21/07/2017
நீட் குழப்பங்கள் குறித்து மருத்துவர் Chinnappan M எழுதியிருக்கும் முக்கியமான பதிவு. இதெல்லாம் பரபரப்பான நாளிதழ்களில் வரவேண்டியது!
-----
எல்லோரும் பேசவேண்டிய, குரலெழுப்ப வேண்டிய ஒரு பிரெச்சனையைப் பற்றிய புரிதல் பிழை பரவலாக இருப்பதால் அதனைப் பற்றி அந்த துறையில் இருப்பவன் என்ற முறையில் கொஞ்சம் தெளியவைப்பது அவசியம் என்று நினைக்கிறேன். நீட் பிரெச்சனையைதான் சொல்கிறேன். பிக் பாஸ் வந்துவிட்டது, கமல் வேறு லைட்டாக பிடரியை சிலுப்பியிருக்கிறார், நீட் இப்போது டிரெண்டிலேயே இல்லையே என்ற பெருமூச்சின் சூடு எனக்கு தெரிகிறது. அடுத்தடுத்த அதிர்ச்சிகள் நீட் தரப்பிலிருந்து நம்மை நோக்கி செலுத்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அவை எந்த அதிர்வுகளையும் ஏற்படுத்தாமல் அப்படியே உள்ளே விஷமாக இறங்கிக்கொண்டிருக்கின்றன. பேசவேண்டும்.
சில அடிப்படையான விஷயங்களை முதலில் சொல்லிவிடுகிறேன். மருத்துவ கல்வியில் மூன்று நிலையில் மாணவர்சேர்க்கை நடக்கிறது.
இளநிலை- எம்.பி.பி.எஸ் (ஆறு வருடங்கள்) - முதல் நிலை
பட்டப்படிப்பு - எம்.எஸ்/ எம்.டி (மூன்று வருடங்கள்) - இரண்டாம் நிலை
பட்டமேற்படிப்பு- எம்.சிஹெச்/டி.எம் (மூன்று வருடங்கள்)- மூன்றாம் நிலை
இந்த மூன்று நிலைகளிலுமே நீட் தேர்வு முறை மிகப்பெரிய குளறுபடியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொன்றாக சொல்கிறேன்.
முதல் நிலை:
தமிழகத்தில் இருக்கும் எம்.பி.பி.எஸ் சீட்களில், 85% மாநில கலந்தாய்விற்கும், 15% தேசிய அளவிலான கலந்தாய்விற்கும் பிரித்துவழங்கப்பட்டு வருகின்றன. இதில் அந்த 15%க்கு மட்டும் இத்தனை வருடங்கள் தேசிய அளவிலான நுழைவு தேர்வு நடத்தப்பட்டன. எஞ்சிய 85%க்கு +2 தேர்வு முடிவுகளின் அடிப்படையில் நுழைவுத்தேர்வின்றி மாணவர் சேர்க்கை நடைப்பெற்றுவந்தது. நீட் நடைமுறைப்படுத்த போகிறோம் என்று மூன்று வருடங்களுக்கு முன்னரே அறிவிப்பு வந்துவிட்டது. அது முழுக்க முழுக்க சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் வழி நடத்தப்படும் தேர்வு என்றும் முன்னரே அறிவிக்கப்பட்டுவிட்டது. மறந்த முதல்வர் ஜெயலலிதா தமிழகத்திற்கான தற்காலிக விலக்கு வாங்கிக்கொண்டுவந்தார். இரண்டு வருடங்கள் கடந்தன. ஆனால் அந்த தற்காலிக விலக்கு எதற்காக கொடுக்கப்பட்டது என்பதையே ஜெயலலிதா செளகரியமாக மறந்துப்போனார். இரண்டு வருடங்களுக்குள் நாம் நம் தமிழக பாடத்திட்டத்தை மாற்ற (சி.பி.எஸ்.சி'க்கு ஒத்திசைத்து) கொடுக்கப்பட்ட அவகாசம். அவ்வளவே. இவர்கள் புத்தகத்தில் எழுத்துப்பிழையைக் கூட சரிசெய்யவில்லை. அதே பாடத்திட்டம் அப்படியே புழக்கத்தில் இருந்தது. அம்மையாரும் இறந்துவிட்டார். கால அவகாசமும் முடிந்துவிட்டது. இந்த வருடம் நீட் நடத்தப்போகிறார்கள் என்பது ஊர்ஜிதம் ஆகியது. இங்கே ஒவ்வொருவராக மெரினாவில் தியானம் செய்தார்கள். கூவத்துரில் தந்தூரி சாப்பிட்டார்கள். நீட் அப்ளிக்கேஷன் விநியோகம் ஆரம்பித்தது. விண்ணப்பிக்க வேண்டுமா என்றே பாதி மாணவர்களுக்கு தெரியவில்லை. தமிழக அரசு ஏதேனும் மாற்று ஏற்பாடு செய்து தரும் என்ற கடைசி நம்பிக்கைக்கான ஆறுதலாக எந்தவொரு சமிக்ஞையுமில்லை. பாடத்திட்டத்தையும் மாற்றவில்லை. நீட்டையும் எதிர்க்கவில்லை,
