19/08/2026
மகிழ்ச்சியான பகிர்வு!
எனது புதிய கட்டுரை "நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரித்தல்: சனத்தொகை மற்றும் தேசிய ரீதியான அவசியத் தேவை" Global Tamil News தளத்தில் வெளியாகியுள்ளது.
இலங்கையின் தற்போதைய சனத்தொகை மாற்றங்கள் மற்றும் தேசியத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை இக்கட்டுரை விரிவாக ஆராய்கிறது.
இக்கட்டுரையை பிரசுரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்த்த Global Tamil News நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்!
முழுக் கட்டுரையை வாசிக்க கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்:
👉 https://globaltamilnews.net/2026/234708/
உங்கள் கருத்துக்களையும் பகிர்வுகளையும் வரவேற்கிறேன்!
Dr Murali Vallipuranathan.
19.8.202
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரித்தல்: சனத்தொகை மற்றும் தேசிய ரீதியான அவசியத் தேவை - மரு
உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு வருடங்களால் நீடிப்பதற்.....
17/08/2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரித்தல்: சனத்தொகை மற்றும் தேசிய ரீதியான அவசியத் தேவை
மருத்துவர் முரளி வல்லிபுரநாதன்
உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு வருடங்களால் நீடிப்பதற்கான 22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இது தொடர்பான பொது விவாதம் வழமையான கட்சி அரசியலாக மாறியுள்ளது. ஒரு மருத்துவ சனத்தொகையியலாளராக (Medical Demographer), இந்த உத்தேச சீர்திருத்தத்தை நான் குறுகிய அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை; மாறாக இதனை ஒரு முக்கியமான சனத்தொகை, பொருளாதார மற்றும் நிறுவன ரீதியான அவசியத் தேவையாகவே கருதுகிறேன்.
ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் இத்தகைய நடவடிக்கை நீதித்துறையோடு மட்டும் நின்றுவிடக் கூடாது; இலங்கை இனிமேலும் முன்கூட்டியே இழக்கத் தகாத மருத்துவ நிபுணர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஏனைய துறைசார் வல்லுநர்களுக்கும் இது உடனடியாக விரிவுபடுத்தப்பட வேண்டும்.
உலகளாவிய போக்கு: இலங்கை மட்டுமே விதிவிலக்கு
ஒப்பிடக்கூடிய பொதுநலவாய நாடுகள் மற்றும் சர்வதேச நீதித்துறைகளில், நவீன மனித வாழ்நாள் அதிகரிப்பு மற்றும் நீதிபதிகளின் நீண்டகால அனுபவத்தின் மதிப்பை உணர்ந்து ஓய்வுபெறும் வயது தீர்மானிக்கப்பட்டுள்ளது:
ஐக்கிய இராச்சியம்: நீதிபதிகளின் கட்டாய ஓய்வுபெறும் வயது மீண்டும் 70 ஆக உயர்த்தப்பட்டுள்ளது (குறிப்பிட்ட சில நீதித்துறை பதவிகளுக்கு 75 வயது வரை அனுமதிக்கப்படுகிறது).
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து: உயர் நீதிமன்ற நீதிபதிகள் 70 வயது வரை பணியாற்றுகின்றனர்.
கனடா: உயர் நீதிமன்ற நீதிபதிகள் 75 வயதில் ஓய்வுபெறுகின்றனர்.
அமெரிக்கா: கூட்டாட்சி (Federal) நீதிபதிகள் ஆயுட்காலம் முழுவதும் பதவி வகிக்கின்றனர்.
இந்தியா: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 65 வயதில் ஓய்வுபெறும் அதேவேளை, அதனை 67 அல்லது 70 ஆக உயர்த்துவதற்கான தீவிர கொள்கை விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், இலங்கையிலோ திறமையும் முதிர்ச்சியும் உச்சத்தில் இருக்கும் 63 மற்றும் 65 வயதில் உயர்நீதிமன்ற நீதிபதிகளை கட்டாயமாக ஓய்வுபெறச் செய்வது நிறுவன ரீதியான ஸ்திரமின்மையையே தோற்றுவிக்கிறது.
11.3 இலட்சம் நிலுவை வழக்குகள்: நீதித்துறையின் நெருக்கடி
இலங்கையின் நீதிமன்றக் கட்டமைப்பு தாங்க முடியாத சுமையை எதிர்கொண்டுள்ளது:
நாடு முழுவதும் 11.3 இலட்சத்திற்கும் (1.13 மில்லியன்) அதிகமான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன.
இதில் உயர் நீதிமன்றத்தில் 5,700 க்கும் மேற்பட்ட வழக்குகளும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 4,600 வழக்குகளும் அடங்கும்.
"தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்" என்பது அன்றாட யதார்த்தமாக உள்ள ஒரு நாட்டில், சில மாதங்களுக்கு ஒருமுறை அனுபவமிக்க நீதிபதிகளை ஓய்வுபெறச் செய்வது வழக்குகளின் தாமதத்தை மேலும் அதிகரிக்கும். மூத்த நீதிபதிகளின் சேவையைத் தக்கவைத்துக்கொள்வது வழக்குகளை விரைவாக விசாரித்து முடிப்பதற்கும், மக்களுக்கு உரிய நேரத்தில் நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்கும் மிக அவசியமாகும்.
சனத்தொகை யதார்த்தங்களும் பொருளாதாரச் சுமையும்
தெற்காசியாவிலேயே மிக வேகமாக முதியோர் சனத்தொகை அதிகரித்து வரும் நாடுகளில் ஒன்றாக இலங்கை திகழ்கிறது. பிறப்பு வீதம் வீழ்ச்சியடைவதும், சராசரி வாழ்நாள் எதிர்பார்ப்பு அதிகரிப்பதும் முதியோருக்கான பொருளாதார சார்பு விகிதத்தை (Old-age dependency ratio) தீவிரமாக உயர்த்தியுள்ளது.
தொற்றுநோயியல் மற்றும் சனத்தொகையியல் கண்ணோட்டத்தில், துறைசார் நிபுணர்களை அவர்களின் 60 களின் ஆரம்பத்திலேயே ஓய்வுபெறச் செய்வது பொருளாதார ரீதியாகத் தவறானது. இது ஒருபுறம் ஓய்வூதிய முறையின் மீது பாரிய சுமையை ஏற்றுவதுடன், மறுபுறம் நாட்டின் உற்பத்தித் திறன் வாய்ந்த மனித வளத்தை இழக்கச் செய்கிறது. நீதித்துறை, பொது சுகாதாரம் மற்றும் கல்வியியல் துறைகளில் ஓய்வுபெறும் வயதை தற்கால சனத்தொகை யதார்த்தங்களுக்கு ஏற்ப உயர்த்துவது தேசிய பொருளாதார முன்னேற்றத்திற்கு இன்றியமையாததாகும்.
எதிர்ப்பாளர்களின் பலவீனமான வாதங்கள்
இந்தச் சட்டமூலத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் எதிர்ப்புகள் எந்தவொரு தர்க்கபூர்வமான அல்லது கொள்கை ரீதியான அடிப்படையையும் கொண்டிருக்கவில்லை:
பொறுப்புக்கூறல் குறித்த பயம்: அரசியல் தரப்பினரிடையே காணப்படும் அச்சத்திற்குப் பின்னணியில் ஒரு முக்கிய காரணம் உண்டு: நீதித்துறை வலுவடைந்து தொடர்ச்சியாக இயங்கும்போது, ஊழல் மற்றும் நிதி மோசடி தொடர்பான விசாரணைகள் விரைவுபடுத்தப்பட்டு, குற்றவாளிகளும் அவர்களின் சகாக்களும் விரைவில் சிறைக்குச் செல்ல நேரிடும் என்ற அச்சமே அதுவாகும்.
மகாநாயக்க தேரர்களை கேடயமாகப் பயன்படுத்துதல்: மதத் தலைவர்களை நிர்வாக மற்றும் அரசியலமைப்பு ரீதியான முடிவுகளுக்குள் இழுத்து வருவது எதிர்ப்பாளர்களின் கருத்து வறுமையையே காட்டுகிறது. எவ்வித ஆதாரபூர்வமான காரணங்களும் இன்றி மத அமைப்புகளை இதற்குள் ஈடுபடுத்துவது நல்லாட்சிக்கும் மத நிறுவனங்களுக்கும் ஏற்புடையதல்ல.
சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏமாற்றமளிக்கும் நிலைப்பாடு: சட்டத்துறையின் சில பிரிவினர் காட்டும் எதிர்ப்பு, பொதுநலனை விட குறுகிய சுயநலனையே பிரதிபலிக்கிறது. இதேபோன்று மருத்துவ நிபுணர்களுக்கோ அல்லது பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கோ ஓய்வுபெறும் வயது நீடிக்கப்பட்டால், அந்தந்த தொழிற்சங்கங்கள் நாட்டின் நலன் கருதி அதனை வரவேற்கும். சட்டத்தரணிகள் சங்கமும் வழக்காடிகளுக்கு விரைவான நீதி கிடைப்பதை ஆதரிக்க வேண்டுமே தவிர, வழக்கு தாமதங்களுக்கு துணைபோகக் கூடாது.
