26/07/2017
உண்மையாகவே நான் சீமான் கட்சியைச் சேர்ந்தவனோ, மறைமுக, நேர்முக ஆதரவாளனோ இல்லை.
நான் தலைவனாக ஏற்றுக்கொண்ட ஒருவர் அண்ணன் பிரபாகரன் மட்டுமே.
ஆனால் , சீமானுக்காக ஏன் பரிந்து பேசுகிறேன்? இன்று சீமானை பலர் எதிர்க்க முதன்மைக் காரணம் அவர் "தமிழனை தமிழன் ஆளணும்" என்று ஓங்கி உரைப்பதுதான்.
அதன் பொருட்டுதான் பலர் அவரை இனவெறியன், பிரிவினைவாதி போன்ற பட்டங்களை வழங்கி நகையாடி மகிழ்ந்து குலாவுகிறார்கள்.
நான் கேட்கிறேன், தன் நாட்டை தன்னிலொருவன் ஆள வேண்டுமென்பது இனவெறியெனில் தன் பிள்ளைக்கு தானே அப்பனாக இருத்தல் வேண்டும், தன் மனைவிக்கு தானே கணவனாக இருத்தல் வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொருவனும் குடும்ப வெறியனா? இவர்கள் எதை பிரிக்க நினைக்கும் பிரிவினைவாதிகள்?
"அது அப்படி அல்ல தமிழ்நாடு என்பது ஒரு மாநிலம், நாமெல்லாம் பாரதத்தாயின் புதல்வர்கள் என்பவர்கள், "டேய் நீயும் நானும் அண்ணன் தம்பிதான்டா உன் சகோதரன் தண்ணி இல்லாம சாவகெடக்குறான் அந்த காவிரி தண்ணிய தொறந்து விடுடா, பவாணி ஆத்துக்கு குறுக்கால அணைய கட்டாதடா பாவம் உன் சகோதரனும் பொழச்சுக்கட்டும்டா, ஏற்கனவே கல்பாக்கத்துல ஒரு அணுஉலை இங்க இருந்து தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக நாடு முழுக்க மின்னுது கூடன்குளம் அணுஉலைய கேரளாவுலயே இருக்கட்டும்டா" என்று கூறி ஒப்புதல் வாங்கிவிட்டு இங்கு வந்து ஊலையிடுங்கள்.
"அட நீங்க என்னங்க பேசுறீங்க! தமிழ் நாட்டுல ஆட்சியில இருந்தவன் சரியில்லைங்க அவங்க ஒழுங்கா இருந்திருந்தா இதெல்லாம் நடந்திருக்காது" என்று அறிவார்ந்த அகில இந்திய பக்தர் கூறுகிறீர்களெனில் நான் ஒரு கேள்வி கேட்கிறேன்.
"சரி இங்க இருப்பவன்தான் சரியில்லை நீங்க சரியாத்தானே இருக்கீங்க? எவன் ஏமாந்தவனோ அவன் தலையில கட்டணும்னு கட்டுற நீங்க எப்படி இருக்கீங்க? ஏன் உங்களுக்கு இந்த மக்களின் மேல் அக்கறை இல்லையா?. சந்தடி இடைவெளியில் மீத்தேனையும், ஹைட்ரோ கார்பனையும் திணிக்கிற உங்களுக்கு இங்க இருப்பவன் பாரத தாயின் புதல்வனா தெரியலயா?
வியாபாரத்துக்காக வந்த வெள்ளையனுக்கும், உங்களுக்கும் என்ன வித்யாசம்? இங்கே பிரித்துப் பார்ப்பது யார்?
தமிழனை ஆள்வதற்கு கர்நாடகாவிலிருந்தும், ஆந்திராவிலிருந்தும் ஆட்கள் வருவார்கள், அதை தமிழர்கள் "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்று பெருந்தன்மையோடு ஏற்க வேண்டும். ஆனா குடிக்க தண்ணீர் மட்டும் கேட்கக்கூடாது. இதற்கு பெயர் என்ன தெரியுமா?
வடிகட்டிய அயோக்கியத்தனம்.
நான் பல மாநிலத்தோரிடம் அன்றாடம் இணக்கமாக பழகுகிறேன். அவர்களிடம் அன்றாடம் அரசியல் குறித்து அளவளாவுகிறேன். அவர்களும் கட்சியால், சாதியால், மதத்தால் பிரிந்தேயுள்ளனர்.
ஆனால் இனம் என்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்தே உள்ளனர். முல்லைப்பெரியாரை விட்டுக்கொடுத்து பேசும்
ஒரு மலையாளியைக் கூட பார்த்ததில்லை, காவிரியை விட்டுக்கொடுத்துப் பேசும் ஒரு கன்னடரைக் கூட பார்த்ததில்லை, பாலாறை விட்டுக்கொடுத்துப் பேசிய ஒரு தெலுங்கரைக் கூட பார்த்ததில்லை.
ஆனால் நாங்கள் நான்கு தமிழர்களிலேயே இருவர் தமிழகத்தை விட்டுக்கொடுத்து பேசுவார். காரணம் இவனுக்கு தன் இனத்தை விட தன் கட்சி கொள்கை முக்கியம். தன் இனத்தை விட்டுக்கொடுக்கும் ஒரு கட்சி தன் இனத்துக்கு தேவையா என்ற அடிப்படை சிந்தனை கூட இல்லாத அறிவுக் குருடர்களாக உள்ளார்கள்.
நான் பிரிவினை பேசுவதாக நினைத்தால் அது உங்கள் பார்வையில் தவறு. உலக அரங்கிலேயே இந்திய தேசத்திற்கு தனிச் சிறப்பு உண்டு. அது பன்முகத் தன்மை, வேற்றுமையில் ஒற்றுமை. இந்த பன்முகத்தை ஒற்றை முகமாக மாற்ற நினைக்கும் இந்த அரசின் கொள்கையைத்தான் எதிர்க்கிறேன், ஒவ்வொரு மொழியையை சிதைத்து ஒரே மொழி ஆக்க நினைப்பதைதான் கண்டிக்கிறோம்.
ஓரிரு ஆண்டுகளிருக்கும்
அண்ணன் சுப.உதயகுமாரன் அவர்களிடம் புதியதலைமுறையில் அப்போதைய நிருபர் திரு ஜென்ராம் ஒரு கேள்வியை முன்வைத்தார்.
"தனித்தமிழ் நாடு அவசியமா?" என்று.
"தமிழகத்தின் உரிமை பாதிக்கப்படாத வரை அது அவசியமில்லைதான். அதன் உரிமையை சிதைக்கும் போதுதான் தனித்தமிழ் நாடு அவசியமாகிறது" என்று கூறினார்.
அதையே தான் நானும் கூறுகிறேன்.
தமிழ் நாட்டின் உரிமையை சிதைத்து, அதன் வளத்தை அழித்து, அதன் தலையில் அடுத்தவனை புகுத்தி தமிழனை இந்தியாவிலிருந்து பிரித்துவிடாதீர்கள் பிரிவினைவாதிகளே என்று.
ஏறத்தாழ சீமானும் இதையேதான் சொல்கிறார், இதற்குதான் அவருக்கு இனவெறியன், பிரிவினைவாதி என்ற பட்டம். இதை தட்டிக்கேட்க நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவனாகத்தான் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை மானமுள்ள தமிழனாக இருத்தலே போதுமானது .
"மானத்தமிழன்" புலிவேந்தன் (எ) கார்த்தி