ஒரு வழியாக நீட் நடந்தேறியது. (38% தமிழக மாணவர்கள்தான் தேர்ச்சியே பெற்றார்கள்.) அந்த தேர்வு முடிவின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்தின் 85% இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ளலாம். எஞ்சிய 15%க்கான இடங்களை தேசிய அளவிலான ஒரு கலந்தாய்வின் மூலம் (இதே தேர்வுமுடிவுகள் அடிப்படையில்) மற்ற மாநிலத்தவர் எடுத்துக்கொள்ளலாம். தமிழகத்திற்கான 85% சீட்களை பெரும்பாலும் தமிழகத்தில் சி.பி.எஸ்.சி வழி படித்த மாணவர்கள் எடுத்துக்கொள்வார்கள். அரசு தன் கையில் கொடுத்த ஒரு பாடத்தை கற்ற மாணவர்களுக்கு மிகப்பெரிய அநீதி இது. இதில் அசிங்கப்படாமல் இருக்க அரசு சில சில்லறைத்தனங்களை செய்தது. ஒன்று +2 மாநில ரேன்க் வாங்கியவர்களின் பட்டியலை மறைத்தது. பட்டியல் வெளியானால் அவர்கள் டாக்டர் ஆகவில்லை என்பது தெரிந்துவிடும். இரண்டாவது, சும்மானாச்சுக்கும் இந்த 85%க்குள் உட்பிரிவாக சி.பி.எஸ்.ஸி மாணவர்களுக்கு 15% (அதாவது மொத்தத்தில் 12.5%), மாநில பாடம் பயின்றவர்களுக்கு 85% (அதாவது மொத்தத்தில் 72.5%) என்று அரசு அறிவித்தது. நீதிமன்றம் இதனை நிராகரித்துவிட்டது. மேல் முறையீடு நடந்துகொண்டிருக்கிறது. இன்று வழக்கு விவாதத்திற்கு வருகிறது. துளியூண்டு நம்பிக்கையிருக்கிறது.
இரண்டாம் நிலை:
முன்னர் இருந்த நிலையை முதலில் சொல்லிவிடுகிறேன். தமிழகத்திலிருக்கும் மொத்த மருத்துவ முதுநிலை சீட்களில், 50%க்கு அகில இந்திய அளவிலான பொது நுழைவு தேர்வின்வழி அட்மிஷன் நடைபெறும். எஞ்சிய 50%க்கு தமிழகத்தின் தனி நுழைவுத்தேர்வு 90 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இந்த தேர்விற்கான மதிப்பெண் பட்டியல் 100 மதிப்பெண்களுக்கு வெளியிடப்படும். எஞ்சிய பத்து மதிப்பெண்கள், அந்த மாணவர் எம்.பி.பி.எஸ் முடித்து எத்தனை வருடங்கள் ஆகிறதோ அத்தனை மதிப்பெண்கள் (ஒரு வருடத்திற்கு ஒரு மதிப்பெண் வீதம், அதிகபட்சம் பத்து மதிப்பெண்கள்) மதிப்பெண் பட்டியல் வெளியானதும் தரவரிசை பட்டியல் வெளியாகும். இதில் பொது தரவரிசை ஒன்றும், அரசு மருத்துவப்பணியில் இருப்பவர்களுக்கான தனி தரவரிசை பட்டியல் ஒன்றும் வெளியாகும். காரணம் அரசு பணியில் இருப்பவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு உண்டு. இந்த அரசு பணி என்பதில், மருத்துவ கல்லூரி, அரசு தலமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்தும் அடக்கம். அதில் மலை/கடலோர/எளிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியில் இருப்பவர்களுக்கு அந்த ஆண்டிற்கு ஒன்று என்ற மதிபெண், இரண்டு என்ற சலுகையுடன் வழங்கப்படும். இது அனைவருக்கும் சிறப்பான முறையாக இருந்தது.
