14/02/2023
தென்பெண்ணையின் புதல்வர்கள் - மண்ணிலிருந்து மாடத்திற்கு...
(பல்லவர் கால நடுகற்கள் மண்ணிலிருந்து மீண்ட கதை)
எப்போதும் போல ஆர்வமுடன் தேடுதல் வேட்டை நடத்திய சிற்றிங்கூர் ராஜாவுக்கும் பழனிசாமிக்கும் இப்படி ஒரு இடம் இருக்கும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். ஆம், அண்மையில் பணிநிமித்தமாக நீப்பத்துறை பக்கம் சென்றவர்கள் அப்படியே ஒரு எட்டு அருகில் உள்ள ஊருக்கு சென்றார்கள், போகும் வழியில் உடைந்த குதிரையைப் பார்க்கவே, வண்டியை நிறுத்தி எட்டிப்பார்த்தார்கள். அது ஒரு வேடியப்பன் கோயில், 4 கற்களைக் கடவுளாகக் கொண்டு கும்பிட்டு வரும் கோயில் போல. என்று நினைத்தவர்களுக்கு அதன் பின்னே ஒரு பலகைக்கல்லின் ஒரு அடிக்கும் குறைவான பகுதியே வெளியில் தெரிந்தது. சந்தேகத்தின் பேரில் அதை சிறிது தோண்டி ஆய்வு செய்ய அதில் ஒரு வீரனின் தலையும் இரண்டு வட்டெழுத்துக்களும் தெரிந்தன. இது பழமையான நடுகல் என்று முடிவு செய்து அதை வெளியே எடுக்க வேண்டும் கோயில் பொறுப்பாளரிடம் பேச முதலில் ஒத்துக்கொண்டவர்கள், பின்பு அதை எடுக்கக்கூடாது என்று கூறிவிட்டனர். இரண்டு நாட்களுக்குப் பிறகு நானும், தண்டராம்பட்டு ஸ்ரீதரும், விக்னேஷ்வரனும் பழனிச்சாமி, சிற்றிங்கூர் ராஜாவுடன் மீண்டும் பயணம். இம்முறை நில உரிமையாளரிடம் பேசி சம்மதிக்க வைத்தோம். ஊர்மக்கள் சந்தேக கண்ணோட்டத்தின் பிடியில் இருந்தோம்.
கூட்டம் கூடிவிட்டது. எப்போதும் போல பல கேள்விகள், நீங்கள் யார், படித்து என்ன செய்யப் போகிறீர்கள் என்று, மென்மையாக கேள்விகளைக் கடந்து காரியத்தில் கண்வைத்தோம்.
ஜே.சி.பி. இயந்திரம் வரவைத்து நடுகல்லை எடுத்து வைத்தோம், அருகில் உள்ள அரை அடி அளவு மட்டுமே வெளியில் தெரிந்த மற்றொரு கல்லை எடுத்தால் தான் அந்த இடத்தை சரிசெய்ய முடியும் என்பதால் அந்த கல்லையும் எடுக்க முயன்றோம். எடுக்கும் போதுதான் தெரிந்தது அதுவும் ஒரு நடுகல் என்று, அதிலும் எழுத்து இருந்தது. ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம் என்பது ஒன்று எடுக்க மற்றொன்றும் வெளிவந்தது. இரண்டு கல்லையும் எடுத்து வெளியே வைத்து கல்வெட்டை பதிவு செய்து கொண்டோம்.
தண்டராம்பட்டு ஸ்ரீதரின் முயற்சியால் அருகில் இருந்து மண், செங்கல், சிமெண்ட் கிடைக்க, மாலையில் இரண்டு கல்வெட்டையும் அதே இடத்தில் ஒரு மேடை கட்டி நிற்கவைத்துவிட்டோம்.
சந்தேக கண்கொண்டு பார்த்த ஊர்மக்களுக்கு இப்போது சந்தோஷம்,
இது என்ன ஆச்சர்யம், பூமிக்குள் இதுவா இருந்தது?.
இது போல் பூமிக்குள் பல அதிசங்கள் காத்திருக்கலாம், தொடர்ந்து ஆய்வு செய்தால் தமிழகத்தில் இது போல பல பொக்கிஷங்கள் வெளியே வரலாம்...
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் மற்றொரு அரிய கண்டுபிடிப்பை சாத்தியமாக்கிய, சிற்றிங்கூர் ராஜா, பழனிச்சாமிக்கும், வெளியே எடுக்க உதவிய கி.நி.அ. கார்த்திக்கும், உதவிய உள்ளூர் மக்களுக்கும் மிக்க நன்றி..
இரண்டும் பல்லவர்கால நடுகல், வட்டெழுத்து கல்வெட்டுகள், நடுகல் அமைப்பும் அதன் கல்வெட்டுகளைப் பற்றி
அடுத்த பதிவில் பார்ப்போம்...
பல நூற்றாண்டுகளுக்கு பிறகு வெளியே வந்த இரண்டு வீரர்களுக்கும் மாலைவேளையில் விளக்கேற்றி வழிபட்டோம். அந்த பொன்மலைப் பொழுதில் தீர்த்தமலையிலும் தீபம் போல விளக்கு எரிந்தது.
அந்த விளக்கு வெளிச்சத்தில் இன்னும் பல வீரர்களையும் பண்பாட்டு தடயங்களை வெளிக்கொண்டு வருவாம் என்ற நம்பிக்கையில் விடைபெற்றோம்...
சபா...
|----
ஆலம்பாடி (தீர்த்தமலை அருகே, அருர் வட்டம், தர்மபுரி மாவட்டம்)