25/09/2016
இன்றைய நவீன உலகத்தில், "பல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும்; சில விஷயங்களில் சிறப்பானவனாக வளர வேண்டும்" என்பதுதான் வெற்றிக்கான விதிமுறை. பள்ளிப் பருவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட விளையாட்டுகளை விளையாடிப் பழகிய குழந்தைகள், ஒரே ஒரு விளையாட்டில் மட்டுமே பங்கெடுத்த குழந்தைகளை விட சிறப்பான ஆளுமைத்திறன் உள்ளவர்களாக எதிர்காலத்தில் வளர்வார்கள். அதனால்தான் ஒரு கிரிக்கெட் வீரருக்கு பயிற்சியளிக்கும்போது, பயிற்சியாளர்கள் அவரை வாலிபால், புட்பால் போன்ற விளையாட்டுகளிலும் அவ்வப்போது பங்கெடுத்து பயிற்சி பெறச்செய்வார்கள். வளரும் வயதில் ஒரே ஒரு துறையில் மட்டுமே கவனம் செலுத்திய குழந்தைகளை விட இவர்கள் அதிக சிறப்பானவர்களாக வளர்வார்கள் என்பதுதான் இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளும்போது அந்த அனுபவ அறிவு வாழ்க்கையின் சவால்களை பயமில்லாமல் சந்திக்கக்கூடிய தன்னம்பிக்கையை உங்களுக்குக் கொடுக்கும். வளரும் பருவத்திலேயே அனுபவம் பெற்ற அவன், வளர்ந்த பிறகு தோல்விகளைக் கண்டு நிச்சயம் பயப்படவே மாட்டான் என்பதைப் பெற்றோர்களாகிய நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். தோல்வியால் துவண்டு போகாமல், "என்ன.. நான் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் அவ்வளவுதானே!" என்ற ரீதியில்தான் தோல்வியைப் பற்றிய அவனுடைய அணுகுமுறை இருக்கும். உங்கள் மகன் எதில் சிறப்பானவனாக இருக்கிறான் என்று யோசிப்பதை விட்டுவிட்டு, முடிந்த அளவிற்கு அவன் பல விஷயங்களை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுங்கள். அதன் மூலம் அவனுடைய தலைமைப் பண்பை மெருகேற்றி வளர்த்திடுங்கள்.