இந்த வருடம் என்ன நடந்ததென்றால்
1) இரண்டு தேர்வுமுறைகளை அகற்றிவிட்டார்கள்
2) ஒரே தேர்வு. நீட். ஆனால் தேசிய அளவில் ஒரு கவுன்சிலிங். மாநில அளவில் ஒரு கவுன்சிலிங்.
3) மாநில கவுன்சிலிங்கில் அரசு பணியில் இருப்பவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு கிடையாது.
இதுதான் இந்த வருட விதிமுறை. இது நடைமுறைக்கு வந்தால் அரசு பணியில் இருப்பவர்களுக்கு எந்த ஒரு சலுகையும் கிடையாது. மாறாக, எளிய, கடலோர, மலைபிரதேச பணியில் இருப்பவர்களுக்கு, வருடத்திற்கு 10% கூடுதல் மதிப்பெண் என்ற விதத்தில் அதிகபட்சம் 30% கூடுதல் மதிப்பெண்கள் பெறலாம். இதற்கு அரசு பணியில் இருக்கும் ஏனைய மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். நானும் முன்பொரு பதிவில் இதனை எழுதியிருந்தேன். ஆனால் அரசு புத்திசாலித்தனமாக இதை எதிர்கொள்வதாக நினைத்துக்கொண்டு அந்த எளிய மருத்துவமனை என்பதில் கிட்டத்தட்ட எல்லா அரசு மருத்துமனையையும் (பெரும்பாலான மாவட்ட தலைமை மருத்துவமனைகளையும் மருத்துவக்கல்லூரிகளையும் தவிர்த்து) சேர்த்துவிட்டார்கள். சிரைத்தால் மொட்டையென்று இருந்ததை வைத்தால் பெருங்குடுமி என்று ஆக்கிவிட்டார்கள்.
தேர்வு முடிவில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர், அரசு பணியில் இருப்பவர்களுக்கு 10%, 20%, 30% கொடுத்து பட்டியல் வெளியானதும் கிட்டத்தட்ட 180 வது ரேன்கிற்கு தள்ளப்படுகிறார். 600 பேருக்கான பட்டியல் வெளியானதில் பத்திற்கும் கம்மியான அரசு பணியல்லாதோர்தான் இடம் பெற்றிருக்கிறார்கள். நிச்சயமாக இது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி. அவர்கள் அதற்காக இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தடை வாங்கினார்கள். அவர்கள் கூடவே சேர்ந்து மருத்துக்கல்லூரி/ மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் பணியிலிருக்கும் அரசு மருத்துவர்களும் இந்த தடையை வாங்கியிருந்தார்கள். அதற்குள் அரசு இந்த வருடத்திற்கான சேர்க்கையை நடத்திமுடித்துவிட்டது. படிப்பில் சேர்ந்த மாணவர்கள் இந்த தடையை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வென்றுள்ளார்கள். இது முழுக்க முழுக்க ஒரு பக்கத்திற்கான சார்புநிலை. அரசு பணியில் இல்லாதோருக்கு எதிரான முட்டாள்த்தனமான சமநிலையற்ற முறை.
இந்த சிடுக்குகளை செய்திகள் நிச்சயம் சொல்லாது. அவர்களுக்கு தேவை மக்களை இன்ஸ்டண்டாக உணர்ச்சிவசப்படவைப்பது. அண்ணா நூலகத்தை இடித்து குழந்தைகளுக்கான மருத்துவமனை கட்டப்போவதாக அரசு அறிவித்தால் உடனே அதில் 'குழந்தை' 'மருத்துவம்' என்பதை பார்த்து உணர்ச்சிவசப்படுகிற பொதுபுத்தியைதான் இந்த செய்தி ஊடகங்கள் வளர்க்கின்றன. இந்த உணர்ச்சிவசத்தில் யாரும் எதிர்க்காமல் போனால், சத்தம் போடாமல் நூலகத்தை காலி செய்வார்கள். அதுதான் இந்த சம்பவத்தில் நடப்பதும்.
