14/03/2021
நீளமான பதிவுதான் என்றாலும்
நினைவு அகலா பதிவு
[ நேற்றைய பதிவின் தொடர்ச்சி ]
********************************************
பணியிட மாறுதல் அல்லது பணிநிறைவு பெறும் ஆசிரியர்களை
பாராட்டும்போது பொதுவாக ' உங்கள்
இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது ' என்று எல்லோரையுமே பாராட்டுவது வழக்கம் . ஆனால் அது
ஆழி அய்யாவை பொறுத்தவரை நூறு சதவீதம் உண்மை .
ஆழி அவர்கள் 2000 ல் ஓய்வுபெற்ற பிறகு அந்த பணியிடம் நிரப்பப் படாமலேதான் உள்ளது . அய்யாதான்
எங்கள் பள்ளியின் கடைசி கலையாசிரியர் . அய்யாவுக்கு பிறகு
அந்த இடத்தையே நீக்கிவிட்டது அரசு
ஆனால் அய்யாவை தற்கால மாணவர்களும் நினைவுகூரும் வகையில் அவர் எழுதிய ' நேர்மை '
என்னும் சிறுகதையை ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்தில் துணைப்பாடமாக அரசு வைத்துள்ளதால் ஆழி சார் அவர்கள்
தமிழ்நாடு முழுவதுமே மாணவர்களால் / ஆசிரியர்களால் நினைக்கப்படுகிறார் என்பது பெருமைக்குரியதாகும் .
40 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் / அலுவலர்களை கொண்டிருந்த எங்கள் குழுமத்தில் என்மீது அய்யாவுக்கு அன்பும் அக்கறையும்
அதிகம் என்றே சொல்லலாம் .
1994 ல் காலாண்டுத் தேர்வின் கடைசி நாள் . நன்றாக நினைவில்
உள்ளது .
" வாங்க , எம் எஸ் , கிரவுண்ட் வரை
நடந்துட்டு வருவோம் " என்று அழைத்தார் . இருவருக்கும் தேர்வறை பணியில்லை .
கிரவுண்ட் ல நடக்கும்போதே எதேச்சையாக சொல்வது போல்
" நம்ம பள்ளக்கூடத்துல
நாலைந்து பேருக்கு சிகரெட் பழக்கம் இருப்பது தெரியும் , ஆனால் உங்களிடம் மட்டுமே சொல்ல தோனுச்சு , சொல்றேன் . . . வேண்டாமே அந்த பழக்கம் . . . " என்று
சொன்னவுடன் மிகவும் சங்கோஜமாகி விட்டது எனக்கு .
" இனிமே விட்டுடுறேன் , சார் . " என்றேன் , நிமிர்ந்து பார்க்கும் நிலையற்றவனாய் . அந்த நாள் தான் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக பலமுறை முயன்றும் விட முடியாதிருந்த அந்த கெட்டப் பழக்கத்திலிருந்து நான் விடுதலை அடைந்த நாள் ஆகும் .
விடுமுறைக்கு பிறகோ வெளியில்
எங்குமோ சந்திக்க நேர்ந்தால்
விஸ்வபாரதி , பிரசாந்த் நல்லா இருக்காங்களா , எம் எஸ் ? " என்று
அன்புடன் என் பிள்ளைகளின் நலம் விசாரிப்பார் .
" எப்படி சார் பேரெல்லாம் நினைவிருக்கு ? " எனறு கேட்டபோது
இப்படி சொல்வார் .
ஒருமுறை பெயர் தெரிந்தால் உங்கள் பெயரோடு உங்கள் குழந்தைகளின்
பெயர்களையும் இணைத்து விடுவேன் . மொட்டையாக குழந்தைகள் என்று சொல்வதைவிட இப்படி பெயரை குறிப்பிடுங்கள் . அவர்கள் மீது நமக்கிருக்கும் அன்பையும் அக்கறையையும் காட்டுவதாக அமையும் . நீங்களும் செய்து பாருங்களேன் ' என்பார் .
அந்த பண்பு நான் அவரிடம் இரவல் பெற்ற இனிய பண்பு என்பதில் ஒரு மகிழ்ச்சி .
இருபது அடி உயரத்தில் கயிறு மீது கழைகூத்தாடி நடப்பதை விடவும் இன்னொரு பேலன்ஸ் எல்லோருக்கும் தெரிந்திருக்கனும் .
