16/06/2026
🟩 கர்பலா எழுச்சி 🟩
⬜️ இமாம் ஹுஸைன் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் எழுச்சி மனித சிந்தனைகளை ஆழமாகக் கவர்ந்த அரிய வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாகும். இஸ்லாமிய வரலாற்றில் அதற்கு மிக உயர்ந்த இடம் உண்டு. ஹுஸைன் பின் அலீ (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் ஷஹாதத் (தியாகம்) இஸ்லாத்திற்கு புதிய உயிரூட்டியது; இரத்தங்களை கொதிக்கச் செய்தது; மக்களை மந்தநிலையிலிருந்தும் அலட்சியத்திலிருந்தும் வெளியே கொண்டு வந்தது.
⬜️ இமாம் ஹுஸைன் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வீரமிக்க எழுச்சி, முஸ்லிம் சமூகத்தின் உள்ளங்களில் புதிய உயிர்ப்பை ஏற்படுத்தியது. உஸ்மானின் ஆட்சியின் இறுதிக் காலத்திலிருந்து இஸ்லாமிய சமூகத்தில் பரவியிருந்த இழிவு, அடிமைத்தனம் மற்றும் பலவீன உணர்வுகளை அது தளர்த்தியது.
⬜️ இந்த மாபெரும் நிகழ்வு நிகழ்ந்த காலத்திலிருந்து இன்று வரை, இஸ்லாமிய உம்மத் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளும் உண்மை என்னவெனில், கர்பலா புரட்சி இஸ்லாத்தின் கண்ணியத்தையும் மகத்துவத்தையும் மீண்டும் உயிர்ப்பித்தது என்பதாகும்.
⬜️ பலவீனமான ஆட்சியாளர்களின் ஆதிக்கம், மார்க்க மதிப்புகளும் புனிதங்களும் அவமதிக்கப்பட்ட நிலை ஆகியவற்றால் மங்கியிருந்த இஸ்லாமிய ஒளியை கர்பலா மீண்டும் பிரகாசிக்கச் செய்தது. இமாம் ஹுஸைன் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் இயக்கம் அனைத்து தலைமுறைகளுக்கும், அனைத்து காலங்களுக்கும் உரிய தொடர்ச்சியான ஒரு விழிப்புணர்வு இயக்கமாகும்.
⬜️ கர்பலா புரட்சி ஒரு தனித்துவமான புரட்சியாகும். அதன் ஒவ்வொரு நிகழ்வும் நடந்தபடியே சித்தரிக்கப்பட்டால், யாராலும் தமது இயல்பான உணர்வுகளையும் மனவேதனையையும் கட்டுப்படுத்த முடியாது. ஏனெனில் இந்தப் பேரவலம், இமாம் ஷாஃபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறியதுபோல், உலகையே அதிரவைத்தது; மலைச் சிகரங்களையே உருகச் செய்யும் அளவிற்கு வேதனையை ஏற்படுத்தியது.
⬜️ கர்பலா நிகழ்வு அஹ்லுஸ் சுன்னத் அறிஞர்களிடையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்களுடைய அறிஞர்கள் பலர் தமது பேச்சுகளிலும் எழுத்துகளிலும் அதனை விவரித்தும் ஆய்வு செய்தும் உள்ளனர். ஷௌகானி அவர்கள் தமது “நைலுல் அவ்தார்” என்ற நூலில், சில அரசவைக் பேச்சாளர்களின் கருத்துக்களை மறுத்து இவ்வாறு குறிப்பிடுகிறார்:
“சிலர் அளவுகடந்துப் போய், ‘நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி) அவர்களின் பேரனும் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றவருமான இமாம் ஹுஸைன் (அலைஹிஸ்ஸலாம்), எப்போதும் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த ஒருவருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து, யஸீத் பின் முஆவியாவின் ஆட்சியின் மரியாதையை குலைத்தார்’ என்று கூறியுள்ளனர்.”
பின்னர் ஷௌகானி அவர்கள் கூறுகிறார்:
“அல்லாஹ் அவர்களைச் சபிப்பானாக! மனிதனின் உடலிலுள்ள ரோமங்கள் சிலிர்க்கும் அளவிற்கு வியப்பூட்டும் மற்றும் அருவருப்பான வார்த்தைகளையே அவர்கள் கூறியுள்ளனர்.”
