17/05/2026
ஒருத்தர் நல்ல Character உள்ளவங்க அப்படிங்கிறதுக்கான 13 அறிகுறிகள்!
1. அவர்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவார்கள்: நல்ல குணமுடையவர்கள் தங்கள் கடமைகளைச் சரியாகச் செய்வார்கள். அவர்கள் ஒரு விஷயத்தைச் செய்வதாகச் சொன்னால், அதை நிச்சயம் செய்வார்கள். அவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகள் வெறும் வார்த்தைகள் அல்ல—அவை அவர்கள் மதிக்கும் புனிதமான பிணைப்புகள்.
2. யாரும் கவனிக்காத போதும் அவர்கள் அன்பாக இருப்பார்கள்: ஒருவரின் உண்மையான குணம் தனிமையான தருணங்களில்தான் வெளிப்படும். அவர்கள் அங்கீகாரத்தை எதிர்பார்க்காமல் உதவி செய்வார்கள், தாராளமாக டிப்ஸ் (Tips) வழங்குவார்கள், மற்றும் சேவைப் பணியாளர்களை மரியாதையுடன் நடத்துவார்கள். நற்குணம் என்பது அவர்கள் செய்யும் நடிப்பு அல்ல—அது அவர்களின் இயல்பு.
3. அவர்கள் பொறுப்பேற்பார்கள்: சாக்குப்போக்கு சொல்லாமலோ அல்லது மற்றவர்கள் மீது பழி சுமத்தாமலோ, அவர்கள் தங்கள் தவறுகளை ஒப்புக்கொள்வார்கள். திசைதிருப்பாமல் "நான் செய்தது தவறு" என்று கூறுவார்கள். இந்த பொறுப்புணர்வு நம்பிக்கையை உருவாக்குகிறது மற்றும் அவர்களின் முதிர்ச்சியை உணர்த்துகிறது.
4. அவர்கள் மற்றவர்களின் வெற்றியைக் கொண்டாடுவார்கள்: அவர்களிடம் பொறாமையோ, கசப்புணர்வோ இருக்காது. இலக்குகளை அடைபவர்களுக்காக அவர்கள் உண்மையாகவே மகிழ்வார்கள். உங்கள் வெற்றி அவர்களைத் தாழ்த்தாது—மாறாக அவர்களுக்கு உத்வேகம் அளிக்கும்.
5. அவர்கள் தொடர்ந்து தங்களை மேம்படுத்திக் கொள்வார்கள்: நற்குணம் கொண்டவர்கள் வளர்ச்சி என்பது ஒருபோதும் முடிவடையாதது என்று நம்புகிறார்கள். அவர்கள் கருத்துக்களைக் (Feedback) கேட்டுப் பெறுவார்கள், தவறுகளிலிருந்து கற்றுக்கொள்வார்கள், எப்போதும் அறிவாளியாக மாற உழைப்பார்கள்.
6. கடினமான சூழலிலும் அவர்கள் சரியானதையே செய்வார்கள்: நேர்மைக்கும் சௌகரியத்திற்கும் இடையே போட்டி வரும்போது, அவர்கள் நேர்மையையே தேர்ந்தெடுப்பார்கள். சங்கடமான சூழலிலும் குரல் கொடுப்பார்கள், சிரமமான நேரத்திலும் உதவி செய்வார்கள், மற்றும் இழப்புகள் ஏற்படும் போதும் உறுதியாக நிற்பார்கள்.
7. அவர்கள் பேசுவதை விட அதிகமாகக் கேட்பார்கள்: உரையாடல்களில் அவர்கள் முழுமையாக ஈடுபடுவார்கள், ஆழமான கேள்விகளைக் கேட்பார்கள் மற்றும் உங்கள் வாழ்க்கையைப் பற்றிய விவரங்களை நினைவில் வைத்திருப்பார்கள். அவர்கள் பேசுவதற்காகத் தங்கள் முறை வரும் வரை காத்திருக்க மாட்டார்கள்—உங்களை உண்மையிலேயே புரிந்துகொள்ள விரும்புவார்கள்.
8. அவர்கள் உண்மையாக மன்னிப்பு கேட்பார்கள்: ஒரு உண்மையான மன்னிப்பில் "ஆனால்" (But) என்ற வார்த்தைக்கு இடம் இருக்காது. அவர்கள் செய்த பாதிப்பை ஒப்புக்கொள்வார்கள், உண்மையான வருத்தத்தை வெளிப்படுத்துவார்கள், மேலும் விஷயங்களைச் சரிசெய்ய நடவடிக்கை எடுப்பார்கள். சரியானதைச் செய்வதில் அவர்களின் ஈகோ (Pride) ஒருபோதும் தடையாக இருக்காது.