அம்மாவுக்கும் மனைவிக்கும் இடையில் பேலன்ஸ் தவறாமல் நடப்பது எவ்வளவு பெரிய வித்தை தெரியுமா ? என்பார் . முடிந்தவரை அந்த வித்தையை கற்றுக்கொண்டேன் .
காலை ஆறு டூ எட்டு , மாலை ஐந்து டூ ஒன்பது என்று ட்யூசனில் பிஸியாக இருந்த நேரம் .
ஆங்கிலம் , கணிதம் போல தாய்மொழிக்கும் வீட்டில் இடமுண்டா எம் எஸ் ? என்றார் ஒருநாள் .
இல்லை சார் . தமிழ் நடத்துவதில்ல
என்று நான் சொன்னவுடன் " இல்லை
எம் எஸ் , நான் உங்க அம்மாவை கேட்டேன் . . . " என்றதும் எனக்கு உரைத்தது .
"அம்மா என்கிற பாடத்திட்டம் ரொம்ப பழசு . எப்ப வேண்டுமானாலும் நீக்கிடலாம் . அதுக்கும் ரெண்டு பீரியட்ஸ் நேரம் ஒதுக்கலாமே " என்றார் .
அன்று முதல் மாலை ஏழு மணியுடன் ட்யூசனை நிறுத்திவிட்டேன் . அதன் பிறகு ஆங்கிலத்தையும் கணிதத்தையும்
அப்புறப்படுத்தி விட்டு அம்மாவுடனும் குழந்தைகளுடனும் அன்பு மொழி
ட்யூசன் மட்டுமே என்று வழக்கப்படுத்திக்கொண்டேன் .
ஆழி அவர்களின் கைவண்ணம் எனக்கு கைவரவில்லை , ஆனால்
அவரது கால்வண்ணம் காட்டிய
வழியை இன்னமும் நான் மறக்கவில்லை .
ஆழி அய்யாவால் நிர்வகிக்கப்பட்ட சித்ரகலா பதிப்பகமும் ஆப்செட் பிரின்டர்ஸ் நிறுவனமும் அவர்தம் புதல்வர்கள் சிறப்பாக செயல்படுவது அவரையே பார்க்கும் ஆனந்தத்தை தருவதாகும் .
ஆழி சார் போலவே அவரது புதல்வர் திரு ஆழி சத்தியன் அவர்களும் எழுதுவதிலும் வரைவதிலும் வல்லவர் . கவிதை நூல்கள் பல வெளியிட்டுள்ளார் .
எனது மூத்த மகன் திருமணத்திற்கான அழைப்பிதழுக்கு
அட்டை வாங்கியதிலிருந்து அழகுற
வடிவமைத்து ஸ்கிரீன் பிரிண்டிங்
செய்து விட்டுக்கு அனுப்பியது வரை
அவரே எனக்காக எடுத்துக் கொண்ட
பணியாகும் . அப்பாவின் நண்பர் என்ற முறையில் மிகவும் குறைந்த தொகையே பெற்றுக்கொண்டார் .
எனக்கு மட்டுமல்ல , அவர் தந்தையுடன் பணியாற்றிய ஆசிரியர்கள் / மாணவர்கள் யாராயிருப்பினும் ஆழி சத்தியனின்
சலுகை நிச்சயம் உண்டு .
நீண்ட இடைவெளிக்கு பிறகு அவருடன் நேற்று ஃபோனில் பேசியதில் ஆழி சாருடன் பேசியதாய் நெகிழ்ந்து போனேன் . அதே மாறா அன்பு , அடக்கம் . . .
பத்தாண்டுகளுக்கு முன் இதே நாளில் ஆழி சாருக்காக அழுத வரிகளில் ஒன்று . . .
' ஆழியிடம் கேட்டிருந்தால் _
ஒன்றுக்கு பத்தாக
ஓவியங்கள் தந்திருப்பார் _ ஆனால்
கடவுளும் ஒரு களவாணி போலும் !
ஏனோ _ அந்த
தூரிகையை பறித்து விட்டான்
தொலைதூரம் கடந்து விட்டான் !
__ ஆழியுடன் பயணித்த ஆசிரியர்களும் அவரே பயில்வித்த
மாணவர்களும் .