச்சயமாக நமக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் உகந்தது அல்ல. நமக்கு பிடித்தது, நமக்கு கிடைத்தது, நமக்கு உகந்தது இந்த மூன்றும் ஒத்துப் போவது கோடியில் ஒருவருக்கு கூட கிடையாது. இதற்கு இரண்டு ஆளுமைகளை நான் உதாரணமாக கூற வேண்டும். ஒருவர் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் திரு ஏ பி ஜே அப்துல் கலாம் அவர்கள். இரண்டாவது ஆளுமை திரு வர்கீஸ் குரியன் அவர்கள். ஏற்கனவே பதிவு நீண்டு விட்ட நிலையில் நாளை தொடர்வோம்....
நன்றி.

- நாடோடி Nomad

 #நெகிழ்ச்சிகள்_பலவிதம்!!அவரது தந்தை ஒரு விவசாயி. படிப்பறிவு மிகவும் குறைவு. ஆனால் வெளிநாட்டுக்கு சென்று வேலை பார்த்த அன...
09/08/2025

#நெகிழ்ச்சிகள்_பலவிதம்!!

அவரது தந்தை ஒரு விவசாயி. படிப்பறிவு மிகவும் குறைவு. ஆனால் வெளிநாட்டுக்கு சென்று வேலை பார்த்த அனுபவம் உண்டு. விவசாயம் தான் முக்கிய வருமானம். வருமானத்திற்கு குறைவில்லை தான். பையனுக்கு ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் (UPSC) குடிமைப் பணி (IAS) தேர்வு எழுத வேண்டும் என்பதே குறிக்கோள். எங்கள் பள்ளியில் தொடர்ந்து அளித்து வரும் தொழில்சார் கல்வி காட்டல் நிகழ்வுகள் மூலம் அவருக்கு மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றிற்கான நுழைவுத் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வும் பயிற்சியும் அளித்தோம்.

பொதுத்தேர்வு சமயத்தில் அவருக்கு மத்திய பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தோம். தில்லி மத்திய பல்கலைக்கழகம், கேரள மத்திய பல்கலைக்கழகம் மற்றும் பாண்டிச்சேரி பல்கலைக்கழகங்களை முன்னுரிமை கொடுத்து விண்ணப்பித்திருந்தோம்.

தேர்வில் பாடங்களாக வியாபார பாடம் (Business Studies), பொருளியல் (Economics) மற்றும் அரசியல் அறிவியலை (Political Science) தேர்வு செய்ய வைத்தோம். நுழைவுத் தேர்வு முடிந்து அரசியல் அறிவியலில் 88 சதவிகிதம் மற்றும் மீதி பாடங்களில் 60க்கும் மேற்பட்ட சதவிகிதம் பெற்று தேர்ச்சி பெற்றார்.

அவருக்கு பி.ஏ அரசியல் அறிவியலில் தில்லி பல்கலைக்கழகத்தின் ஹரியானா வளாகத்தில் இடம் கிடைத்தது. ஆனால் அவரது பெற்றோர் அனுமதிக்கவில்லை. பின்னர் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பொருளியல் கிடைத்தது. பையன் காத்திருந்தார். அரசியல் அறிவியலில் அவரது பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் அகில இந்திய அளவில் 18வது இடத்தில் இருந்தார். கேரள மத்திய பல்கலைக்கழகத்தில் பி.ஏ ஹாணர்ஸ் (சர்வதேச தொடர்பு மற்றும் பொருளியல்) முதல் கவுன்சிலிங்கில் இரண்டாவது நபராக அழைக்கப்பட்டார். தந்தையை ஒத்துக் கொள்ள வைத்தார்.

இதில் ஒரு வருத்தமான விடயம் என்னவென்றால் பையன் அகில இந்திய அளவில் சாதித்திருக்கிறார் என்பதே அந்த தந்தைக்கு புரியவில்லை . நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடிய ஒரு தருணத்தை அவர் மிக மிகச் சாதாரணமாகவே கருதினார். பையனிடம் பேசிய போது "சார்.. அப்பாவுக்கு மத்திய பல்கலைக்கழகங்கள், அதன் நுழைவுத் தேர்வுகள் குறித்தெல்லாம் ஏதும் தெரியாது சார்! அவருக்கு பையன் பக்கத்தில் இருந்தால் தான் சந்தோசம். அவருக்கு எங்கள் ஊரிலேயே ஒரு சாதாரண கல்லூரியில் இடம் கிடைத்திருந்தால் கொண்டாடி தீர்த்திருப்பார்!" என்றார்.

அந்தப் பையனிடம் அதில் எந்த வருத்தமும் இல்லை. அப்பாவோ "சார்.. அவன் ஏதேதோ ஆசைப்படுறான் அதை அவன் அடைஞ்சா போதும் சார்! இப்ப கூட கேரளா போறேங்கிறான், என் பையன் நல்ல பையன் தான் ஆனா வயசு தான் பயமா இருக்கு.. அவன் குறிக்கோள் நிறைவேறுனதுக்கு அப்புறம் அவனுக்கு பிடிச்ச மாதிரி யார் கூட வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கட்டும், எனக்கு அதுல ஏதும் ஆட்சேபனை இல்ல..!" மிகவும் பின்தங்கிய சாதிய பின்னணியில் கிராமத்தில் உள்ள கிராமத்தில் இருக்கும் ஒரு தந்தைக்கு என்ன மாதிரியான தாராள குணம். சாதிப் படுகொலை மற்றும் ஆணவப் படுகொலைகள் நடக்கும் காலத்தில் இப்படிப்பட்ட தந்தை.

நேற்றைய பொழுது முழுவதுமே நெகிழ்ச்சியாக கழிந்தது. இந்த உணர்வை சந்தோசம் என்பதா? துக்கம் என்பதா? கரிசனம் என்பதா? எல்லாம் கலந்த கலவையா?

- நாடோடி Nomad

 #சௌகரியமான_ஒரு_இடம் ( )தனிக்குடித்தனம் குழந்தைகளிடத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது? பெரும்பாலும் எதிர்...
03/08/2025

#சௌகரியமான_ஒரு_இடம் ( )

தனிக்குடித்தனம் குழந்தைகளிடத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது? பெரும்பாலும் எதிர்மறையானதாகவே உள்ளன.‌ மிகச் சாதாரணமாகவே பதினைந்து இருபது குழந்தைகள், ஏழெட்டு பெரியவர்கள் என இருந்தது கூட்டுக் குடும்பங்கள். செலவுகள் மிகப்பெரிய அளவில் இருக்கும். குறிப்பாக பண்டிகை கால செலவுகள் உச்சத்தை எட்டும். அத்தனையிலும் சிக்கனம் தான். பலசரக்கு, துணிமணிகள், விடுமுறை, பயணம், கல்வி என அத்தனையிலும் சிக்கனம் தான்.

