01/05/2026
தன் தந்தை சிவனுக்கு எழுப்பிய கற்றளியைப் போலவே அச்சு அசலாக ஒரு கற்றளியை தன் புதிய தலைநகர் ஜெயங்கொண்டத்திற்கு வெளியே எழுப்ப வேண்டும் என்று விரும்பிய சோழப் பேரரசின் சக்கரவர்த்தி ராஜேந்திர சோழன் அப்படியொன்றை அதே 'பிரகதீசுவரம்' என்ற பெயரிலேயே, தந்தை எழுப்பியதை விட இன்னும் சிறப்பாக ஆனால், 'தந்தை எழுப்பிய கற்றளியை விட நான் எழுப்பும் கற்றளி உயரமாக இருக்கக் கூடாது, தஞ்சை கோவில்தான் உயரமாக இருக்க வேண்டும்!' என்ற முடிவோடு சில அடிகள் உயரம் குறைத்து வடிவமைத்து எழுப்பிய கற்றளி ஆயிரமாண்டுகள் கடந்தும் நிற்கிறது அவனது பெயர் சொல்லி.
கீழைச்சாளுக்கியத்தில் தொடங்கி மேலைச்சாளுக்கியம், ஒட்ட தேசம், கலிங்கம் என மேல் நோக்கிய நாடுகளை வென்று மகிபாலனை வென்று வங்கத்தையும் முடித்து இமயமலையின் கங்கை வரை சென்று புலிக்கொடியை நாட்டிய ராஜேந்திர சோழன், கங்கையிலிருந்து நீ்ர் கொணர்ந்து இந்தக் கோயிலின் கும்பங்களில் ஊற்றி குடமுழுக்கு செய்தான். அதனாலேயே 'கங்கை கொண்ட சோழபுரம்' என்ற பெயரும் பெற்றது இந்தப் பகுதி.
ராஜேந்திர சோழனின் அரண்மனையும் மற்ற கட்டிடங்களும் அழிந்து போயின.
புல் தரையும், வித்தியாசமான நுழைவாயிலும், சிறந்த கல் வேலைப்பாடுகள் கொண்ட சுவர்களும் கொண்ட இந்தக் கோவில் இன்றும் கங்கை கொண்ட சோழ புரத்தில் அட்டகாசமாக உயர்ந்து நிற்கிறது.
'இங்குதான் குதிரைகளும் தேர்களும் ஓடியிருக்கக்கூடும்!' 'அங்குதான் ராஜேந்திரன் தன் மனைவியரோடு நடந்திருப்பான்!' 'அங்கே அமங்கா தேவியும், ராஜாதித்யனும் விளையாடியிருக்கலாம்!' 'வந்தியத்தேவரும் குந்தவையும் இங்கு நடந்திருக்கலாம்!'
இந்த கோவிலை எழுப்பிய பிறகே கடல் கடந்த பயணங்களைத் தொடங்கியிருக்கிறான் சோழவேங்கை ராஜேந்திரன். ஈழம் (இலங்கை), ஸ்ரீவிஜயம்(இந்தோனேசியா), முன்னீர் பழந்தீவு (லட்சத்தீவுகள்), கடாரம் (மலேசியா) என கடல் கடந்தும் சோழ தேசத்தை விரித்திருக்கிறான் தன் தோள் வலிமையால்.
எல்லாவற்றையும் இங்கு நிர்மாணித்து விட்டு, வந்தியத்தேவர் மாமாவிற்காகவும் குந்தவை அத்தைக்காகவும் காஞ்சிபுரம் அடுத்த பிரம்மதேசத்தில் போய் அவர்களோடு வாழ்ந்துவிட்டு, அந்த மண்ணிலேயே உயிரையும் விட்டிருக்கிறான் ராஜேந்திர சோழன் (அவரது சமாதியை நேரில் போய் பார்த்து படமெடுத்து எழுதிப் பகிர்ந்திருக்கிறோம் சில ஆண்டுகள் முன்பு).
குடந்தையிலிருந்து சென்னை நோக்கித் திரும்பிய உச்சி வெய்யில் வேளையில் சில நிமிடங்கள் இறங்கி நின்று அனுபவம் கொண்டோம்.
மகள்களோடு வந்திருக்கிறேன். உறவுகளோடு வந்திருக்கிறேன். நண்பர்களோடு வந்திருக்கிறேன்.
இன்று தனியனாக. ஒவ்வொரு முறையும் ஒவ்வோர் அனுபவம்.
ஒரு படமெடுத்துக் கொண்டேன்.
-பரமன் பச்சைமுத்து
கங்கை கொண்ட சோழபுரம்
30.04.2025
#பரமன்பச்சைமுத்து #சோழர்கள்
30/04/2026
28/04/2026
25/04/2026
25/04/2026
24/04/2026
24/04/2026
23/04/2026