05/05/2020
நமது பள்ளியின் முன்னாள் மாணவர்
தேசவீரனுக்கு வீரவணக்கம்!
தந்தைக்கு நேர்ந்த அதேசோகம் மகனுக்கும். எல்லையில் இறந்த தென்காசி வீரரின் குடும்பத்தை துரத்தும் துயரம்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மூன்றுவாய்க்கால் பகுதியைச் சேர்ந்தவர், சந்திரசேகர். 31 வயதான இவருக்கு ஜெனி என்ற மனைவியும் ஒன்றரை வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். சந்திரசேகர் கடந்த 2014 முதல் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் சேர்ந்து பணியாற்றி வந்தார்.
கடந்த ஒரு வருடமாக ஜம்மு - காஷ்மீரில் உள்ள குப்வாரா என்ற இடத்தில் பணியாற்றி வந்தார். எல்லைப் பகுதியில் வேலை என்பதால் சந்திரசேகரின் மனைவி ஜெனி, குழந்தையுடன் திருச்சியில் உள்ள தன் தாயுடன் வசித்து வந்தார். சந்திரசேகர் பணியாற்றிய பகுதியில் நேற்று திடீரென பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளனர். அதை எதிர்த்து சி.ஆர்.பி.எப் வீரர்களும் பதிலடித் தாக்குதல் தொடுத்திருக்கிறார்கள். இந்த மோதலின்போது சந்திரசேகர், எல்லைப் பகுதியில் வீரமரணம் அடைந்தார்.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் சந்திரசேகரின் மனைவி மற்றும் உறவினர்கள் வேதனை அடைந்தார்கள். 31 வயதான இளம் வீரரான சந்திரசேகரின் மரணம் அவரது குடும்பத்தினரை நிலைகுலைய வைத்துள்ளது. அவரது உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரின் நண்பர்கள் கூறுகையில், ``பள்ளியில் படிக்கும் காலத்திலேயே சந்திரசேகர் துடிப்பாக இருப்பார். அவருக்கு, தான் ஒரு ராணுவ வீரராகி நாட்டுக்காகப் பாடுபட வேண்டும் என்கிற விருப்பம் இருந்தது. சி.ஆர்.பி.எப் பணி கிடைத்ததும் அதை விருப்பத்துடன் ஏற்றுக் கொண்டார்.
எல்லைப் பகுதியில் அவர் வீர மரணம் அடைந்த தகவல் கிடைத்திருப்பது மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சந்திரசேகரின் தந்தை செல்லச்சாமி, அச்சன்புதூர் காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்தவர். அவரும் பணியில் இருந்தபோதே உயிரிழந்தவர்” என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
நாட்டுக்காக தன் உயிரைப் பறிகொடுத்த நம் சகோதரருக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.
வீரவணக்கம் வீரவணக்கம்...
சந்திரசேகரனுக்கு வீரவணக்கம்..