04/09/2023
என் வாழ்க்கையின் முதல் “தேவதை”
மனதில் நின்ற மகத்தான மனிதர்கள் என்ற இத்தொடரை எழுத முற்ப்பட்டபோது முதலில் என் நினைவில் வந்தது, அந்த தேவதையின் முகம்தான்.
ஒரு நிகழ்வை கூற விழைகிறேன்…
நான்காம் வகுப்பில் பயிலும் ஒரு மாணவன், தொடர்ந்து மூன்று நாட்கள் பள்ளிக்கு வரவில்லை. பரீட்சைகள் நடைபெறும் காலம் அது. வகுப்புக்கு வராததின் காரணத்தை அறிய முற்ப்பட்ட ஆசிரியை சக மாணவர்களில் இரண்டுபேரை அனுப்பி அவனை பள்ளிக்கு அழைத்துவரச் சொன்னார்.
அங்கு வேறு வானிலை…
சுருக்கிச் சொல்ல முயல்கிறேன்,
தாய் கூலி வேலைக்குப் போனால்தான் தனது மூன்று குழந்தைகளுக்கும் எதாவது செய்யமுடியும் என்ற நிலையில், நோய்வாய்ப் பட்டுள்ள தனது ஒன்பது வயது மூத்த மகனை வீட்டின் முன் நிற்கும் வேப்பமரத்தின் நிழலில் ஒரு கோரைப்பாயை விரித்து, கிடத்தி, தலைமாட்டில் குடிக்க கொஞ்சம் தண்ணீரும் தேவையான மருந்தையும், தேவைப்படும் தைரியத்தை வார்த்தைகளாகவும் கொடுத்துவிட்டு கூலி வேலைக்கு சென்றுவிட்டார்.
தேடி வந்த மாணவர்களுக்கு நிலையின் வலி புரியவில்லை போலும், அச்சகமாணவனை பள்ளிக்கு வற்புறுத்தி அழைத்தனர்.
நடப்பதைப் பார்த்த பக்கத்துவீட்டு அம்மா, நிலையை அறிந்து, உடனே வந்து, அச்சிறுவனை துக்கி தன் இடுப்பில் சுமந்து, வேகாத வெய்யிலில் நடந்து சென்று ஆசிரியையின் முன் நின்றார்.
நடந்ததை அறிந்த ஆசிரியை மனமுறுகினார், தவறு செய்ததைப் போல உணர்ந்திருக்கக் கூடும், வருந்தம் தெரிவித்தார், மன்னிப்பு கேட்டார்.
சில நாட்களுக்குப் பின் பள்ளிக்கு வந்த அச்சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி, அவனுக்காக வாங்கி வைத்திருந்த ‘Complan’ பொதியை அவனிடம் நீட்டினார் அந்த ஆசிரியை. அந்த பொதி அச்சிறுவனுக்காக நான்கு நாட்களேனும் காத்திருந்திருக்கக் கூடும். மகிழ்சியில் நன்றி சொல்லக் கூட மறந்தான் அவன்.
ஆசிரியர்களின் கைகளில் பிரம்பை மட்டுமே பார்த்திருந்த அவன் முதன்முறை அன்பை பெறுகிறான். தன்னம்பிக்கை பிறகிறது, முதன்முறை ஒரு ஆசிரியரைப் பிடிக்கிறது. அவர் கற்றுத்தரும் பாடம் புரிகிறது.
1999 இல் அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு வீட்டிலிருந்து பள்ளிக்கு வரும் எனக்கு அந்த ஆசிரியை தேவதையைப் போல காட்சியளித்தார்.
மேசையைச் சுற்றி மாணவர்களை நிறுத்தி அறிவியல் பாடத்தை படம் வரைந்து கற்றுத்தந்த அந்த ஆசிரியை அன்பின் மொத்த உருவம். எங்ளுக்கு முதன்முதலில் ஆங்கில எழுத்துக்களை கற்றுத்தந்தவரும் அவர்தான்.
அவர்தான் என் வாழ்க்கையின் முதல் “தேவதை”.
அந்த ஆசிரியரின் பெயர் : திருமதி. கோமதி மிஸ்
அந்த சிறுவனின் பெயர்: பால் சாமுவேல் +91 9715002662
பள்ளியின் பெயர் (அப்போது): ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி
ஊர்: பனப்பட்டி, கோயம்புத்தூர்.
நீண்ட வருடங்கள் ஓடிவிட்டன… அவரைப் பற்றி எந்த தகவலும் தெரியாது… சந்திக்க முற்படும் போதெல்லாம் எதோ ஒரு தயக்கம்… இந்தப் பதிவு அவரைச் சென்றடைய விரும்புகிறேன்.
நான் சந்திக்க விரும்பும் மிக முக்கியமான, என் மனதில் நிற்கும் மகத்தான மனிதர் “திருமதி. கோமதி மிஸ்”