ஒருவருக்கு என தனிப்பட்ட எதுவும் கிடையாது. ஒரு குழந்தைக்கு என தனிப்பட்ட எதுவும் கிடையாது. குடும்பத்திற்கு தான் முதலிடம். ஒரு தனிநபரா குடும்பமா என பார்த்தால் தனிநபர் தனது ஆசையை குடும்பத்திற்காக விட்டுக் குடுத்தே ஆக வேண்டும். அப்போது தான் குடும்பம் கூட்டாக இணைந்து நிலைக்கும்.

ஒரு குழந்தைக்கு பிடித்தது விருப்பமானது என்று எதுவும் கிடையாது. பண்டிகை காலங்களில் அத்தனை பேருக்கும் ஒரே மாதிரியான துணி, ஒரே மாதிரியான கல்வி, அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்தே படிக்க வேண்டும். குடும்பத்தின் வேலைக்கே முதலிடம், படிப்பு இரண்டாம் பட்சம். குடும்ப வேலையை முடித்த பின்னரே படிக்க உட்கார முடியும். திட்டத்திற்கும், உழைப்புக்குமே முக்கியத்துவம்.

முன்னுக்கு வர வேண்டும் என்றால் திட்டமிட்டு உழைத்தே ஆக வேண்டும் என்பது மட்டும் தான் மனதில் பதிய வைக்கப்பட்டது. கூட்டு முயற்சியில், அணியின் தனிநபர்களின் தனித்தனி திறமைகள் ஒரே இடத்தில் குவித்து வைக்கப்பட்டது. இணைந்து செயல்பட்டால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும். ஒரு குழந்தைக்கு என, ஒரு தனி நபருக்கு என சௌகரியமான இடம் ஏதும் கிடையாது.

சௌகரியமான இடம் வேண்டும் என்றால் திட்டமிட வேண்டும், அதற்கேற்ப உழைக்க வேண்டும். படிப்பிலும் திட்டமிட்டு உழைத்தால் மட்டுமே நமக்கான சௌகரியமான இடத்தை நோக்கி நகர முடியும். படிப்புக்கு என தனியான நேரம் கிடைக்காது. குடும்பத்திற்காக உழைக்கும் நேரத்திற்கு மத்தியில் நமக்கான நேரத்தை திட்டமிட்டு ஒதுக்கி படிக்க வேண்டும். படித்து நமக்கான ஒரு சௌகரியமான இடத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஒரு வெறி இருக்கும். அதற்கான தேவையை அந்த அசௌகரியம் உருவாக்கி வைத்திருந்தது.

சௌகரியம் தேடி உழைத்து முன்னேறி போக வேண்டியிருந்தது. ஆனால் இன்றைய குழந்தைகளுக்கு அத்தனை சௌகரியத்தையும் நாமே ஏற்படுத்திக் கொடுக்கிறோம். இருக்க இடம், உண்ண உணவு, கற்க பள்ளி, தூங்க அறை, படிக்க தனி அறை என அத்தனையும் அவர்கள் சௌகரியத்தில். மிகவும் சௌகரியமான இடத்தில் இருக்கும் அவர்களுக்கு தேவை என்பது அவசியம் என்பதோ ஆடம்பரமான தேவைகளாகத் தான் இருக்கின்றன. திட்டமிடல் மூலம், உழைப்பின் மூலம், கற்பதன் மூலம் இனி அவர்கள் சாதிக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை. உழைப்பின் பலன் அவர்களுக்கு தெரிவதில்லை. அவர்களுக்கென பெரிய நோக்கங்கள் ஏதுமில்லை. ஏற்கனவே இருக்கும் சௌகரியம் அவர்களுக்கு எதையும் தேடிச் செல்ல வேண்டிய அவசியத்தை தேவையில்லாமல் ஆக்கி விடுகிறது. இந்த குழந்தைகளை நாம் நொந்து என்ன பிரயோஜனம்?!

- நாடோடி Nomad

 #சமூகப்_பார்வையில்_நூல்களை_எவ்வாறு_அணுகுவது?சமூகத்திற்கும் நூல் வாசிப்பிற்கும் என்ன தொடர்பு? இன்றைய சமூகத்திற்கு வாசிப்...
31/07/2025

#சமூகப்_பார்வையில்_நூல்களை_எவ்வாறு_அணுகுவது?

சமூகத்திற்கும் நூல் வாசிப்பிற்கும் என்ன தொடர்பு? இன்றைய சமூகத்திற்கு வாசிப்பு ஏன் அவசியம்?

சமூகம் என்பது என்ன? மனிதன் கூட்டமாக வாழ்வது சமுதாயமா? காட்டில் மான்கள், சிங்கங்கள், காட்டு நாய்கள், கழுதைப்புலிகள் கூட கூட்டமாகக் தான் வாழ்கின்றன. அவற்றை நாம் சமூகம் என்று சொல்வதில்லையே! சிங்கக்கூட்டம், மான் கூட்டம் என்று தானே கூறுகிறோம்! ஏன்? மிருகங்கள் பேசுவதில்லையே தவிர அவைகளும் தங்களுக்குள் தொடர்பு கொள்கின்றன. ஒலியாளோ அல்லது வேறு வழியிலோ! வேட்டை, வாழ்வாதாரம் போன்றவற்றுக்காக சேர்ந்து வாழ்பவை. அவைகளுக்குள் நிரந்தர பந்தம் கிடையாது. குடும்பம் கிடையாது, அரசாங்கம் கிடையாது. அவை தங்களுக்குள் ஒரு முறையான பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு வாழவில்லை. அவை தங்கள் கூட்டத்தில் ஊனமுற்ற மற்றும் நோய்வாய்ப்பட்ட மிருகங்களை கைவிட்டு விடுவது மட்டுமல்ல நோய்வாய்ப்பட்ட மற்றும் ஊனமுற்ற குட்டிகளை கொன்று விடவும் கூடும். ஆனால் மனிதன் தேவைக்காக மட்டும் கூட்டமாக வாழ்பவர்கள் அல்ல. அதனால் தான் மனிதர்களை போல் அவர்கள் பரிணாமம் அடையவில்லை.

