08/05/2016
வெற்றிபெற்றவர்களுக்கு :
தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் ... உங்கள் வாழ்வில் ஒளி ஏற்றிவைத்துள்ள ஆசிரியப்பணிக்கு கைமாறாக எண்ணற்ற ஏழை மாணவர்களின் மனதில் கல்வி ஒளியையும் அவர்கள் வாழ்வில் அறிவு ஒளியையும் ஏற்றிவைத்து கூடவே அன்பு, அறம், ஒழுக்கம், தியாகம், கருணை, வீரம் போன்ற விழுமியங்களையும் கற்றுத்தாருங்கள் .........
தோல்வியடைந்தவர்களுக்கு :
உங்கள் தோல்விகளை விதையுங்கள், நம்பிக்கை எனும் உரமூட்டுங்கள், தொடர்ந்து முயற்சி எனும் நீர்வார்த்து வாருங்கள், நாளை உங்கள் கைகளிலும் வெற்றிக்கனி வந்து விழலாம் ! வெற்றி பெற்றவர்கள் தங்கள் வாழ்க்கையை வரலாற்றில் வெறுமனே பதிவு செய்துவிட்டு மட்டும் செல்கிறார்கள். தோல்வியடைந்தவர்கள்தான் தங்கள் வாழ்க்கையையே ஒரு பாடமாக விட்டுச் செல்கிறார்கள் ! தோல்வி நமது தகுதிகளையும் திறமைகளையும் இன்னும் ஒருபடி மேலே இட்டுச்செல்வதற்கான ஒரு தளம் ! தோல்வியடைந்தவர்களே மனம் தளராதீர்கள் ! அரசுப்பணி பெற்றவர்களின் பெயர்களை எல்லாம் வரலாறு தமது பக்கங்களில் எழுதிக்கொள்வதில்லை ! ஒரு விவேகானந்தர் அரசுப்பணியாளர் அல்ல , ஒரு வைரமுத்து அரசுப்பணியாளர் அல்ல, ஒரு சச்சின் டெண்டுல்கர் அரசுப்பணியாளர் அல்ல , ஒரு அம்பானி அரசுப்பணியாளர் அல்ல, ஒரு ரஹ்மான் அரசுப்பணியாளர் அல்ல , இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் !
" இதையெல்லாம் வெளியிலிருந்து சொல்வதற்கு நன்றாகத்தான் இருக்கும் . தோல்வியடைந்தால்தான் தெரியும் அதன் துக்கமும் வலியும். " என்று சொல்பவர்களுக்கு
இந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் நானும் மோசமான முறையில் தோல்வியைத் தழுவியவன்தான் ! இந்தத் தோல்வியை முன்கூட்டியே உத்தேசித்து நானெழுதிய ஒரு கவிதை :
ஒரு தோல்வியை
அதன்
பச்சை வாசனையோடு
அப்படியே
அப்படியே
எதிர்கொள்ளப் போகிறேன் !
என்
நம்பிக்கையெனும் தீவுகளை
ஒரு சுனாமியென
அது
ஆக்கிரமிக்கட்டும் !
தன்
பள்ளத்தாக்கைக் காட்டி
அது என்னை
பயமுறுத்தினாலும்
தற்கொலைக் கிளைகளை
நாடப்போவதில்லை
நான் !
ஒரு
சிகெரெட் புகையைப் போல
நுரையீரல் முழுக்க
இதமாய்ப் பரவட்டும்
விரக்தி !
என்
முயற்சிகளுக்கு அடிக்கும்
சாவுமணியோசையில்
தியானம் பழகவேண்டும்
நான் !
தோல்வியின் மயானத்தில்
செவ்வனே நடக்கட்டும்
என்
காத்திருப்புகளின்
இறுதிச்சடங்கு !
ஒரு வெற்றியை
அத்தனை தயாரிப்புகளோடும்
கொண்டாட
காத்திருப்பது போல
நான்
காத்திருக்கிறேன் .............
வா
தோல்வி
வா !