17/05/2025
திரைக்கலைஞர்
தம்பி சூரியைப்
பாராட்டுகிறேன்
தனது திரைப்பட வெற்றிக்காக
மண்சோறு தின்ற ரசிகர்களைப்
பகிரங்கமாகச் சாடியிருக்கிறார்
மண்ணிலிருந்து தானியம் வரும்;
தானியம் சோறாகும்.
ஆனால், மண்ணே
சோறாக முடியாது
இந்த அடிப்படைப்
பகுத்தறிவு இல்லாதவர்கள்
தன் ரசிகர்களாக இருக்கமுடியாது
என்று சொல்வதற்குத்
துணிச்சல் வேண்டும்
கதாநாயகர்கள் ஒவ்வொருவரும்
தங்கள் ரசிகர் கூட்டத்தை
இப்படி நெறிப்படுத்தி
வைத்திருந்தால்
கலையும் கலாசாரமும்
மேலும் மேலும் மேம்பட்டிருக்கும்
மண்சோறு தின்றால் ஓடாது
மக்களுக்குப் பிடித்தால்
மாமன் ஓடும்
பகுத்தறிவு காத்திருக்கும் சூரியை
‘பலே பாண்டியா’
என்று பாராட்டுகிறேன்
Soori
14/10/2024
பெருமழை
பெய்யக்கூடும்
வெள்ளத்தின் போக்குவரத்தில்
கால்வாய்களாகக்கூடும்
சாலைகள்
தரையில் குதித்துத்
தற்கொலை
செய்துகொள்ளக்கூடும்
மேகங்கள்
ஏன்?
இயற்கை என்ற
வீட்டு நாயை
வேட்டை நாய்
ஆக்கிவிட்டான் மனிதன்
புவி வெப்பம்
பருவநிலை மாற்றம்
எல்நினோ
எல்லாம்கூடி
மாற்றி மாற்றி எழுதுகின்றன
பூகோளத்தை
இதுவொரு தொடக்கம்தான்
ஜனவரி வரைக்கும்
ஜனத்துயர் இருக்கலாம்
எதிர்கொள்வோம்
அனைத்தும் கடப்போம்;
அனுபவம் பெறுவோம்
மக்களோடு அரசு
அரசோடு மக்கள்
சேரும் நேரம்
தீரும் சிக்கல்
விடியாத இரவுமில்லை;
வடியாத வெள்ளமில்லை
11/10/2024
இவ்வாண்டு
இலக்கியத்துக்கு வழங்கப்படும்
நோபல் பரிசு
மூன்று வகைமைகளில் தனித்துவமானது
ஆசியாவுக்கு
வழங்கப்பட்டிருப்பது
ஒரு பெண் படைப்பாளிக்கு
வழங்கப்பட்டிருப்பது
54 வயது கொண்டவருக்கு
வழங்கப்பட்டிருப்பது
இந்த மூன்றுக்காகவும்
நோபல் பரிசுக் குழுவை
ஐயந்திரிபின்றிப் பாராட்டலாம்
பரிசு கொண்டிருக்கும்
தென்கொரிய எழுத்தாளர்
ஹான் காங்
வாழ்த்துக்குரியவர்
பரிசுப் பட்டயத்தில்
குறிக்கப்பட்டிருக்கும் ஒருவாசகம்
இலக்கிய விமர்சகர்கள்
ஊன்றி உணரத்தக்கது
"வரலாற்று அதிர்வுகளை எதிர்கொள்ளும் மற்றும்
மனித வாழ்வின் பலவீனத்தை
வெளிப்படுத்தும் அவரது
தீவிரக் கவிதை உரைநடைக்காக
நோபல்பரிசு வழங்கப்படுகிறது"
நோபல் பரிசுக்குரிய
தகுதிகளுள் ஒன்று
கவிதைபூசிய உரைநடை என்று
கணிக்கிறது நோபல் குழு
தண்ணீர் தேசம் படைப்பில்
ஆகாயத்தில் நீலம்போல்
இயல்பாக இழையோடிவந்த
என் கவிதைச் சாரத்தை
எள்ளி விமர்சித்தவர்கள்
இப்போது என்ன செய்வார்கள்?
இனி
வாயை மூடிக்கொள்வார்களா?
அல்லது
பேனாவை எறிந்துவிட்டு
மூடியால் எழுதுவார்களா?