மனிதனின் பரிணாம வளர்ச்சியே மனிதன் கூட்டமாக வாழும் போது இல்லை! அவர்கள் தங்களை முறைப்படுத்திக் கொண்டு சமூகமாக வாழ ஆரம்பித்த பின்னரே பரிணாமம் பெற்றனர். விவசாயம் உட்பட மனிதனின் அத்தனை கண்டுபிடிப்புகளுமே மனிதன் சமூகமாக வாழ ஆரம்பித்த பின்னரே வந்தவை. இந்த சமூகம் பிரியாமல் சமூகமாக வாழ கட்டுக்கோப்பான சில வழிமுறைகள் தேவைப்பட்டன. இதில் முக்கியமானது மனிதன் தன் பன்மைத் தண்மையை சகித்து ஒன்றாக வாழ வேண்டியது. ஆண் பெண் என அத்தனை பேரின் ஈடுபாடும் ஒரு சமூகத்திற்கு தேவைப்பட்டது. அந்த சமூகத்தில் சாதி இல்லை, மதம் இல்லை ஒற்றைச் சமூகம் மட்டுமே இருந்தது. அதில் தனிப்பட்ட உடமைகள் இல்லை சமூகத்திற்கான உடமைகள் மட்டுமே இருந்தது. அந்த சமூகம் சீக்கிரமே உபயோகமான ஆக்கபூர்வமான முறையில் வளர்ச்சி கண்டது.

ஒரு சமூகம் ஒரு நாடாகவோ தேசமாகவோ நிலைபெற்று நிற்க அதன் பன்மைத் தண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த பன்மைத் தண்மையோடு இயைந்து வாழவும் வேண்டும். திறமைசாலிகள் அத்தனை பன்மையிலும் உண்டு! ஆணிலும் உண்டு, பெண்ணிலும் உண்டு, அத்தனை மொழியிலும் உண்டு, அத்தனை சாதிகளிலும் உண்டு! இந்த பண்மை தான் சமூகத்தின் வளர்ச்சிக்கு ஒன்றாக இணைந்து உழைத்து உயர்த்த முடியும். பொதுவாகவே சில இடங்களில் வாழும் மனிதர்கள் குறித்த தவறான பார்வை மக்களிடையே இருப்பதுண்டு. சமீபத்தில் நடந்த ஆணவ கொலைக்கு பின்னர் தென்மாவட்ட மக்கள் குறித்து சமூக ஊடகங்களில் வந்த கருத்துக்கள் கொடுமையானது. மதுரை மாவட்ட தேனி மாவட்ட மக்கள் குறித்த பார்வை போன்றவையும் இந்த இரகம் தான். அவர்களை முரடர்களாக தான் நிறைய பேர் பார்க்கின்றனர்.

வைரமுத்துவின் கருவாச்சி காவியம் மற்றும் கள்ளிக்காட்டு இதிகாசம் படித்தவர்கள் அந்த மக்களின் பாசத்தையும் உணர்வுகளையும் ஈரத்தையும் புரிந்து கொள்ள முடியும். அதே போல் கி.ராவின் நூல்களை வாசிப்பவர்களுக்கு தென் மாவட்ட மக்கள் மீது தனி பாசமே ஏற்படக்கூடும். தற்சமயம் சமூகத்தில் பிளவு ஏற்படுத்தும் சாதி, மதம் போன்ற தீய சக்திகளிடம் இருந்து விலகி பன்மைத் தண்மையை ஏற்றுக் கொண்டு சமூகமாக வாழ அந்த பன்மைத் தண்மையை புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு வாசிப்பு அவசியமாகிறது. சினிமா காட்டுவது, உதாரணமாக " நானும் மதுரைக்காரன் தான்டா" என்பன போன்றவை நிதர்சன உலகம் கிடையாது. கருவாச்சி காவியமும், கள்ளிக்காட்டு இதிகாசமுமே நிதர்சனம். இந்த புரிதலை ஏற்படுத்த வாசிப்பு அவசியமாகிறது.

- நாடோடி Nomad

 #ஆரோ_ஹெட்_என்றொரு_மகாராணி!ஒரு புலியை அப்படி மகிமைப்படுத்தி (glorify) விட முடியுமா என்று தெரியவில்லை! ரந்தம்பூர் புலிகள்...
25/06/2025

#ஆரோ_ஹெட்_என்றொரு_மகாராணி!

ஒரு புலியை அப்படி மகிமைப்படுத்தி (glorify) விட முடியுமா என்று தெரியவில்லை! ரந்தம்பூர் புலிகள் சரணாலயம். இது இராஜஸ்தானின் வளமான பகுதியில் உள்ள காடு. பாலைவனத்தின்‌ சோலைப்பகுதிகள் அவை. நிறை நிரம்பிய நீர்நிலைகள் உள்ள வனப்பகுதி அவை. அந்தக் காலத்தில் ராணாக்கள் வசமிருந்த பகுதிகள் அந்த காடுகள். ராணாக்கள் ஆண்ட கோட்டைப் பகுதிகளின் எச்சங்களை அங்கு காண முடியும். இன்னமும் அந்த கோட்டைகளின் மிச்சம் மீதிகளை புலிகள் ஆள்வது தான் அழகு.

புலிகள் அந்த சிதிலங்களுக்குள் ஓய்வெடுப்பதும், அதனிடையே நடந்து வருவதும் அழகான ஓவியங்கள். நிறைவான இரை, எப்போதும் தண்ணீர் என புலிகளுக்கான சொர்க்கம் அது. மச்சிலி என்ற பெண் புலியின் ஆட்சியில் இருந்த பகுதி அது. உலகிலேயே வளர்ந்த முதலையை வேட்டையாடிய புலி ஒன்று உண்டென்றால் மச்சிலி தான் முதன்மையானதும் முடிவானதுமாக இருந்தது. அச்சம் என்றால் என்னவென்றே அறியாத புலி அது. ஆண் புலிகளையும் கரடிகளையுமே அச்சப்படுத்தக்கூடிய ஒரு ஆளுமை (தன்னம்பிக்கை). மச்சிலிக்கு இரண்டு மகள்கள் மட்டுமே நிலைத்தன. கிருஷ்ணா மற்றும் சுந்தரி. மச்சிலிக்கு சற்றும் குறையாத மகள்கள் தான் இருவரும். என்றாலும் மச்சிலின் ராஜ்ஜியத்தை சகோதரியை மீறி கிருஷ்ணா தான் எடுத்துக் கொண்டது. கிருஷ்ணாவின் குட்டிகளில் இரண்டு ஆண் குட்டிகளும் ஒரு பெண் குட்டியும் மட்டுமே நிலைத்தன. அந்தப் பெண் குட்டி அப்படியே பாட்டியின் இரத்தம். அதன் பெயர் ஆரோ ஹெட் (Arrow Head). அதன் நெற்றியில் 'அம்பு' இருக்கும் வரிகள் மற்றும் அதன் அம்பு போன்ற பாய்ச்சலால் அந்தப் பெயரை அது பெற்றது.