அரசியல் உள்நோக்கங்களுக்காக இத்தகைய அத்தியாவசிய நிறுவன சீர்திருத்தங்களைத் தடுத்து நிறுத்த இலங்கை அனுமதிக்கக் கூடாது. நீதித்துறை சேவை நீடிப்பு சட்டமூலத்தை நிறைவேற்றுவது ஒரு சரியான ஆரம்பமாகும்; அத்துடன் இது நாட்டின் அனைத்து அத்தியாவசிய நிபுணத்துவத் துறைகளிலும் ஓய்வுபெறும் வயதை மீளாய்வு செய்வதற்கான முன்னோடியாக அமைய வேண்டும்.
மருத்துவர் முரளி வல்லிபுரநாதன்
சமூக மருத்துவ நிபுணர் மற்றும் மருத்துவ சனத்தொகையியலாளர்
17.08.2026
16/08/2026
சீருடை ஒழுக்கமும், முகநூல் ‘நீதிமான்களின்’ போலிப் புரட்சியும்!
சீருடைப் பணியில் (Uniformed Service) இணைபவர்கள் கடமை நேரத்தில் தங்களின் உத்தியோகபூர்வ சீருடையைத்தான் அணிய வேண்டும் என்பது அடிப்படை நிர்வாக விதி.
ஒரு பொலிஸ் அதிகாரி பணி நேரத்தில் தனக்கு மத அல்லது கலாச்சார உடை வேண்டும் என்று கேட்க முடியுமா?
அதேபோன்று, பொதுச் சுகாதாரப் பரிசோதகர் (PHI) போன்ற சுகாதாரத் துறை சீருடை உத்தியோகத்தர்களும் தங்கள் பணிக்கான சீருடையை முறையாக அணிவது கட்டாயமானது.
வேலைக்கு விண்ணப்பிக்கும்போதே, இது சீருடை அணிய வேண்டிய பணி என்பது தெளிவாகத் தெரிந்திருந்தும், இப்போது அதற்கு எதிராகக் கூக்குரலிடுவது வேடிக்கையானது.
இதைவிடப் பெருங்கூத்து என்னவென்றால், சில சட்டத்தரணிகள் முகநூலில் இதற்கு எதிராகப் பொங்கி எழுவதுதான்!
இந்தச் சட்டத்தரணிகள் தங்களின் மத, கலாச்சார ஆடைகளை அணிந்துகொண்டு நீதிமன்றங்களுக்குச் செல்ல முடியுமா?
தங்களால் தங்கள் சொந்த சீருடை விதியை மாற்ற முடியாதபோது, எதற்காக முகநூலில் பதிவிட்டு அப்பாவிகளைத் தூண்டிவிட்டு, கீழ் நீதிமன்றங்களிலும் அதிகாரிகளிடமும் முறைப்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறீர்கள்?
உண்மையிலேயே நியாயமும் நேர்மையும் இருந்தால், அடிப்படை உரிமை மீறல் என்று நீங்கள் நம்பினால், அதற்குரிய அதிகார வரம்பு கொண்ட உயர் நீதிமன்றத்திற்கு (Supreme Court) சென்று வழக்குத் தொடருங்கள். அதை விடுத்து ஏன் இந்த நாடகம்?
ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் கட்டாயத் தகனம் செய்யப்பட்டபோது, அடிப்படை மனித உரிமைகளுக்காக வாய் திறக்காமல் மௌனம் காத்தவர்கள் இதே கூட்டம்தான். ஆனால், அன்றைய காலகட்டத்தில் முஸ்லிம் மக்களின் மத உரிமைகளுக்காகவும், அவர்களது உடல்கள் மத முறைப்படி அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதற்காகவும் துணிச்சலாகக் குரல் கொடுத்த ஒரே தமிழ் மருத்துவ நிபுணர் நான் என்பதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதற்கும், மலிவான விளம்பரத்திற்காகக் குழப்பம் விளைவிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தைப் பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
— Dr. Murali Vallipuranathan
16.08.2026
05/08/2026
வயது ஐம்பதை கடந்த பிறகாவது அமைதியாக வாழவேண்டும் என நினைத்தால்...
உன்னை வாழ்த்த மனம் இல்லாதவர்கள் இருப்பார்கள்.
அவர்களைப் பற்றி கவலைப்படாதே.
நீ எதை செய்தாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடிக்கக்கூடிய மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள்.
அதையும் பெரிது பண்ணாதே.
உன் லட்சியம் எதுவோ அதை நோக்கி பயணம் போ.
ஒன்றை மட்டும் தெரிந்து கொள்....
ஒவ்வொரு மனிதனும் தனித்தனி ஜென்மங்கள்.
தனித்தனி பிறவிகள்..
தனித்தனி ஆன்மாக்கள்..
அவர்களுக்கென்று தனித்தனி ஆசாபாசங்கள் இருக்கும்.
