24/05/2026
சான்றிதழ் வழங்கும் நிகழ்வு - 2026
(Certificate Awarding Ceremony)
மாதம்பை இஸ்லாஹிய்யாவின் துணை நிறுவனமான தகவல் தொழில்நுட்பத்திற்கான இஸ்லாமிய நிறுவனத்தினால் (Islamic Institute of Information Technology -IIIT) இவ்வருடம் க.பொ.த (சாதாரண தரப்) பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு நடாத்தப்பட்ட 50 நாட்கள் தலைமைத்துவ மற்றும் முகாமைத்துவ (Leadership and Management Studies - LMS) வதிவிட கற்கைநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த 23.05.2026 அன்று இஸ்லாஹிய்யா கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இஸ்லாஹிய்யாவின் முதல்வர் கலாநிதி எம். இஸட். எம். முபீர் (இஸ்லாஹி),
IIIT நிறுவனத்தின் முகாமையாளர் கலாநிதி ஏ.ஏ.எம். ஸாதிக் (இஸ்லாஹி) ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இஸ்லாஹிய்யா தொடர்பான அறிமுகத்தை கல்வி விவகாரப் பகுதியின் தலைவர் அஷ்ஷெய்க் எச்.எம். நிஸாம்தீன் (இஸ்லாஹி)நிகழ்த்தினார்.
இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலங்கை விமானப் படையின் ஓய்வுபெற்ற விங் கொமாண்டர் (Wing Commander) எம்.எச்.எம்.சீபா கலந்து சிறப்பித்தார்.
பல மாணவர்களை ஆன்மீகம் ஒழுக்கம், பண்பாடு, ஆளுமை ரீதியாக வழிகாட்டிய பல தசாப்த கால அனுபவத்தைக் கொண்ட IIIT நிறுவனத்தினால் நடாத்தப்படும் இந்த தலைமைத்துவம் மற்றும் முகாமைத்துவ (LMS) வதிவிடக் கற்கைநெறியின் நோக்கங்கள் மற்றும் இலக்குகளை தற்கால புதிய மறுசீரமைப்புடன் அஷ்ஷெய்க். ரிழ்வான் (இஸ்லாஹி) தெளிவுபடுத்தினார்.
இந்த 50 நாட்கள் வதிவிட செயலமர்வில் கலந்து கொண்ட மாணவர்களில் கல்வி செயற்பாடுகள், தலைமைத்துவம், ஆன்மீக ரீதியாக அதிகூடிய திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பதக்கங்களும் அணிவித்து கெளரவிக்கப்பட்டது.
மாணவர்கள் 50 நாட்களும் கடந்து வந்த தங்களது நாட்களை தொகுத்து சுவாரஸ்யமான முறையில் தயார் செய்த ஆவண வீடியோ, குறுந்திரைப்படமும் பெற்றோர்களுக்கு காண்பிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட பெற்றோர்கள் தங்களது மாணவர்களில் ஏற்பட்ட சாதகமான பல ஆளுமை ரீதியான மாற்றங்களினால் திருப்தியுற்று தங்களது பின்னூட்டல்களைத் தெரிவித்து மகிழ்ச்சி அடைந்தமை இந்த நிகழ்வின் விஷேட அம்சமாகும்.
இந் நிகழ்வில் மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் பல கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
இந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள், இஸ்லாஹிய்யா விரிவுரையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.