ஆரோ ஹெட் பிறந்தது மார்ச் 2014ல். குட்டியில் இருந்தே சூட்டிக்கையானது. அம்மாவிடம் இருந்து முறையே வேட்டை முறைகளையையும் தற்காப்பு முறைகளையும் கற்றுக்கொண்டது. சகோதரர்களை காட்டிலும் ஒரு படி முன்னே. அம்மாவுக்கு பின்னர் பாட்டி மச்சிலியின் ராஜ்யம் ஆரோ ஹெட் கைகளில். கரடிகளையும் மற்ற புலிகளையும் மிரள விடுவதில் பாட்டியின் நகல் அப்படியே! நான்கு முறை குட்டிகள் ஈன்றது. இரண்டு முறை ஈன்ற குட்டிகளையும் பறிகொடுத்த ஆரோ ஹெட் இரண்டாம் மற்றும் நான்காம் முறையாக ஈன்ற குட்டிகளை தன்னைப்போலவே பிரமாதமான வேட்டைக்காரர்களாக வளர்த்தெடுத்தது. முதல் இரண்டு முறை ஈன்ற பின்னர் அதற்கு மூளையில் கட்டி இருப்பதும், எலும்பு புற்றுநோய் இருப்பதும் கண்டறியப்பட்டது. நோய் கண்டறியப்பட்ட பின்னரும் அதன் இயல்புகளில் மாற்றம் இல்லை.

வேகம் வீரம் இரண்டும் மட்டுப்படவில்லை. அழகு கூடியது!! உடல் பலவீனப்பட்டதை காட்டிக்கொள்ளவில்லை. 2025ல் எடை கணிசமாக குறையத் தொடங்கியது. பதினோரு வயது என்பது புலிகளை பொருத்தவரை கிழடு தட்டிய வயது தான். மிகவும் பலம் குன்றிய நிலையில் அதன் இராஜ்ஜியத்தை மகள் ரித்தியிடம் பறிகொடுத்தது. ஆரோ ஹெட்டுக்கு தான் தன் இயல்பை விட்டுக் கொடுக்கம் மனம் கிடையாதே. பாட்டியை‌ போலவே இறுதி வரை போராடும் குணம் உடையவள். கடந்த வாரம் இறப்பதற்கு முதல் வாரத்தில் இரண்டு வளர்ந்த முதலைகளை வேட்டையாடி உள்ளது. தன்னால் நடக்க முடியாத அளவிற்கு எடை குறைந்து எலும்பும் தோலுமாக ஆன பின்னர் அதனால் முன்பு போல் மான்களை விரட்டக் கூட முடியவில்லை. அதன் மகள்களில் ஒரு மகளான ரித்தியின் ராஜ்ஜியத்திற்குள் நுழைந்து அங்கே இருந்த நீர்நிலைகளின் கரைகளில் தஞ்சம் கண்டது. தங்களது எல்லையை காக்க புலிகள் தாய் உயிரையும் எடுக்கும், சமயத்தில் உயிரையே கொடுக்கும். ஆனால் இந்த முறை ரித்தி அதன் தாயை அங்கேயே ஓய்வெடுக்க அனுமதித்தது மிகவும் நெகிழ்ச்சியான காட்சி.

உயிரை விட்டுக்கொடுக்க மனமில்லாத ஆரோ ஹெட் இந்த நிலையில் இரண்டு வளர்ந்த முதலைகளை வேட்டையாடி உண்டது. ஒரு பத்தடி கூட தொடர்ச்சியாக எடுத்து வைக்க முடியாத நிலையில், அதன் இன்னொரு மகளான கங்காட்டி அதற்கு ஆறுதலாக அதனோடேயே இருந்தது அதற்கு மிகுந்த ஆறுதலை கொடுத்தது. ஆனால் கங்காட்டி ஏற்கனவே இரண்டு மனிதர்களை தாக்கி கொன்றிருந்தபடியால் அதற்கு மயக்க ஊசி செலுத்தி அதனை வன அதிகாரிகள் இடம்பெயர்த்தனர். ஜூலை 19, 2025 அன்று அதன் மகளை இடம்பெயர்த்த சில மணிநேரத்தில் ஆரோ ஹெட் ஒரு மகாராணியாக அதன் இராஜ்ஜியத்திலேயே இயற்கை எய்தது. பாட்டி மச்சிலியும் பெயர்த்தி ஆரோ ஹெட் ஆகிய இரண்டு புலிகள் மட்டுமே உலகிலேயே வளர்ந்த முதலையை வேட்டையாடிய இரண்டே புலிகள்.

#ஆரோ_ஹெட்டுக்கு_என்_வீர_வணக்கம்.

- நாடோடி Nomad

 #திரு_சங்கர_சரவணன்_அவர்களின்_உரையில்_இருந்து..குழந்தைகளிடம் இருந்தே கேள்விகளுக்கான பதில்களை பெற்று அதில் இருந்தே தனது உ...
26/04/2025

#திரு_சங்கர_சரவணன்_அவர்களின்_உரையில்_இருந்து..

குழந்தைகளிடம் இருந்தே கேள்விகளுக்கான பதில்களை பெற்று அதில் இருந்தே தனது உரையை துவக்கிய விதம் ஆச்சர்யம் ஊட்டும் வகையில் இருந்தது. அறிவுக்கு (Knowledge) அவர் கொடுத்த வரையறை புதிதாகவும் சிறப்பாகவும் இருந்தது. "நாம் கற்றதில், நாம் மறந்தது போக மீதி நினைவில் உள்ளதே அறிவு" என்றார். எத்தனை உண்மை! இதன் மூலம் இரண்டு விடயங்களை விளக்கியது அதனினும் அருமை.

முதல் விளக்கம்: மறந்தது போக மீதி நினைவில் உள்ளவை அதிகமாக வேண்டும் என்றால், அதிகம் கற்க வேண்டும்.
இரண்டாவது விளக்கம்: கற்றதில் அதிகம் நினைவில் வைத்துக்கொள்ள, கற்றதை அதிகம் பகிர்ந்து கொள்ள வேண்டும். கற்றதை பகிர்ந்து கொள்ளும் போது அது நம் நினைவை விட்டு அகலாது.

அடுத்ததாக குழந்தைகளின் கேள்வி நேரத்தின் போது, "மேடையில் பேசும் போது சிலர், மேடையில் பேச வந்த விடயத்தை விட்டு வேறு எதையோ உளறுவதன் காரணம் என்ன?" என்ற கேள்விக்கு அவர் கூறிய மேற்கோள் சிறப்பு.

