23/05/2022
மகா மோசமான கையெழுத்து என்னுடையது... நான் அழகாக எழுத முடியுமா? இது சாத்தியம்தானா? என்று கேட்பவர்கள்தான் இன்று அதிகம். கையெழுத்தும் ஒரு ஓவியமே. தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும், தொடர் பயிற்சியும் இருந்தால் இது சாத்தியம்தான்.எழுத்துக்களின் கோடுகள் ஒழுங்கற்று இருப்பதே மோசமான கையெழுத்தாக பார்க்கப்படுகிறது என்பதுதான் உண்மை. அந்த கோடுகளை சரியான ஒரு கோணத்தில் எழுதி பழக முடிந்தால் அது எல்லோராலும் பாராட்டப்படும் அழகான கையெழுத்தாக மாறிவிடும். " சித்திரமும் கைப்பழக்கம்... செந்தமிழும் நா பழக்கம் " என்று ஒரு பழ மொழியை நினைவில் கொள்ளுங்கள். சரியான பயிற்சி எடுத்துக்கொண்டால் வயது வித்தியாசம் இல்லாமல் யார் வேண்டுமானாலும் மிக அழகான கையெழுத்து எழுத முடியும். அது மட்டுமல்ல அதில் creative letters என்ற வித்தியாசமான எழுத்துக்களையும் எழுத முடியும். இதைத்தான் இன்று சினிமா டைட்டிலில் நாம் பார்க்கிறோம். அவை எல்லாமே கைகளால் எழுதப்படும் கையெழுத்துக்களே என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? மேலும் பத்திரிகைகளில் வெளிவரும் விளம்பரங்களில் captions எல்லாமே கைகளால் எழுதப்படுபவைதான். Greeting cards, வாழ்த்து மடல், பிறந்த நாள் வாழ்த்து, கவிதை மடல், காதல் கடிதம்.. இப்படி எதைவேண்டுமாலும் அழகாக நம்மால் உருவாக்க முடியும். ரெடிமேட் வாழ்த்து மடலை விட, இப்படி கிரியேட்டிவ் வாழ்த்து மடல்கள் பொக்கிஷமாக பார்க்கப்படுகிறது என்பதுதான் உண்மை. எனவே ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது போன்ற எந்த மொழியாக இருந்தாலும் ஒரு தொடர் பயிற்சியின் மூலம் யார் வேண்டுமானாலும் அழகாக எழுத முடியும். சிலர் இதை ஏன் ஒரு வாரத்தில் கற்றுக்கொள்ள முடியாதா? என்றும் கேட்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தில், தொடர் பயிற்சி மூலமே இதை கைவசப்படுத்தமுடியும் என்பது மட்டுமே யாரும் மறுக்க முடியாத உண்மை.இப்போதெல்லாம் ஜப்பான் டெக்னாலஜி மூலம் வழுக்கி கொண்டு எழுதும் ஜெல் பேனாக்கள் எங்கும் விற்பனைக்கு வந்துவிட்டன.ஒருமுறை எழுதினாலே... மீண்டும் மீண்டும் எழுத தோன்றும் பேனாக்கள் அவை. எனவே அழகான எழுத்துக்களை எழுதுவது சாத்தியமே. " முயற்சி உடையார்.. இகழ்ச்சி அடையார் " அல்லவா?