09/03/2024
இவர்கள் இருவரும் கடந்த 2023 ரமலானில் திடீர் மரணம் எனும் பெயரில் பேருவலை மண்ணில் இருந்து உலகை விட்டுப் பிரிந்தவர்கள் . இவர்கள் இருவரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள், தமது குடும்ப வாழ்க்கையில் கண்குளிர்ச்சி கண்டவர்கள், இருவரும் மாணிக்க வியாபாரத்தில் ஜாம்பவான்கள் , உடல் ஆரோக்கியத்தில் மிகச் சிறப்பாக கவனம் செலுத்தியவர்கள், இடக்கரம் அறியாமல் வலக்கரத்தால் வாரி வழங்கியவர்கள், தனது நண்பர்களில் பலரை கரை சேர்த்தவர்கள், தான் வாழ்ந்த நாட்டுக்கு அப்பால் வெளிநாடுகளிலும் மனிதர்களை சம்பாதித்தவர்கள், ஒருவர் தான் 100 ஆண்டுகள் வாழ ஆசைப்படுவதாக தனது இறுதி நாட்களில் சிலரிடம் கூறி இருக்கிறார் மற்றையவர் தன்னோடு O/L படித்த நண்பர்கள் அனைவரையும் ஒரு இப்தாரில் ஒன்று கூட்ட ஆசைப்பட்டார், வகுப்பு நண்பர்களாகிய நாங்கள் அவருடைய வீட்டில் ஒன்று கூடினோம், இப்தாரும் செய்தோம், அப்போது அவர் ஒரு ஜனாஸாவாகத் தான் எம்மோடு இருந்தார். இருவரும் ரமலானை சிறப்பாகப் பயண்படுத்த திட்டமிட்டிருந்தார்கள், உலகில் யாரும் நினைத்திருக்க மாட்டார்கள் அது அவர்களுடைய இறுதி ரமலான் என்று அல்லாஹ்வைத் தவிர. இவர்கள் இருவருடைய நற் செயல்களையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக. ஆமீன்
Humaisarians 2002 O/L Batch Memories
ஒருவர் முதுமை அடைவதும் நோய்வாய்ப் படுவதும் தான் மரணத்துக்கான அடையாளங்கள் என நினைக்கிறோம். அதையும் தாண்டி மரணத்தின் மிகப் பெரிய அடையாளம் ஒருவருடைய பிறப்பு. பிறந்தவர்கள் அனைவரும் மரணிக்க வேண்டும் என்பது எந்தக் கருத்து வேறுபாடுகளும் இல்லாத உண்மை. ஒரு மனிதனுடைய உள்ளம் உலக வாழ்வை சுவர்க்கமாகக் கண்டால் அவருடைய மறுமை வாழ்வும் சுவர்க்கமாக அமையும். மாற்றமாக உலக வாழ்க்கை உள்ளத்திற்கு நெருக்கடியாக இருந்தால் மறுமை வாழ்வும் நெருக்கடியானதாகத் தான் இருக்கும், அது அல்குர்ஆன் கூறும் உண்மை. சவால்கள் நிறைந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எமது முன்னோர்கள் தாம் வாழ்ந்த காலத்தில் இருந்த சவால்களை எவ்வாறு எதிர் கொண்டார்களோ அவ்வாறு நாமும் எதிர்கொண்டு புதியதொரு வரலாறு படைத்து விட்டு அமைதி அடைந்த ஆத்மாவாக மரணிப்பதற்கு அல்லாஹ் எம் அனைவருக்கும் அருள் புரிவானாக. ஆமீன்
Naseehath Liyawdeen
09th March 2024