கிருபானந்த வாரியார் அவர்களிடம் இதே போன்ற கேள்வியை முன்வைத்த போது அவர் கூறிய பதிலை மேற்கோளாக எடுத்துக் கூறினார். "உங்கள் வீட்டில் உள்ள குழாயில் தண்ணீர் எவ்வாறு வரும்" என்று கிருபானந்த வாரியார் கேட்க! அதற்கு அவரிடம் கேள்வி கேட்டவர் "மேல்நிலை தொட்டியில் தண்ணீர் இருந்தால் குழாயில் தண்ணீர் வரும்" என்று கூறுகிறார். இதற்கு பதிலாக வாரியார், "அதே போலத்தான் பேசுபவரின் மேல் தளமான தலையில் விசயம் இருந்தால், மேடையில் உரையும் தடங்கல் இல்லாமல் வரும்!" என்கிறார். அந்த மாணவர் கேட்ட கேள்விக்கு திரு சங்கர சரவணன் ஐயா அவர்கள் மேற்கோளுடன் கூறிய விளக்கம் எத்தனை உண்மை. குழந்தைகளை வெகு எளிதில் சென்றடைந்தது.

நாடோடி Nomad

 #திரு_மருதன்_அவர்களின்_நிகழ்வின்_துளிகள்...வரலாறு என்பது கடந்த கால நினைவுகள். கடந்த கால நினைவுகள் மட்டும் தான் வரலாறா? ...
26/04/2025

#திரு_மருதன்_அவர்களின்_நிகழ்வின்_துளிகள்...

வரலாறு என்பது கடந்த கால நினைவுகள். கடந்த கால நினைவுகள் மட்டும் தான் வரலாறா? வரலாற்றில் ஒரு நிகழ்வை பதிவு செய்ய ஆதாரங்கள் தேவை. பெரும்பாலும் அவை கல்வெட்டு தாமிர பட்டயம் போன்ற ஆவணங்கள் தேவை. எழுத்துக்கள் உருவாகும் முன்னர், அல்லது நமக்கு பரிச்சயம் இல்லாத எழுத்துருக்கள் உள்ள காலக்கட்டத்தில் நிகழ்ந்தவைக்கு சான்றுகள் எழுத்தாவணங்களாக கிடைக்காது. அவை சிலை, நாணயங்கள் போன்ற பொருட்களாகத் தான் இருக்கும். இவற்றைக் கொண்டு வரலாறு எழுதும் போது அந்தக்கால நிகழ்வுகளை ஊகிக்க கொஞ்சம் கற்பனை தேவை. உதாரணமாக ஒரு கூர்மையான கல் கிடைக்கும் போது அதை எவ்வாறு கற்கால மனிதர்கள் உபயோகித்திருப்பார்கள் என்று ஊகிக்க கற்பனை அவசியம். ஆக வரலாறு என்பது நினைவுகளின் தொகுப்பு மட்டுமல்ல கற்பனைகளின் தொகுப்பும் தான்.

ஆனால் இந்த ஆவணங்களையும் கற்பனையையும் தொகுக்கும் வரலாற்று ஆய்வாளருக்கு சார்பு நிலை இருக்கக்கூடாது. ஒரு செய்தியை எழுதும் நிருபருக்கு சார்பு நிலை இருக்கக்கூடாது. உள்ளதை உள்ளபடி எழுதிவிட்டு, ஊகத்தை படிப்பவரிடம் விட்டுவிட வேண்டும். அதே தான் வரலாற்று ஆய்வாளருக்கும். ஆக புனைவு இல்லாத வரலாற்றை படிப்பவருக்கு அதில் பல கோணங்கள் கிடைக்கும். புனைவு இல்லாத வரலாற்றில் உணர்வு இல்லாததால் அதில் சுவராசியம் இருக்காது. இதை வகுப்பில் நடத்தும் ஆசிரியர் அந்த நிகழ்வுகளை பல கோணங்களில் வகுப்பில் விளக்கி சுவராசியம் ஊட்டலாம். உதாரணமாக இந்திய விடுதலைப்போர் வரலாற்றை வகுப்பில் நடத்தும் ஒரு ஆசிரியர் இந்தியாவின் பார்வையில் ஒரு கோணத்திலும், ஆங்கிலேயர் பார்வையில் ஒரு கோணத்திலும் நடத்தலாம். ஆனால் வரலாற்று ஆசிரியர் எந்தக் கோணத்திலும் சார்பு நிலை எடுத்து நடத்தி விடக்கூடாது.

வரலாற்றை வெறும் தேதிகள் பெயர்கள் போன்ற தரவுகளை மட்டும் கொண்டு நடத்தாமல், அரசியல், பொருளாதார, சமூக, புவியியல் பின்னணி கலந்த அலசல் கோணத்தில் நடத்தினால் மாணவர்களுக்கு உற்சாகமூட்டலாம். நிகழ்கால நிகழ்வுகளில் அவற்றின் பாதிப்பை புரிய வைத்து நடத்தினால் வரலாற்றின் முக்கியத்துவம் மாணவர்களுக்கு நிச்சயமாக புரிந்து ஆர்வம் பிறக்கும். வரலாறு முக்கியம் அமைச்சரே....

- நாடோடி Nomad

 #மின்னம்பலம் இதழில் வெளிவந்த திரு  #பாலசுப்ரமணியம்_முத்துசாமி அவர்களின் கட்டுரைக்கான பின்னூட்டம்.நான் ஒரு சராசரி ஆசிரிய...
20/04/2025

#மின்னம்பலம் இதழில் வெளிவந்த திரு #பாலசுப்ரமணியம்_முத்துசாமி அவர்களின் கட்டுரைக்கான பின்னூட்டம்.

நான் ஒரு சராசரி ஆசிரியராக என்னால் பெரிய அளவில் (நுண்ணிய அளவில் - Micro Analysis) கருத்து தெரிவிக்க இயலாது. தீவிரமான அலசல் மற்றும் தரவுகளை கொண்டு தான் இந்த கட்டுரை மீது கருத்து தெரிவிக்க முடியும். இல்லையேல் அது நம்பகத்தன்மையற்ற மேம்போக்கான கருத்தாக அமைந்து விடும் அபாயம் உள்ளது. 1954க்கு முன்பு வரை அன்றைய மதராஸ் மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சி இந்திய பொருளாதார வளர்ச்சியை காட்டிலும் குறைவாகவே இருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 1954ல் இருந்தே தமிழகம் இந்திய பொருளாதார வளர்ச்சியோடு சமமான அளவில் உயர ஆரம்பித்தது. 2003க்கு பின்னர் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி இந்திய பொருளாதார வளர்ச்சியை காட்டிலும் வெகுவாக உயரத் தொடங்கியது. அதன் பின்னர் தமிழகம் தனிப்பட்ட மாநிலமாக இந்திய பொருளாதார வளர்ச்சியை மிஞ்சியே இருந்தது. (இந்தி பேசாதது ஒரு காரணமாக இருக்கலாம்!!)