மூன்றாம் நிலை:
இருப்பதிலேயே அதிகம் கவனிக்கப்படாத முக்கியமான நிலை இதுதான். காரணம் முந்தைய இரண்டிலும், எக்கச்சக்க குளறுபடிகள் இருந்தாலும் 85%+15%, 50%+50% என்ற நம் மாநில விகிதாச்சாரம் அதில் பாதிக்கப்படவில்லை. தேசிய அளவிலும், மாநில அளவிலும் இரண்டு தனி கலந்தாய்வு வைத்து மாணவர் சேர்க்கை என்ற ஒப்பந்தம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், பட்டமேற்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில்தான் மிகப்பெரிய மோசடி இருக்கிறது. இத்தனை நாள் தமிழகத்திலுள்ள அத்தனை எம்.சிஹெச்/டி.எம் சீட்களுக்கான நுழைவுத்தேர்வையும் தமிழக அரசே நடத்தும். நூறு சதவிகிதமும் மாநில கலந்தாய்வின் வழியே நடத்தப்படும். அதில் 50% தமிழக அரசுப்பணியில் இருப்பவர்களுக்கான இட ஒதுக்கீடும் உண்டு. இந்த வருடம் இதற்கும் நீட். தேசிய அளவில் ஒரே தேர்வு. அதோடு நிறுத்தவில்லை. தேசிய அளவில் ஒரே கலந்தாய்வு. இதில் என்ன சூட்சமம் என்றால் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் நம் மாநிலத்தில் எம்.சிஹெச்/டி.எம் சீட்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு, குடல் அறுவை சிகிச்சைக்கான எம்.சி.ஹெச் சீட்கள் இந்திய அளவில் தோராயமாக இருபதுதான் இருக்கின்றன. தமிழகத்தில் மட்டும் எட்டு சீட்கள் இருக்கின்றன. அதாவது ஒட்டுமொத்த தேசத்தில் இருக்கும் பட்டமேற்படிப்பு சீட்களில் தமிழகத்தில்தான் கிட்டத்தட்ட 50% இடங்கள் இருக்கின்றன. இதுதான் இப்போது டார்கெட். அரசு பணியில் இருப்பவர்களுக்கும் கல்தா கொடுத்தாகிவிட்டது. தேசிய அளவில் ஒரே கலந்தாய்வு என்று அறிவிக்கப்பட்டதற்கு இப்போது வரை எந்த எதிர்வினையும் தமிழக அரசு தரப்பிலிருந்து இல்லை. காரணம் இதில் பாதிக்கப்பட போகும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு என்ற அலட்சியமாக இருக்கவேண்டும். உடம்பு முழுக்க பெரிய பெரிய அரிவாள் வெட்டுகள் இருந்தாலும், ஒன்றரை அங்குல பிளேடைக் கொண்டு கழுத்தில் ஒரு சிறு கீறல் போட்டால் சோலி முடிந்துவிடும். நீட் தேர்வினால் மூன்றாம் நிலையில் ஏற்படப்போகும் பாதிப்பு அத்தகைய சிறுகீறல்தான்.
ஒரு வருடத்திற்கான மருத்துவக்கல்வி அத்தனை நிலைகளிலும் மோசமாக குதறப்பட்டிருக்கிறது. +2 எதற்காக படித்தோம், அதற்கான தேவை இப்போது என்ன என்று நீதிமன்ற உத்தரவிற்காக 16வயது மாணவர்கள் தேங்கியிருக்கிறார்கள். நல்ல ரேங்க் எடுத்தும் அரசின் குளறுபடியால் இந்த வருடத்திற்கான வாய்ப்பை இழந்துவிட்டு பேதலித்து நிற்கிறார்கள் எம்.பி.பி.எஸ் முடித்தவர்கள். தேசிய அளவில் ஒரே கலந்தாய்வு என்றதும் அத்தனை கனவுகளும் கிட்டத்தட்ட நொறுங்கிய நிலையில் இருக்கும் எம்.எஸ்/எம்.டி முடித்தவர்கள். அத்தனை பேரையும் இத்தனை தூரம் இரணப்படுத்திவிட்டு, தீவிர மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டு, மருத்துவக்கல்வியையும், மாநிலத்தின் சுகாதாரத்துறையும் கேள்விக்குறியாக்கிவிட்டு இதற்கு எதிரான பெரிய எதிர்வினைகளோ/சட்டங்களோ இயற்றப்படாமல் கமல் போட்ட பூச்சாண்டி ட்வீட்டிற்கு முண்டாவை ஏற்றி சவுண்ட் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
°