குணங்களும் இருக்கும்.
அதன் வழியில் தான் அவர்களின் பயணமும் இருக்கும்.
அவர்களை ஒழுங்கு படுத்துகிறேன் என்று வேதனைகளை சுமந்து கொள்ளாதே.
அவர்கள் போகும் வரை போகட்டும். போய் ஒரு அனுபவத்தை பெற்றபின் திரும்பி வருவார்கள் .
அதுவரை நீ பொறுமையாக இருக்க வேண்டும். அவர்கள் போன பாதை நல்லதா? கெட்டதா? என்பதை இவர்களாக உணர்ந்தால்தான் அவர்களுக்கு ஒரு உண்மை தெரியும். அந்த உண்மையை நீ முன்கூட்டியே சொன்னால் உன்னை அவர்களுக்கு பிடிக்காது.
இதுதான் வாழ்க்கையின் தத்துவ உண்மை.
அவர்களது பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அவர்களின் குணங்களும் செயல்களும் இருக்கும்.
அது உடன் பிறந்தவர்களாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும், கணவன், மனைவியாக இருந்தாலும், பெற்ற குழந்தைகளாக இருந்தாலும், பேரன் பேத்திகளாக இருந்தாலும், எந்தஉறவுகளாக இருந்தாலும், அவர்களது பிறவி குணம் ஒரு போதும் மாறாது.
எதைச் செய்ய வந்தார்களோ அதை செய்வதுதானே அவர்களின் விதி. இதை நீ மாற்றி அமைக்க முடியுமா...?
ஒதுங்கி நின்று வேடிக்கை பார்...
பந்த பாசத்தில் உள்ளே விழுந்து அறிவுரை சொல்லுகிறேன் என்று கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்காதே.
அவர்களுக்கு அனுபவம் தான் குரு.
செயற்கையாக ஒரு குணத்தை உருவாக்கி உன்னிடம் அன்பை காட்டினாலும் தான் யார்? தன் குணம் என்ன?, என்பதை ஒரு நாள் வெளிப்படுத்தி விடுவார்கள்.
எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தோடு இருந்து கொள்ள பழகிக் கொள்.
நாம் வந்து போகும் உலகத்தில் பிறந்திருக்கிறோம்.
அவரவர்களுக்கு என்ன வேஷம் கொடுக்கப் பட்டிருக்கிறதோ அதைத்தான் செய்து கொண்டிருக்கிறோம்.
எல்லையில்லாத அன்பை வைத்திருந்தேன் என்னை ஏமாற்றி விட்டார்கள் என்று புலம்பிக் கொண்டு இருக்காதே. கடலுக்கும் ஒரு எல்லை வைத்திருக்கிறான் .
அதையும் மீறி சிலவேளைகளில் வகுத்த எல்லையை கடல் தாண்டி விடுகிறது. அது போல் இயற்கையின் சுபாவங்களைப் போல் மனித இயற்கை சுபாவங்கள் சில நேரங்களில் தங்களை வெளிப்படுத்தி விடும்.
நீ உன்னை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படி வைத்துக் கொண்டு வாழப்பழகிக் கொள்.
அதில் நன்மை வந்தாலும், தீமை வந்தாலும் , உனக்கும் ஒரு அனுபவம் கிடைக்கும் .
அதை வைத்து உன்னையும் திருத்திக் கொள்ளலாம்.
இன்பமானாலும் துன்பமானாலும் அதை நீயே சந்திக்க கற்றுக்கொள். அதை பகிர்ந்து கொள்வதற்கு ஒரு துணையைத் தேடாதே.
நீ பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், வரும் துன்பத்தை எதிர்கொள் ளக்கூடிய ஆற்றலை உருவாக்கிக் கொள்.
மனிதன் மீது வைக்கும் நம்பிக்கையை விட நீ உன் மீது வைக்கும் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்.
உன் கண்ணீரும். உன் கவலையும் உன்னை பலவீனமாக காட்டிவிடும்... அழுவதாலும் சோர்ந்து போவதாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை.
எப்படி இருந்தாலும் நீதான் அந்த சுமையை சுமந்து ஆகவேண்டும். அழுது சுமப்பதை காட்டிலும். ஏற்று சுமப்பது உனக்கு சிரமம் இல்லாமல் இருக்கும்.
தைரியமும் தன்னம்பிக்கையும் தான்
ஒரு மனிதனை உலகத்தில் வாழ வைக்கும் என்ற உண்மையை உணர்ந்துகொள். இந்த பக்குவத்தை அடைந்து விட்டால் எத்துன்பமும் உன்னை நெருங்காது என்பதை உணர்ந்துகொள்.
படித்ததில் பிடித்தது