சேவைத் துறையில் தமிழகத்தின் வளர்ச்சி மெச்சத்தக்கதாக இருந்தாலும் மகிழும் படியாக இல்லை. சேவைத் துறை என்று பார்க்கும் போது நாம் தகவல் தொழில்நுட்ப துறையை (ஐடி) பிரதானமாக பார்க்கிறோம். அதன் பின்னர் தொலைத்தொடர்பு துறை (Telephone and Cellphone service providers), வங்கித் துறை போன்றவற்றையே குறிப்பிடுகிறோம். இந்த துறைகள் வளர்ச்சி முகத்தில் உள்ளன. ஆனால் சேவைத் துறை சிறு தொழில் நிறுவனங்களையும் உள்ளடக்கியது. சேவைத் துறையில் அடங்கும் சிறு தொழில்களில் ஆட்டோ ஓட்டுபவர்கள், சிறு சரக்கு வாகனங்கள் ஓட்டுபவர்கள், டாக்சி ஓட்டுபவர்கள், பலசரக்கு கடைகளில் தொடங்கி பெட்டிக்கடைகள், தலைச்சுமையாக பழம் காய்கறிகள் விற்பவர்கள் வரை அடங்கும். ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதமாக உள்ள தகவல் தொழில்நுட்ப துறையின் பங்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் வெறும் 3 சதவிகிதத்திற்கும் குறைவாகத் தான் இருக்கும். இவ்வளவு முரண்பாடு இருக்கும் போது பொருளாதார வளர்ச்சி எவ்வாறு கடைநிலை மக்களை சென்றடையும்? குறிப்பாக சட்டம் ஒழுங்கு சீர் கெட இதுவே காரணம். 1990களில் இது போன்ற சிறு தொழில்களுக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் (TIIC) மூலம் நிறைய தொழில் கடன்கள் வழங்கப்பட்டது. நிறைய சிறு ரக சரக்கு வாகனங்களுக்கு அந்தக் காலக் கட்டத்தில் வங்கிக் கடன் வழங்கப்பட்டு தொழில் வாய்ப்பை உருவாக்கியது. அதன் பின்னர் அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. சேவைத் துறையில் உள்ள இது போன்ற சிறு தொழில்களுக்கு கடனும் தொழில் பயிற்சியும் வழங்கப்பட முயற்சி எடுக்க வேண்டும்.

அந்தக் கட்டுரையில் குறிப்பிட்ட மிக முக்கியமான ஒரு விடயம் உள்ளது. அதாவது விவசாயத்தை புனிதத்தில் இருந்து வெளிக்கொணர்ந்து ஒரு லாபகரமான தொழிலாக மாற்றுவது தான் அது. உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 10 சதவீதமாக உள்ள விவசாயத்துறையில் வேலை செய்போரின் எண்ணிக்கை 50 முதல் 60 சதவீதமாக உள்ளது. எவ்வளவு பெரிய முரண்பாடு. அதாவது வெறும் 10 பேரின் வருமானத்தை 50 பேர் பகிர்ந்து கொள்ளும் அவல நிலை இது! உண்மையில் அங்கு 40 பேருக்கு வேலை இல்லை என்பது தான் நிதர்சனம். இதற்கு மேல் உற்பத்தி பெருகினால் விளைபொருட்களின் விலைவாசி குறைந்து விவசாயிகளுக்கு மேலும் நட்டம் ஏற்படும். அந்தத் துறையில் மேலும் நவீனத்தை புகுத்தி அதில் வேலை பார்க்கும் மற்றவர்களை (எஞ்சியவர்களை) தொழில்துறைக்கு மாற்றும் நடவடிக்கைகள் அவசியம். இதற்கு நான் முந்தைய பத்தியில் கூறிய விடயங்கள் சாத்தியப்பட வேண்டும். விவசாயத்துறையில் நவீனம் என்று கூறுகையில் அதற்கான உள் கட்டுமானம் மிக முக்கியம். உதாரணமாக குளிர்ச்சாதன வசதி கொண்ட கிட்டங்கிகள் மற்றும் பதனிடும் அறைகள் கொண்ட கிட்டங்கிகள் குறு விவசாயிகளையும் சென்றடைய வேண்டும். தங்களது விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்கும் வரை பொருட்களை சேமித்து வைக்க இந்த வசதிகள் அவசியம். இதற்கு தமிழகத்தில் தோற்றுப்போன கூட்டுறவு முறையே சரியானது. "அமுல்" போன்ற கூட்டுறவுகளின் வெற்றிக் கதைகள் மூலமாக கூட்டுறவு குறித்த விழிப்புணர்வை குறு விவசாயிகளிடத்தில் ஏற்படுத்த வேண்டும். மண் பரிசோதனை தான் மாற்றுப் பயிருக்கான முதல் படி. இது சாமானிய விவசாயியையும் சென்றடைய கூட்டுறவு முறை அவசியம். கூட்டுறவு மற்றும் வாரியங்கள் அரசியல் தலையீடு இன்றி இயங்க சுதந்திரம் வேண்டும். சிறு குறு விவசாயிகள் எக்காரணம் கொண்டும் அரசாங்கத்தை எதிர்பாராத நிலையை உருவாக்க வேண்டும். வங்கி வசதிகள் சிறு குறு விவசாயிகளை எட்டும் படி இருக்க வேண்டும். மறுபடியும் ஏற்கனவே விட்ட இடத்திற்கே வருகிறேன். சிறு குறு விவசாயிகளின் வளங்களை ஒருங்கிணைத்து, வங்கிகளை அணுகினால் மட்டுமே இது சாத்தியம். அதற்கு கூட்டுறவு அவசியம். கார்ப்பரேட் எனப்படும் பெருநிறுவனங்களோடு போட்டியிட வெற்றிகரமான கூட்டுறவு முறையால் மட்டுமே சாத்தியம். பெருநிறுவன முறையில் (கூட்டுறவால்) லாபகரமாக விவசாயம் நடக்க வேண்டும். கல்வி பரவலாக்கப்பட வேண்டும். விவசாயத்தில் நவீன மேலாண்மையை புகுத்தல் அவசியம். மேலாண்மை பாடங்களில் விவசாயம் சார்ந்த மேலாண்மை படிப்புகள் அவசியம். முதலீடு, செலவு, லாபம் என்ற நோக்கோடு மேலாண்மை செய்யப்படும் விவசாயம் சாத்தியமே.