⬜️ தஃப்தாஸானி அவர்கள் தனது ஷர்ஹுல் அகாயித் என்ற நூலில் எழுதுகிறார்:
“இமாம் ஹுஸைன் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் கொலையில் யஸீத் திருப்தியடைந்ததும், அந்தச் செய்தியைக் கேட்டு மகிழ்ச்சியடைந்ததும், நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினரை அவமதித்ததும், அர்த்த ரீதியாக முதவாத்திர் (பெருமளவில் பரவிய உறுதியான) அறிவிப்புகளால் நிரூபிக்கப்பட்ட உண்மைகளாகும்; அவற்றின் அனைத்து விவரங்களும் முதவாத்திர் அல்லாவிட்டாலும். யஸீதின் நிலைமையைப் பற்றியும், அவனுடைய ஈமானைப் பற்றியும் — அல்லாஹ்வின் சாபம் அவன் மீதும் அவனுடைய ஆதரவாளர்கள் மீதும் உண்டாவதாக — எங்களுக்கு எந்த நல்ல கருத்தும் இல்லை.”
⬜️ ஜாஹிழ் கூறுகிறார்:
“யஸீத் செய்த தீய செயல்கள் — இமாம் ஹுஸைன் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைக் கொன்றது, அவருடைய பெண்கள் மற்றும் பிள்ளைகளைச் சிறைபிடித்தது, மதீனாவாசிகளை அச்சுறுத்தியது, கஃபாவை சேதப்படுத்தியது — இவை அனைத்தும் அவனுடைய பாவச்செயல், கொடூரம், பகைமை, நயவஞ்சகம் மற்றும் ஈமானிலிருந்து வெளியேறிய நிலை ஆகியவற்றிற்கான தெளிவான சான்றுகளாகும்.
எனவே யஸீத் ஒரு பாவியும் சபிக்கப்பட்டவனுமாவான். அவனைச் சபிப்பதைத் தடுக்கின்றவனும் சபிக்கப்பட்டவனே ஆவான்.”
⬜️ இப்னு ஹஜர் அல்-ஹைதமி அல்-மக்கி அவர்கள் தனது அஸ்-ஸவாஇகுல் முஹ்ரிகா என்ற நூலில் எழுதுகிறார்:
“இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களிடம், அவருடைய மகன் யஸீதைக் சபிப்பது குறித்து கேட்டார். அதற்கு இமாம் அஹ்மத் அவர்கள்:
‘அல்லாஹ் குர்ஆனில் சபித்த ஒருவரை எவ்வாறு சபிக்காமல் இருக்க முடியும்?’ என்று பதிலளித்தார்.
அல்லாஹ் கூறுகிறான்:
‘நீங்கள் ஆட்சியைக் கைப்பற்றினால் பூமியில் குழப்பம் ஏற்படுத்தி, உறவுகளைத் துண்டித்து விடுவீர்களா? அவர்கள் அல்லாஹ்வின் சாபத்திற்குரியவர்கள்.’ (ஸூரா முஹம்மத்: 22–23)
⬜️ யஸீத் செய்ததைவிடப் பெரிய குழப்பமும், உறவுகளைத் துண்டித்தலும் வேறு என்ன இருக்க முடியும்?”
அப்துர்ரஸ்ஸாக் முகர்ரம் அவர்கள் தனது மக்தலுல் ஹுஸைன் என்ற நூலில் கூறுகிறார்:
“காதி அபூ யஃலா, ஹாஃபிழ் இப்னுல் ஜவ்ஸி, தஃப்தாஸானி, சுயூதி ஆகியோர் உள்ளிட்ட பல அறிஞர்கள் யஸீதின் குஃப்ர் (இறைநம்பிக்கையின்மை) குறித்து உறுதியான கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், முழு நேர்மையுடனும் வெளிப்படையாகவும் அவனைச் சபிப்பது அனுமதிக்கப்பட்டதாகக் கருதியுள்ளனர்.”
