09/01/2021
பாடசாலைகளில் சுகாதார வழிமுறை; அதிபர், ஆசிரியர்களுடன் பெற்றோரே பொறுப்பு - கல்வியமைச்சின் செயலாளர். Thinakaran 08.01.2021
தனிமைப்படுத்தலுக்குட்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த நாட்டில் ஏனைய அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 11ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ள நிலையில் தனிமைப்படுத்தல் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவரும் முக்கிய கவனம் செலுத்த வேண்டுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அது தொடர்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டுமென்றும் அதேவேளை மாணவர்கள் கூட்டம் கூட்டமாக இருப்பதை தவிர்ப்பது.உணவு வேளைகளிலும் அவர்கள் ஒன்றிணைந்து உணவு உண்பது போன்ற நடவடிக்கைகள் தவிர்த்துக் கொள்ளப்பட வேண்டுமென்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
பிள்ளைகளை சுகாதார முறைகளைப் பின்பற்றி பாடசாலைகளுக்கு அழைத்து வருவது தொடர்பில் பெற்றோர்,ஆசிரியர்கள்,அதிபர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மிகுந்த பொறுப்புடன் செயல்பட வேண்டியது தொடர்பிலும் கல்வியமைச்சு வலியுறுத்தியுள்ளது. அது தொடர்பில் கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா விஷேட தெளிவுபடுத்தலை வழங்கியுள்ளார்.
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டுள்ள பிரதேச பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 11ஆம் திகதி இரண்டாம் வகுப்பு முதல் பதிமூன்றாம் வகுப்பு வரையான மாணவர்களுக்காக திறக்கப்பட உள்ளது. அதேவேளை எதிர்வரும் 25ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தலிலுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த மேல் மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.