மிக முக்கியமாக தொலைநோக்கு திட்டங்கள் உள்ளடக்கிய அரசியல் இடையூறு இல்லாத தன்னிச்சையாக ஆய்வுகள் செய்து அரசு இயந்திரத்தை இயக்கும் பொருளாதார அமைப்புகள் தேவை. ஐபிஎஸ் அல்லாத ரகுராம் ராஜன் போன்ற பொருளாதார நிபுணர்கள் உள்ளடக்கிய சுதந்திர அமைப்பாக அது இயங்க வேண்டும். பொருளாதார நிபுணர்களை தமிழகத்தில் வளர்த்தெடுப்பதோடல்லாமல், சமூக மற்றும் பொருளாதார நிபுணர்களுக்கு அதி முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். ஏற்கனவே பதிவு பெரிதாக உள்ளது. இன்னும் நிறைய பெரிய பெரிய பேராசைகள் உள்ளன. நன்றி.

- நாடோடி Nomad

 #மூன்றாவது_மொழி_அவசியமில்லைமத்தியில் ஆள்பவர்களிடத்தில் (காங்கிரஸ் காலம் முதலிருந்தே) தொன்று தொட்டே இணைப்பு மொழி ஒன்று வ...
07/04/2025

#மூன்றாவது_மொழி_அவசியமில்லை

மத்தியில் ஆள்பவர்களிடத்தில் (காங்கிரஸ் காலம் முதலிருந்தே) தொன்று தொட்டே இணைப்பு மொழி ஒன்று வேண்டும் என்ற வாதம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. தற்போது அது கொள்கை அடிப்படையில் வலுப்பெற்று கல்வியில் முற்றிலுமாக கால் பதிக்கிறது. ஒரு தேசத்தின் சரித்திரத்தை வரலாற்றுச் சான்றுகளை தவிர்த்து இதிகாசங்கள் மற்றும் புராணங்களின் அடிப்படையில் கட்டமைக்கும் பாசிச ஆட்சியாளர்களிடம் நாம் வைக்கும் வாதங்கள் எடுபடுமா என்று தெரியவில்லை! இருப்பினும் நம் வாதங்களை முன்வைப்போம். இந்தியாவின் தேசியவாதம் (Nationalism) மேற்கத்திய நாடுகள், மத்திய அல்லது கீழை நாடுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. பெரும்பாலான தேசங்கள் கலாச்சாரம் (மொழி உட்பட) அல்லது இனத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. அதனால்தான் அவர்களது ஒரு தேசத்தில் மொழி மற்றும் இனத்தில் பெரும்பாலும் ஒற்றுப் போனவர்களாக இருப்பார்கள். இந்தியா அது போல் ஒரே இனம் அல்லது கலாச்சாரத்தின் அடிப்படையில் உருவான தேசம் கிடையாது. பல்வேறு மொழி, கலாச்சார, இன மக்களை அவர்களுக்குள் ஒத்துப்போன ஒற்றை 'அவசியத்தின்' காரணமாக உருவானது இந்திய தேசிய உணர்வு. அந்த ஒற்றை அவசியம் "ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற வேண்டியது" என்பதேயாகும்! ராம ராஜ்ஜியம் அமைப்பதற்காக தூண்டப்பட்டதல்ல இந்திய தேசிய உணர்வு!!

காந்தியின் வரவுக்கு முன்பிருந்தே (தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்புவதற்கு முன்பிருந்தே) இந்தியாவில் விடுதலை போராட்டங்கள் ஒரு நூற்றாண்டாக நடந்து கொண்டு தான் இருந்தது. ஆனால் அது ஒருங்கிணைந்த போராட்டமாக இல்லை. அது வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு காரணங்களுக்காக நடத்தப்பட்ட போராட்டங்களாக பார்க்கப்பட்டது. எந்த காரணங்களுக்காக போராடினாலும், போராட்டம் ஆங்கிலேயருக்கு எதிரானது என்ற ஒரு ஒற்றுமை இருந்தது. அந்த ஒற்றுமையின் அடிப்படையில் தேசிய உணர்வை தூண்டி தேசத்தை கட்டமைக்கும் யோசனையை செயல்படுத்த முனைந்தது காந்தி தான். அதன் பின்னர் அரசியல் காரணங்களுக்காகவே இந்தியா ஒற்றை தேசமாக தொடர்ந்தது. இருப்பினும் பாதுகாப்பு, வளங்களின் பகிர்தல், பொருளாதார வளர்ச்சி போன்ற காரணங்களால் இந்தியா ஒற்றை தேசமாக தொடர வேண்டிய அவசியம் உள்ளது. பாதுகாப்பு, வளங்களின் பரிமாற்றம், பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியாவின் பன்மைத் தன்மை என்றுமே பெரும் தடையாக இருந்ததில்லை. மாநிலங்களுக்குள் நதி நீர்ப் பங்கீடு போன்ற சிக்கல்கள் இருந்தாலும், அது அரசியல் காரணங்களுக்காகவே முடிக்கப்படாத சிக்கல்களே தவிர அந்த சிக்கல்களுக்கு மொழி கலாச்சார வேறுபாடுகள் காரணம் இல்லை. மற்றபடி சரக்கு பரிமாற்றம், தொழில், பணப்பரிமாற்றம், மாநிலங்களுக்கு வெளியேயான வேலை வாய்ப்புகள், மாநிலங்களுக்கு இடையேயான இடப்பெயர்வு போன்றவற்றுக்கு மொழி ஒரு தடையாக இருந்ததே இல்லை. ஆக பொருளாதார வளர்ச்சிக்கு மொழிகள் என்றுமே தடையாக இருந்ததே இல்லை.

மாநில எல்லைகளை கடந்து தொழில் செய்பவர்கள், அதே போல இடம்பெயர்ந்தவர்கள், தொழில் வளர்ச்சி மற்றும் அவர்களது வளர்ச்சி கருதி அந்தந்த மாநிலங்களின் மொழியை கற்றுக் கொண்டு வளர்ந்துள்ளனர். அரசாங்கத்தின் இணைப்பு மொழியாக ஆங்கிலம் உள்ளது. ஆங்கிலம் அதற்கானதாக மட்டுமில்லாமல் வேலைவாய்ப்பு போன்றவற்றில் அந்நியச் செலாவணி ஈட்ட முக்கிய காரணியாகவும் உள்ளது. இந்த சக்தி தமிழ் அல்லது இந்தி உட்பட வேறு எந்த இந்திய மொழிக்கும் கிடையாது. கசப்பானாலும் இதான் உண்மை. பொருளாதார கலாச்சார ரீதியிலும் மூன்றாவது மொழி அவசியமில்லை என்பதற்கு இந்த கட்டுரையில் முன் வைத்த காரணங்கள் போதுமானது என்றாலும் நான் முதலில் குறிப்பிட்டது போல இதிகாசங்களையும் புராணங்களையும் அடிப்படையாகக் கொண்டு தேசியத்தை கட்டமைக்க முனையும் வலதுசாரிகளிடம் இந்த வாதங்கள் எடுபடுமா?