உரைநடையில்
கவிதை கலப்பதை
வழிமொழியும்
நோபல் குழுவுக்கு
ஒரு தமிழ்ப் படைப்பாளியின்
நன்றி
07/10/2024
கவிப்பேரரசு வைரமுத்துவின்
மகா கவிதையில்..
Vairamuthu #மகாகவிதை
04/10/2024
கவிப்பேரரசு வைரமுத்துவின்
மகா கவிதையில்...
#மகாகவிதை
Vairamuthu
26/09/2024
‘கொடிபறக்குது’ படப்பிடிப்பு
நடந்துகொண்டிருந்தது
‘சேலைகட்டும் பெண்ணுக்கொரு
வாசம் உண்டு’ பாடலை
எழுதி எடுத்துக்கொண்டு
பாரதிராஜாவைப்
பார்க்கப் போயிருந்தேன்
ரஜினியை
ஒப்பனையில் பார்த்ததும்
உள்ளம் மகிழ்ந்தேன்
படப்பிடிப்புத் தளங்களில்
பார்க்கமுடியாத
என்னைப் பார்த்ததும்
ரஜினி தன் உடல்மொழியில்
ஆச்சரியம் காட்டினார்
காட்சிகளின் இடைவெளியில்
அவரும் நானும் தனியானோம்
என் தோளில்
கைபோட்டுக்கொண்டே
ஓர் ஓரமாய்ப்
பொடிநடை போனார்
உறுதியான சொற்களில்
என்னைப் பார்த்துச் சொன்னார்:
“இளையராஜாவுக்கு
ஒரு படம் பண்ணிவிட்டேன்;
பாரதிராஜாவுக்கு இந்தப்படம்
நடித்துக்கொண்டிருக்கிறேன்;
அடுத்து நீங்கள்தான்.
எப்போது என்னை வைத்துப்
படம் செய்யப் போகிறீர்கள்;
நான் தயார்” என்றார்
ஒன்றும் பேசாமல் நின்றேன்
சில கணங்கள் சென்றபிறகு
மீண்டும்
தன்னிலை அடைந்தேன்
“மிக்க நன்றி
இப்படிக் கேட்பதற்கே
பேருள்ளம் வேண்டும்
படம் தயாரிக்க வேண்டும்
என்ற எண்ணம் எழுந்தால்
நான் உங்களைத்தான் அணுகுவேன்”
அவர்
கைகளைப் பற்றிக்கொண்டு
தழுதழுத்தேன்
இன்றுவரை
அந்த வாக்குறுதி
அப்படியே இருக்கிறது
அவரும் அதை
மறந்திருக்க மாட்டார்
ஆண்டு பலவாக
அந்த வார்த்தைகளை
நான் அசைபோட்டே
வந்திருக்கிறேன்
நண்பர்களாய் இருப்பது
புனிதமானது;
வியாபாரிகளாய் இருப்பது
கணிதமானது
கணிதம்
புனிதத்தைக் கெடுத்துவிடும்;
கெடவிடமாட்டேன்
அதனால்,
இப்போது மட்டுமல்ல
எப்போதும் கேட்கமாட்டேன்
25/09/2024
நெற்றித் தீ - 41
குளித்தல் என்பது
தண்ணீர்த் தாரைகள்
சருமம் கடக்கும்
சம்பவம் அல்ல
சின்னதொரு தியானம்;
சிலநிமிட தவம்
சொந்த உறுப்புகளின்
சுயதரிசனம்
புறத்தோல் கழுவல்
உட்சூடு தணித்தல் என
ஒரு வினையில்
இருவினை புரியும்
திருவினை - குளித்தல்
நெடுவுடல் எங்கணும்
நீர்வழிந்தாட
நீர்வழித் தடத்தில்
நினைவுகள் ஓட
மரணம் போலொரு
மகாசுகம் எய்தும்
அன்றாட மோட்சம் குளியல்
எந்த உறுப்பையும்
தவிர்க்காதபடி
நின்று தேய்த்து
நீயே குளிக்கும்வரை
உனது உடம்பு உன்னுடையது
குளியலை
ஒரு கலையென்று கருதாது
கடனென்று
கருதும் பாவிகளை
எந்த நதியில் குளிப்பாட்டுவது?
#நெற்றித்தீ | #தமிழ்
20/01/2023
நெற்றித்தீ - 28
#நெற்றித்தீ #தமிழ் #தமிழ்நாடு