⬜️ ஷதராத்துத் தஹப் என்ற நூலின் ஆசிரியர் எழுதுகிறார்:
“யஸீதைச் சபிப்பது குறித்து இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்களிடமிருந்து இரண்டு கருத்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றில் மறைமுகமாகவும் மற்றொன்றில் வெளிப்படையாகவும் யஸீதைச் சபிக்கிறார். இமாம் மாலிக் மற்றும் இமாம் அபூ ஹனீஃபா ஆகியோரும் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் யஸீதைச் சபித்துள்ளனர். உண்மையில் அவ்வாறு இல்லாமல் இருப்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? ஏனெனில் அவன் சூதாட்டத்தில் ஈடுபட்டவனாகவும், எப்போதும் மதுபானம் அருந்திக் கொண்டிருந்தவனாகவும் இருந்தான்.”
⬜️ ஷெய்க் முஹம்மத் அப்துஹ் அவர்கள் கூறுகிறார்:
“உலகத்தில் அல்லாஹ்வின் சட்டத்தையும் வரம்புகளையும் நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு நீதியான ஆட்சி இருக்கும்போது, அதற்கு எதிராக அந்த நீதியை அழிக்க விரும்பும் ஒரு கொடுங்கோல் ஆட்சி இருந்தால், ஒவ்வொரு முஸ்லிமும் நீதியான ஆட்சிக்கு ஆதரவளிப்பது கடமையாகும். இந்த அடிப்படையில்தான் இமாம் ஹுஸைன் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் எழுச்சியையும் புரிந்துகொள்ள வேண்டும். அவர், அல்லாஹ் இழிவுபடுத்திய யஸீதின் ஆட்சிக்கு எதிராக எழுந்து நின்றார்.”
⬜️ ஸிப்த் இப்னுல் ஜவ்ஸி அவர்களிடம் யஸீதைச் சபிப்பது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறினார்:
“இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்கள் யஸீதைச் சபிப்பதை அனுமதித்துள்ளார். நாங்களும் அல்லாஹ்வின் தூதரின் மகளின் மகனுக்கு எதிராக அவன் புரிந்த குற்றங்களின் காரணமாக அவனை நேசிப்பதில்லை. இதுவும் போதாது என்று யாரேனும் கருதினால், யஸீதைச் சபிப்பதே அடிப்படையான நிலைப்பாடு என்று நாங்களும் கூறுகிறோம்.”
⬜️ கர்பலா நிகழ்வு மக்களின் இதயங்களில் ஆழமாகப் பதிந்துவிட்டதால், அஹ்லுஸ் சுன்னா அறிஞர்களில் பலர் அதைப் பற்றிய தமது துயரத்தையும் வேதனையையும் கவிதைகளின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளனர்.
⬜️ அஹ்லுல் பைத் மீது கொண்ட அன்புக்காகப் புகழ்பெற்ற இமாம் ஷாஃபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கர்பலா எழுச்சியைப் பற்றி இவ்வாறு பாடியுள்ளார்:
“ஹுஸைன் (அலைஹிஸ்ஸலாம்) குற்றமின்றி கொல்லப்பட்டவராவார்;
அவருடைய ஆடை அவருடைய இரத்தத்தால் சிவந்துள்ளது.
ஹாஷிம் குடும்பத்தைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட நபி (ஸல்லல்லாஹு அலைஹி வ ஆலிஹி) மீது நாம் ஸலவாத் சொல்கிறோம்;
ஆனால் அவருடைய சந்ததியினரைத் துன்புறுத்துகிறோம். இது எவ்வளவு வியப்பானது!
முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தை நேசிப்பதே எனது குற்றமாக இருந்தால்,
அத்தகைய ‘குற்றத்திற்காக’ நான் ஒருபோதும் தவ்பா செய்யமாட்டேன்.
மறுமை நாளில் அஹ்லுல் பைத் எனது பரிந்துரையாளர்களாக இருப்பார்கள்;
அவர்களிடம் பகைமை கொள்வது இமாம் ஷாஃபிஈயின் பார்வையில் மன்னிக்க முடியாத பாவமாகும்.”