19/08/2025
குழந்தைகளும் , சமூக அங்கீகாரமும்.
சமூக அங்கீகாரத்திற்கு ஏங்காத மனிதர்களே இல்லை எனலாம். நீங்கள் எதைச் செய்தாலும் "பிறரிடம் கேட்டுச் செய்"என்ற சமூக அங்கீகாரம் ஒரு வாழ்க்கைத் தரமாகவே மாறிவிட்டது. எந்த சமூக , தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களும் ஒரு தனி மனிதனின் சுதந்திரமான எண்ணங்களை எளிதாக ஏற்றுக் கொள்வதில்லை. கலாச்சாரத்திலும் சமூக அங்கீகாரம் உண்டு. அவ்வாறு சமூக அங்கீகாரம் பெற்றுச் செய்யாத காரியங்கள்,அப்படி செய்பவர்களை சுயநலவாதி என்றும், அடுத்தவர்களைப் பற்றி கவலை இல்லாதவர்கள் என்றும் முத்திரையிடப்படுகின்றார்கள். இவ்வாறு சமூக அங்கீகாரம் தேடும் செயல்கள்கள் வீட்டிலிருந்து தொடங்கி எல்லா சமூக பரப்புகளிலும் தற்போது வரை தொடர்கிறது. "எதை உண்ண வேண்டும்? எதை உடுக்க வேண்டும் ?"என்பது போன்ற எண்ணங்கள் நமது சமூக அங்கீகாரமாக நமக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது. இதை மீறினால் சமூகத்தினால் அந்த நபர் நிராகரிக்கப்படுகிறார். வீட்டில் குழந்தைகளும் அவ்வாறே சொல்லி வளர்க்கப்படுகிறார்கள். நாளடைவில் குழந்தைகளின் எல்லா செயல்களுக்கும் பெற்றோர்களை சார்ந்து இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். சமூக அங்கீகாரம் என்பது பெற்றோர்களால் சொல்லிக்கொடுக்கப்பட வேண்டியது என்பதை விட, குழந்தைகளாக தெரிந்து கொள்ள வேண்டியது ஆகும். குழந்தைகள் தன் சுய மதிப்பை உணரும் போது ,அவர்கள் தங்களுடைய சமூக அங்கீகாரத்தை உணர்கிறார்கள்,மற்றபடி பிறர் கொடுக்கும் சமூக அங்கீகாரத்தினால் அல்ல. கலில் ஜிப்ரான் என்ற தீர்க்கதரிசி கூறியதைப் போல, உங்கள் குழந்தைகள் அவர்கள் வாழ்க்கையை வாழ வந்தவர்கள், அவர்கள் உங்கள் வழியாக வந்தாலும், உங்களுடன் வாழ்ந்தாலும், இருந்தாலும், அவர்கள் உலகத்துக்கானவர்கள். ஆகவே சமூக அங்கீகாரத்திற்காக மட்டும் குழந்தைகளை வளர்க்காமல், அவர்களுடைய சுய மதிப்பையும், அவர்கள் அவர்களாகவே உணர்ந்து கொள்ளும்படி அவர்களுக்கானதை செய்ய வேண்டும்.
Your Erroneous Zones
Dr.Wayne W Dyer.