24/06/2026
உயர்கல்வி உரிமைக்காக போராடிய SFI பீகார் மாநிலத் தலைவர் தோழர் காந்தி குமாரி உள்ளிட்ட 40 தோழர்களை கைது செய்ததை SFI தமிழ்நாடு மாநிலக் குழு வன்மையாக கண்டிக்கின்றோம்!!
நலந்தா மாவட்ட மாணவர்களின் உயர்கல்வி உரிமைக்காக அறவழியில் போராடிய இந்திய மாணவர் சங்கம்(SFI) தோழர்களை மனிதாபிமானமற்ற முறையில் கொடூரமாக தாக்கி அராஜகமான முறையில் கைது செய்து அடக்குமுறையை கையாண்ட பீகார் காவல்துறையும் , பீகார் மாநில அரசாங்கத்தையும் இந்திய மாணவர் சங்கம் தமிழ்நாடு மாநில குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
நலந்தா மாவட்டத்தில் ஒரு பட்டப்படிப்புக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்திய மாணவர் சங்கம் பல ஆண்டுகளாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போராட்டதின் விளைவாக கல்லூரி அமைக்க அனுமதி கிடைத்த பின்னர், மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு அனைத்து தரப்பு மாணவர்களும் எளிமையாக வந்து கல்வி கற்கும் சூழல் உள்ள நகர் பகுதியில் கல்லூரி அமைய வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியது. ஆனால் ஆளும் கட்சியின் பாஜக தலைமையிலான NDA கூட்டணி சட்டமன்ற உறுப்பினரின் (MLA) அழுத்தத்தின் காரணமாக கல்லூரியின் இடத்தை லோதிப்பூருக்கு மாற்ற முயற்சி நடைபெற்றது. இது அனைத்து மாணவர்களும் கல்வி கற்கும் சூழலை மறுக்கும் செயலாகும். இதனை கண்டித்து ஜூன் 18 அன்று அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட, SFI பீகார் மாநிலத் தலைவர் தோழர் காந்தி குமாரி, நலந்தா மாவட்டச் செயலாளர் தோழர் சாவித்ரி குமாரி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட மாணவர் சங்க தோழர்களின் மீது காவல்துறை காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் நடத்தி, சாலைகளில் மாணவர்கள் என்று கூட பாராமல் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்துள்ளது. இதுவரை விடுதலை செய்யவில்லை.மாணவர்களின் கல்வி உரிமைக்காக போராடிய மாணவர்கள் மீது காவல்துறையை ஏவி தாக்கி கைது செய்திருப்பது ஜனநாயகத்தின் மீது நிகழ்த்தப்படும் தாக்குதலாகும்.
பொதுவாக கல்வி உரிமைக்காக சமூக அநீதிகளுக்கு எதிராக போராடும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, கைது செய்து ஜாமீன் கூட வழங்காமல் சிறையில் அடைப்பது, தேச துரோக வழக்கு போடுவது, போராடும் மாணவர்கள் வீட்டை புல்டோசர் மூலம் இடிப்பது என பாஜக ஆளும் மாநிலங்களில் நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பாஜக ஆளும் மாநிலங்களில் 18,000 க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. பல குளறுபடிகள் நடந்தும் நீட் போன்ற நுழைவு தேர்வுகள் திணிக்கப்படுகிறது. தேசிய கல்வி கொள்கை 2020 மூலம் மாநில கல்வி உரிமையை பறிக்கிறது. நாடு முழுவதும் வேலை தேடும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.காலிபணியிடங்களை நிரப்ப எந்த அறிவிப்பும் இல்லை. மாநிலத்தில் பள்ளி கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் இல்லை. பல மாணவர்களுக்கு கல்வி என்பது எட்டா கனியாகவே உள்ளது.இதுவே இன்றைய நிலை. இதற்கு எதிராக மாவட்டம், மாநிலம் துவங்கி நாடு முழுவதும் கல்வி உரிமைக்காக போராடும் அமைப்பு இந்திய மாணவர் சங்கம்.
போராட்டத்தை ஒடுக்குவதாலும் மாணவர்கள் மீதும் SFI தோழர்கள் மீதும் தாக்குதல் நடத்தினாலும் எவ்வளவு அடக்குமுறை செய்தாலும் அவற்றிலிருந்து மீண்டெழுந்து எப்போதும் கல்விக்காக எங்களின் போராட்டம் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும். தற்போது கைது செய்யப்பட்ட பீகார் மாநில தலைவர் காந்தி குமாரி, மாவட்ட செயலாளர்
சாவித்ரி குமாரி உள்ளிட்ட 40 தோழர்களையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் தமிழ்நாடு மாநில குழு வலியுறுத்துகிறது. இல்லையெனில் போராட்டத்தை முன்னெடுப்போம் என SFI எச்சரிக்கிறது.
பீகார் அரசின் இந்த ஜனநாயக விரோத செயலுக்கு மாணவர்கள்,இளைஞர்கள்,கல்வியாளர்கள் குரல்கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
S. மிருதுளா
மாநில தலைவர்
T. சம்சீர் அகமது
மாநில செயலாளர்
24/06/2026
23/06/2026
23/06/2026
22/06/2026
21/06/2026
21/06/2026
21/06/2026
20/06/2026