9. அவர்கள் புறம் பேச மாட்டார்கள்: மற்றவர்களைப் பற்றி அவர்களின் முதுகிற்குப் பின்னால் எதிர்மறையாகப் பேச மறுப்பார்கள். ஒருவருடன் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதை நேரடியாகவே பேசித் தீர்ப்பார்கள். உங்கள் ரகசியங்கள் அவர்களிடம் பாதுகாப்பாக இருக்கும், மேலும் அவர்கள் தேவையற்ற வதந்திகளை ஊக்கப்படுத்த மாட்டார்கள்.
10. அவர்கள் நச்சுத்தன்மையான (Toxic) உறவுகளைத் தவிர்ப்பார்கள்: எந்தெந்த நபர்கள் அல்லது உறவுகள் தங்கள் ஆற்றலை உறிஞ்சுகின்றன என்பதை அவர்கள் கண்டறிவார்கள். எதிர்மறையான விஷயங்களில் ஈடுபடுவதற்குப் பதிலாக, தங்களைச் சுற்றியுள்ள சூழலை (சமூக வலைதளங்கள் உட்பட) ஆரோக்கியமாக மாற்றிக்கொள்வார்கள்.
11. அவர்கள் நிலையானவர்கள்: ஒவ்வொரு முறையும் நீங்கள் அதே மனிதரையே சந்திப்பீர்கள். அவர்களிடம் முன்னுக்குப் பின் முரணான (Jekyll-and-Hyde) பழக்கவழக்கங்கள் இருக்காது. அறையில் யார் இருக்கிறார்கள் அல்லது தங்களுக்கு என்ன லாபம் கிடைக்கும் என்பதைப் பொறுத்து அவர்களின் கொள்கைகள் மாறாது. இத்தகைய நம்பகத்தன்மை மிகவும் அரியது மற்றும் மதிப்புமிக்கது.
12. அவர்கள் எல்லைகளை மதிப்பார்கள்: நீங்கள் "இல்லை" என்று சொல்லும்போது, அவர்கள் அதை கண்ணியமாக ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் உங்களை குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கவோ, கையாளவோ (Manipulate) அல்லது வற்புறுத்தவோ மாட்டார்கள். உங்கள் எல்லைகளுக்கு மதிப்பளிப்பது அவர்களின் ஆழ்ந்த மரியாதை மற்றும் உணர்ச்சி ரீதியான முதிர்ச்சியை (Emotional Intelligence) காட்டுகிறது.
13. அவர்கள் அனைவரையும் சமமாக நடத்துவார்கள்: ஒரு நிறுவனத்தின் தலைமை அதிகாரி (CEO) முதல் தூய்மைப் பணியாளர் வரை, அவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான மரியாதையை அளிப்பார்கள். ஒருவரின் அந்தஸ்து, செல்வம் அல்லது பதவி அவர்களை மதிப்பிடுவதற்கான அளவுகோலாக இருக்காது. இது அவர்களின் உண்மையான அடக்கத்தையும் நற்பண்பையும் வெளிப்படுத்துகிறது.
❤️❤️❤️❤️
29/04/2026
#ஐம்பதில்_ஆட்டத்தைத்_தொடங்குங்கள்...
உள்ளதை எல்லாம் உள்வாங்கி
உள்ளத்தையும் உடலையும் மேம்படுத்த உறுதி கொண்டால் மட்டுமே வாழ்வியலில் வாழ்க்கையை புரிந்து கொள்ள முடியும்.....
இப்போதெல்லாம் 50 வயதைத் தொட்டவுடன், உடலளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்று நம்மில் பலர் முடிவு செய்து கொள்கிறார்கள்... 50 வயதுக்குப் பிறகு தான் ஒரு பலமான, வளமான மூளையோடு நாம் பயணிக்க ஆரம்பிக்கிறோம்... பல விஷயங்களில் அனுபவப்பட்டு, தெளிந்து, வாழ்க்கையை புரிதலோடு பார்க்கிற பருவம் இந்த இரண்டாவது இன்னிங்ஸ் தான்...
