தோழர் தியாகு அரசியல் வகுப்பு - தமிழ்நாடு இனி - 243 / பக்தி இய்க்கமும் பார்ப்பனியமும்
அரசியல் வகுப்பு
அரசியல் கல்விக்கான பக்கம் (A page for political education)
12/06/2026
தியாகு எழுதுகிறேன்...
______________________________
[திதா1315120620262057வைகாசி29வெ]
தாழி (1315)தி
இனிய அன்பர்களே!
தோழர் தகடூர் சம்பத் நினைவாக...
கொரோனா பெருந்தொற்று நம் அனைவர் வாழ்விலும் எவ்வளவு பெரிய நெருக்கடியைத் தோற்றுவித்தது என்பதை மறந்திருக்க மாட்டீர்கள். நோய்த் தாக்கும் உயிரிழப்பும் மட்டுமல்ல, பொருளியல், அரசியல், பண்பாட்டு வாழ்வு முழுக்க முடங்கிப் போயிற்று. எந்நிலையிலும் நம் அரசியல் இயக்கப் பணிகளில் தொய்வு ஏற்பட விடலாகாது என்று முடிவெடுத்துக் கிழமைதோறும் சூம் செயலியைப் பயன்படுத்தி இணையவழி அரசியல் வகுப்புகள் நடத்தலானோம். தோழர் சமந்தா அவர்களை ஆசிரியராகக் கொண்டு சூழலியல் வகுப்புகளும் நடத்தினோம்.
அந்த வகுப்புகளில் நமக்குக் கிடைத்த திராவிடச் சிந்தனைக் கருமாமணிதான் தோழர் தகடூர் சம்பத். தமிழ்நாடு இனி என்ற தலைப்பில் இது வரை நான் நடத்தியுள்ள வகுப்புகள் மட்டும் 242. இவை தவிர திங்கள் கிழமை தோறும் நடைபெறும் செய்தி அரசியல் நிகழ்ச்சிகள், அவ்வப்போது வெவ்வேறு தலைப்புகளில் நடைபெறும் கருத்தரங்குகள் எல்லாவற்றையும் சேர்த்தால் சற்றொப்ப 5 ஆண்டுக் காலமாகத் தொடர்ந்து இந்த இணையக் கூடல்கள் நடந்து வருகின்றன. தொடக்கமுதல் தவறாமல் இவற்றில் ஊக்கத்துடன் பங்கேற்று வருகிறவர் (ஐயகோ, வந்தவர்) தோழர் தகடூர் சம்பத். கனடா, சிங்கப்பூர் சென்றிருந்த வேளையும் வகுப்புகளைத் தவற விடாதவர்.
ஒவ்வொரு நிகழ்விலும் அனைவருக்கும் முந்திக் கொண்டு வந்து காத்திருப்பார். உரை முடிந்த பிறகும் காத்திருந்து வினாத் தொடுப்பார், கூடுதல் தகவலும் விளக்கமும் கொடுப்பார். மாற்றுக் கருத்துகள் பேசப்பட்டாலும், பொறுமையுடன் கவனித்துக் கேட்டு விளக்கமளிப்பார். ஒரு வகுப்பில் முடிவடையாமல் அடுத்த வகுப்புக்கு ஒத்தி வைக்கப்படும் செய்திகள் இருப்பின் நினைவூட்டுவார். வகுப்புக்கிடையில் நான் சில நூல்களைக் குறிப்பிட்டுச் சொன்னால், அவற்றைத் தேடிப் படிப்பதோடு எனக்கும் கிடைக்கச் செய்வார் – மென்படிகளாகவோ வன்படிகளாகவோ அவரிடமிருந்து நான் பெற்ற அரிய நூல்கள் பற்பல! ஒரு கட்டுரையோ நூலோ கிடைக்கவில்லை என்றால் இருவரும் எல்லாப் பக்கமும் தேடுவோம்! கிடைத்தால் மகிழ்வையும், கிடைக்காத போது ஏமாற்றத்தையும் பகிர்ந்து கொள்வோம்.
தந்தை பெரியாரிடத்தும் அறிஞர் அண்ணாவிடத்தும் கலைஞரிடத்தும் அறிவார்ந்த ஆழ்ந்த பற்றுடையவர். எவ்வித விட்டுக் கொடுப்பும் இல்லாத தெளிந்த பகுத்தறிவாளர். பேச்சு, படிப்பு, கருத்து என்ற அளவோடு நிறுத்திக் கொள்ளாமல் இந்த ஆண்டுகளில் பாசிச எதிர்ப்புக் களத்தில் எங்களோடு இணைந்து பணியாற்றியவர். அவர் தன் சொந்த ஊர் தகடூரில் (தர்மபுரியில்) என்னையும் தோழர் கொளத்தூர் மணியையும் அழைத்துச் சென்று தந்தை பெரியார் குறித்துக் கருத்தரங்கம் நடத்தியதை மறக்க இயலாது.
சென்ற மார்ச் திங்கள் முதல் நாள் 70ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தவர்க்கு அதன் பிறகுதான் உடல் நலம் குன்றத் தொடங்கியிருக்க வேண்டும். மார்ச் 18ஆம் நாள் எனக்கு மின்னஞ்சலில் எழுதியிருந்த கடிதத்தை அப்படியே தருகிறேன்.