- நாடோடி Nomad

 #உத்திநான் பயின்ற மேல்நிலை பள்ளி ஒரு அரசு உதவி பெறும் பள்ளி. வணிகவியல் வகுப்பில் முப்பது பேர் இருந்தோம். கணக்கு பாட வேள...
30/03/2025

#உத்தி

நான் பயின்ற மேல்நிலை பள்ளி ஒரு அரசு உதவி பெறும் பள்ளி. வணிகவியல் வகுப்பில் முப்பது பேர் இருந்தோம். கணக்கு பாட வேளையில் மட்டும் ஒரு பத்து பேர் விஞ்ஞான பிரிவு மாணவர்களோடு அவர்கள் வகுப்பில் அமர்ந்து கொள்வோம். வணிகவியல் மீதி மாணவர்களுக்கு சரித்திர பாடம் நடக்கும்.

எனக்கு கணக்கு எடுத்த ஆசிரியர் பெயர் கூற விரும்பவில்லை. மிகத் திறமையான ஆசிரியர். ஆனால் நல்ல ஆசிரியர் என்று கூற முடியுமா எனத் தெரியவில்லை! ஏனெனில் பாடங்களை எந்த விதத்திலும் அரைகுறையாக இல்லாமல் முழுமையாக முடித்து விடுவார். ஆனால் வகுப்பில் கேட்கும் சந்தேகங்களுக்கு விடை தர மாட்டார். சந்தேகங்களை தனி வகுப்புகளில் (டியூசன்) மட்டுமே தீர்த்து வைப்பார். தனது வீட்டு மொட்டை மாடியில் ஒரு கூரை வேய்ந்திருப்பார். அதில் காலை ஐந்து முதல் ஆறு வரை ஒரு அணிக்கு தனி வகுப்பு நடக்கும். பின்னர் ஆறு முதல் ஏழு, மாலை ஆறு முதல் ஏழு, ஏழு முதல் எட்டு, எட்டு முதல் ஒன்பது என ஐந்து அணியாக தனி வகுப்பு நடக்கும். அத்தனை வகுப்பும் நிரம்பி வழியும். அரசு சம்பளம் மற்றும் தனி வகுப்பு கட்டணம் என்று மதுரை அண்ணாநகரிலேயே ஆயிரத்து இருநூறு சதுரடியில் நான்கு வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டு விட்டார். அது பிரச்சினை இல்லை. ஆனால் அவரது வகுப்பில் பயிலும் அனைவரும் அவரது தனி வகுப்புக்கு வந்தே ஆக வேண்டும். இல்லையெனில் அவரது வகுப்பில் காலம் தள்ளுவது மிகவும் கடினமாகி விடும்!!

விஞ்ஞான பிரிவில் ஏற்கனவே நூறுக்கும் மேல் மாணவர்கள் இருப்பார்கள். அதில் நாங்கள், வணிகவியல் பிரிவு மாணவர்களும் சேரும் போது எம்ஜிஆர் இறந்த பிறகான காலத்து சட்டசபை கூட்டம் போலாகி விடும்! ஒரு முறை வகுப்பில் சத்தம் அதிகமாக இருக்க, அவர் எவ்வளவோ கூறியும் எங்கள் சத்தம் அடங்கவில்லை. அடுத்த நாளில் இருந்து அவர் பாடம் நடத்தும் விதம் விநோதமாக மாறியது. அதுவரையில் கரும்பலகையில் எழுதிவிட்டு எங்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தவர், அதன் பிறகு கரும்பலகைக்கு பாடம் நடத்த ஆரம்பித்தார். அதாவது அவர் பாடம் நடத்தும் குரல் கரும்பலகையை தாண்டி வராது! முதல் பலகையில் (பெஞ்ச்) அமர்ந்திருந்தவர்களுக்கே கேட்கவில்லை!! கணக்கில் ஒரு பாடம் (சேப்டர்) முழுக்க இவ்வாறு நடத்தி முடித்தார். அதன் பிறகு வகுப்பறையில் அவர் நடத்துவது கேட்காததால், அது கேட்கும் வண்ணம் நிசப்தம் நிலவியது. ஆனாலும் அவர் பேசியது கேட்கவில்லை.

கடைசியில் ஒரு முப்பது மாணவர்கள் ஒன்று சேர்ந்து அவரை ஆசிரியர்கள் அறை வாசலில் சந்தித்து மன்னிப்பு கோரினோம்! "தம்பி இப்படி நடத்துறதே நல்லா இருக்கே..! எனக்கும் தொண்டைக்கு இதமா இருக்கு... வகுப்பறையும் அமைதியா இருக்கு... இத ஏன் மாத்தணும்...?!!!", என்று நக்கல் செய்தார். வேறு வழியின்றி காலில் விழாத குறையாக மன்றாடி அவரை பழையபடி பாடம் நடத்த வைத்தோம்! ஆனால் இந்த சூழலிலும் அந்த பாடத்தை தனி வகுப்புகளில் நல்லபடியாக நடத்திக் கொடுத்தார் என்று கேள்விப்பட்டோம். அவரது இந்த உத்தி இன்றைய குழந்தைகளிடம் செல்லுபடியாகுமா என்று தெரியவில்லை. ஆனாலும் அவர் நான் கேள்விப்பட்ட வரையில் எந்த மாணவர்களையும் கை நீட்டி அடித்ததில்லை. அதற்கான மாற்று உத்திகளை மட்டுமே கையாண்டார். ஆனாலும் அவர் ஒரு உதாரண ஆசிரியர் கிடையாது. ஆனால் கையாண்ட உத்திகள் ஒரு வகையில் உதாரணங்களே.

அதன் பிறகு அவர் அதே பள்ளியில் துணை முதல்வராகவும், முதல்வராகவும் இருந்து ஓய்வு பெற்றார்.

- நாடோடி Nomad

Address

Trichy
Tiruchirappalli

Telephone

+917867964982

Website

Alerts

Be the first to know and let us send you an email when நாடோடி Nomad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to நாடோடி Nomad:

Shortcuts

Share

Category