வாழ்க்கையில் 50-ல் ஓரளவு உந்துசக்தி குறைந்து போகும். இனி என்ன என்ற சோம்பேறி சாய்தளம் நம்மை ஆள, அதனால் பல நோய்களும் நம்மை சூழ முற்படும்... 50 வயதுக்கு மேல் தவறாமல் செய்ய வேண்டிய அவசியமான விஷயங்கள்:
புதிய உந்துசக்தியை உருவாக்க புதிதான, உங்களுக்கும் தேவையான சவால் ஒன்றைக் கையிலெடுங்கள்...
உங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள கடினமான இலக்கை முன்னிலைப்படுத்தி அதனை நோக்கி நிதானமாக, ஆனால் உறுதியோடு செல்லுங்கள்... எப்போதுமே புதிய விஷயங்களைத் தேடுங்கள், புதிய மனிதர்களிடம் பேசுங்கள்...
60 வயதுக்கு மேற்பட்ட ஆட்களோடு உட்கார்ந்து முதியோர் அரங்கம் உருவாக்காதீர்கள்...
இளைஞர்களோடு பழகுங்கள். 25 வயதில் இருந்த உத்வேகம் அவர்களிடமிருந்து உங்களுக்கு மீளக் கிடைக்கும்...
அழகான உடைகளை ரசனையுடன் தேர்வு செய்து, மிடுக்காக உடுத்துங்கள். 50 வயதில் நரையும், திரையும், வழுக்கையும் அழகு தான்...
உலகின் மிகப்பெரிய சாதனைகளைச் செய்தவர்கள், நிறைய பேரை ஈர்க்கின்றவர்களில் 50+ காரர்கள் தான் அதிகம்...
பெரும்பாலான இளைஞர்களுடன், ஒத்த கருத்து நண்பர்களுடன் புதிய இடங்களுக்கு, புதிய அனுபவங்களைத் தேடிப் பயணம் செல்லுங்கள்...
வேறுபட்ட மனிதரோடு உரையாடுங்கள்..... திசையறியா ஆர்வமூட்டும் பயணங்கள் நம்மை பள்ளிப் பருவத்திற்கு இட்டுச் சென்று துள்ளிக் குதிக்க வைக்கும்...
புதிய நவீன சிந்தனையாளர்களின் புத்தகங்களைத் தேடி நிறைய படியுங்கள். உங்கள் மூளைக்கு தீனி போட நிறைய, நிறைய புதிய விஷயங்களைத் தேடிப் படியுங்கள்...
நகைச்சுவைக் கதைகளை, நிகழ்வுகளை, ஒளிமங்களை விரும்பிக் காணுங்கள்...
சிரித்துப் பேசுங்கள், பிறர் சிரிக்கப் பேசுங்கள், உங்களைச் சுற்றி ஒரு ஒளி வட்டம் நிலையாகும்...
விரோதிகளை விலக்குங்கள், பெருமைக்காரர்களை, பொறாமைக்காரர்களை கால விரயம் கருதி ஒதுக்குங்கள்...
மன ஆரோக்கியம், உடல் ஆரோக்கியம் பேணுங்கள், நடைப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி,
சிறு சிறு ஆசனங்கள் தவறாது செய்யுங்கள்...
வாரம் ஒரு முறையாவது உங்கள் இணை மனதினருடன் சிரித்து, மகிழ்ந்து, உண்டு, உறவாடுங்கள்...
மறந்தும் சாய்வு நாற்காலிவாசிகள் பக்கம் ஒதுங்கி விடாதீர்கள், உங்களை அவர்கள் பக்கத்திலேயே படுக்க வைத்து விடுவார்கள்...
பொதுச்சேவையில் நாட்டம் கொள்ளுங்கள். ஏரி, குளம், தூய்மை, சுற்றுச்சூழல், பசுமை, சமூக நேர்மை காத்தலில் ஆர்வம் கொள்ளுங்கள்...
மகன், மகள் மற்றும் குறிப்பாக மருமகளைத் திட்டாதீர்கள்... முதலில் நம்மைச் சார்ந்தவர்களுக்கு, பின்னர் அடுத்தவர்களுக்கு, உதவி தேவைப் படுபவர்களுக்கு, உங்களால் இயன்ற வகையில் உதவுங்கள். அவர்கள் நன்றியில் உங்களை நீங்களே புதிதாக ரசித்து மகிழ்வீர்கள்...
எப்போதுமே முதல் இன்னிங்சை விட இரண்டாம் இன்னிங்க்ஸ் தான் நாம் வாழ்ந்த வாழ்வின் அர்த்தங்களை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது...