தோழருக்கு வணக்கம்.
கடந்த பிப்ரவரி இறுதியில் வயிற்றின் மேல் பகுதியில் அதாவது பித்தப்பை பகுதியில் வலியேற்பட்டது. மருத்துவ ஆய்வில் பித்தப்பை வீக்கம் அடைந்திருப்பதாகவும், அதை அகற்ற வேண்டுமென்றும் சொன்னார்கள். நான் அதற்கான சென்னை கோவிலம்பாக்கம் காவேரி மருத்துவ மனையில் சேர்ந்தேன். ஆய்வு செய்த மருத்துவர் ஆய்வு செய்து உறுதிபடுத்தி, அறுவைக்கு ஏற்பாடு செய்தனர். எதிர்பாரா விதமாக எளிதில் முடிய வேண்டிய அறுவை என் உடல் நிலையால் சிக்கலானது. தொடர்ந்து சில தொல்லைகள்.
பத்துக்கு மேற்பட்ட மருத்துவர்கள், அதற்கேற்ற செவிலியர்கள், blood test, Xray, ultra sound, ct scan, mrcp என பல்வேறு ஆய்வுகள் என மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்தாலும், Infection எனும் நோய்த் தொற்றால் இரண்டு முறை மிகவும் சிக்கலான நிலைக்கு ஆளாகிவிட்டேன். எனக்கான முதன்மை மருத்துவரின் மிகக் கவனமான கண்காணிப்பில் ஓரளவு தேறி நான்கைந்து நாள்களுக்கு முன்னர் இல்லத்திற்குத் திரும்பியுள்ளேன்.
மேலும் மருத்துவ ஆய்வுகள் இருக்கின்றன. முழு நலம் பெற சில மாதங்கள் ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
விரைவில் முழு நலம் பெறுவேன் என்ற நம்பிக்கையுடன் உங்களின்
தகடூர் சம்பத்.
+++++++++
உடனே விடையிறுத்தேன்: வணக்கம் தோழர். நலம் பேணுங்கள்.
++++++++++
இடையிடையே தொலைபேசியில் அழைத்துப் பேசினார். ஆனால் சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க தோழர் சம்பத்தைக் காணவில்லை என்பது எனக்குப் பெரும் மனக்குறையாகப் பட்டது. தொலைபேசித் தொடர்பும் கிடைக்கவில்லை. புலனம் பார்த்தேன். அவர் பார்த்துச் சில நாள் ஆகியிருந்தது. உடனே ஒரு செய்தி அனுப்பினேன். பிறகுதான் அவருடைய துணைவியார் செய்தி அனுப்பினார்கள். அழைத்தும் பேசினார்கள். அவரது உடல்நிலை பற்றிய செய்தி அதிர்ச்சியளித்தது. மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்து விட்டதைச் சொன்னார்கள். மறுநாள் நானும் தோழர் மகிழனும் அவர் வீட்டுக்குச் சென்று பார்த்தோம். கவலைக்கிடமான நிலையிலும் என் குரல் கேட்டு விழித்துப் பார்த்தார்.
மே 12ஆம் நாள் இரவு 11.05க்கு உயிர் பிரிந்தது. 13ஆம் நாள் இறுதி வணக்கம் செலுத்தினோம். 14ஆம் நாள் காலை எரியூட்டி முடிந்தது.
நாளை 13.06.2026 மாலை 5 மணியளவில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் தோழர் தகடூர் சம்பத் படத்திறப்பு நினைவேந்தல் நடைபெறவுள்ளது. சம்பத் அவர்களின் குடும்பத்தினர், தோழர்கள், நண்பர்கள் சேர்ந்து நடத்தும் இந்நிகழ்வில் நம்மோடு தோழர்கள் கொளத்தூர் மணி, ஓவியா ஆகியோரும் கலந்து கொண்டு நினைவேந்துகிறார்கள்.
புத்தகங்களின் காதலனாக வாழ்ந்த தோழர் தகடூர் சம்பத் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஒரு நூல் வழங்கு நிகழ்வுக்குத் திட்டமிடுகிறோம். தோழர் தகடூர் சம்பத் நினைவு நூலகம் அமைக்கலாமா? என்பது போன்ற முன்மொழிவுகள் உள்ளன.
நாம் இன்று இரவு இணைய வழியில் இது குறித்துக் கலந்து பேசலாம். வாருங்கள் தோழர்களே!
- தியாகு , 12.06.2026 பிற்பகல் 03.50
++++++++++++++++++++++++++++++++++++
தோழர் தகடூர் சம்பத் படத் திறப்பு நினைவேந்தல்
இணையவழிக் கலந்தாய்வுக் கூடல்
ஜூன் 12, 2026
இன்று இரவு 8 மணிக்கு
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09&omn=89727506791
Meeting ID: 864 136 8094
Passcode: 12345
அனைவரும் கலந்துகொள்க.
12/06/2026
அனைவரும் வருக!
தீண்டாமை விதைத்தது சைவமா? சமணமா?
தமிழ்நாடு இனி 241 “சமணர் கழுவேற்றம்”
தமிழ்நாடு இனி - 240 “பண மதிப்பின் வீழ்ச்சி”
29/04/2026
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Chennai