01/05/2021
புதிய சுகாதார வழிகாட்டி தமிழ் மொழி பெயர்ப்பு..!
கொரோனா தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் சுகாதார அமைச்சினால் புதிய சுகாதார வழிகாட்டி இன்று வெளியிடப்பட்டுள்ளது.
சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால் இந்த சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
01. மகாநாடுகள், செயலமர்வுகள், கூட்டங்கள், மதியநேர விருந்துபசாரங்களை நடத்துவதற்கு 2021.05.21ம் திகதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர் நாட்டில் காணப்படுகின்ற கொரோனா நிலைமை குறித்து ஆராய்ந்து எதிர்கால அறிவிப்பு பிறப்பிக்கப்படும்.
02. பல்பொருள் அங்காடிகள், பிரமாண்ட விற்பனை நிலையங்கள், நிதி நிறுவனங்கள், ஆடை விற்பனை நிலையங்கள், சில்லறை வர்த்தக நிலையங்கள் ஆகியன முழு அளவில் 25 வீத அளவுடன் செயற்பட வேண்டும்.
03. மூடிய இடங்கள் மற்றும் திறந்த இடங்களில் நடத்தப்படும் நிகழ்வுகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
04. மதத் தலங்களில் பொதுமக்கள் ஒன்று கூடக்கூடாது.
05. திரையரங்குகள், அரங்குகள், சிறுவர் பூங்காக்கள், நீச்சல் தடாகம், Pub, பார் (Bars), கசினோ (Casino), இரவு நேர களியாட்ட விடுதிகள், பந்தய நிலையங்கள் ஆகிய இடங்கள் மூடப்படுகின்றன.
06. ஹோட்டல்கள், வாடிவீடுகள், ஏனைய தங்குமிடங்களில் 50 வீதமானோர் மாத்திரமே இருக்க முடியும் என்பதுடன், இரவு 10 மணிக்கு பின்னர் செயற்பட கூடாது.
07. கானிவல், இசை நிகழ்ச்சிகள், நிகழ்வுகள் ஆகியவற்றை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
08. திறந்த வர்த்தக நிலையங்கள், சந்தை, பேக்கரி ஆகியன முழு அளவில் 25 வீதம் மாத்திரமே செயற்பட அனுமதி வழங்கப்படுகின்றது.
09. நீதிமன்றம், முழு அளவில் 25 வீதம் மாத்திரமே செயற்பட வேண்டும் என்பதுடன், மக்கள் வருகைத் தர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
10. சிறைச்சாலைகளில் கைதிகளை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
11. பாடசாலைகள், ஆரம்ப பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள், மேலதிக வகுப்புக்கள் மறு அறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை மூடப்பட்டுள்ளன.
12. 2021ம் ஆண்டு மே மாதம் 4ம் திகதி முதல் மே மாதம் 20ம் திகதி வரை திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் நாட்டில் காணப்படுகின்ற கொவிட் நிலைமை குறித்து ஆராய்ந்து எதிர்கால அறிவிப்பு பிறப்பிக்கப்படும்.