மேற்சொன்ன விஷயங்களை சரியாகச் செய்தால் 50+ ஆரோக்கியம் பற்றிக் கவலைப்படத் தேவையே இல்லை.
மூளையும், மனசும், உடலும் சரியாக இயங்க ஏற்பாடு செய்து விட்ட பிறகு ஆரோக்கியத்தில் என்ன பிரச்சனை வந்து விடப் போகிறது...
20/03/2026
🚨 காசை பேங்கில போட்டு பூட்டி வைக்கிறியளோ? அப்ப நீங்க ஒரு பெரிய இளிச்சவாயன் தான்! 🚨
இப்படிச் சொன்னா எங்கட ஆக்களுக்கு வடிவாக் கோவம் வரும் எண்டு எனக்குத் தெரியும். இருந்தாலும் சொல்லித் தானே ஆகோணும்!
"காசைச் சேர்த்து வைக்கிறவை எல்லாம் லூசுகள்".
ஏன் எண்டு கேக்கிறியளோ? நீங்க காசைக் கையாளத் தெரியாதவை எண்டதால இல்ல. இந்த சிஸ்டமே உங்களை மாதிரி காசைச் சேர்த்து வைக்கிறவங்களை நசுக்கிற மாதிரித் தான் டிசைன் பண்ணப்பட்டிருக்கு.
கொஞ்சம் வடிவா விளங்கப்படுத்துறன், கேளுங்கோ... 👇
உங்கட உழைப்பில வந்த காசை கொண்டுபோய் பேங்கில போட்டதும் ஏதோ பெரிய உலகக் கோப்பையை வெண்ட மாதிரி ஒரு பெருமை வரும்! "சேமிப்பு", "பாதுகாப்பு", "எதிர்காலத் திட்டம்" எண்டு உங்களுக்கு நீங்களே பீலா விட்டுக்கொள்ள வேண்டியது.
எல்லாம் சுத்த ஹம்பக்! 🤦♂️
உண்மையில என்ன நடக்குது எண்டு தெரியுமோ?
நீங்க கொண்டு போய் பேங்கில காசைக் குடுத்த அடுத்த செக்கன்... அது உங்கட காசு இல்ல. அது பேங்க்காரண்ட சொத்து! உங்கட சேமிப்பைத் தான் அவனுகள் மூலதனமா வைச்சு வியாபாரம் செய்றானுகள்.
* உங்கட காசை எடுத்து மற்றவங்களுக்குக் கடனா குடுப்பானுகள்.
* பளுவான வட்டியைக் கறப்பானுகள்.
* இடையில வாற லாபம், காசுப் புழக்கம் எல்லாத்தையும் அவனுகள் அனுபவிப்பானுகள்.
உங்களுக்கு என்ன கிடைக்கும்?
பிச்சை போடுற மாதிரி ஒரு 2% இல்லாட்டி 3% வட்டி! அதுவும் இல்லை எண்டா வருசக் கடைசியில ஒரு கலண்டரும், ஒரு பிளாஸ்டிக் வாளியும்! 🤣
இன்னொரு பக்கம் "பணவீக்கம்" (விலைவாசி ஏறுறது) எண்டு ஒரு சைலண்ட் கில்லர் இருக்கு. அவன் வந்து வருசத்துக்கு 7%, 8% எண்டு உங்கட காசட பெறுமதியைக் கபளீகரம் பண்ணிடுவான். இது யூரோ டாலர் போன்ற கொஞ்சம் ஸ்ரோங்கான காசுகளிற்கு... இலைங்கை ரூபாய் அண்டால் 10% - 30% வரைக்கும் போகலாம்...
ஆகமொத்தம் பேங்க்காரன் கொழுத்துப்போவான். நீங்க மட்டும் அதே இடத்தில நின்னு செக்கு மாடு மாதிரி உழைச்சுக்கொண்டிருப்பீங்க.
அதான் இவ்வளவு காலமா நான் நிறைய இடங்கள்ள கத்திச் சொல்லுறது. காசு எண்டது வெறும் குப்பை எண்டு! அரசாங்கம் கண்டபடி காசை அச்சடிக்குது, காசுட மதிப்பு நாளுக்கு நாள் அதலபாதாளத்துக்குப் போகுது. உங்கட சேமிப்புக்கு எந்தப் பெறுமதியும் இல்லாமப் போகுது. பேங்க்காரன் மட்டும் உங்கட காசில பிசினஸ் பண்ணி மப்பில திரியிறான். இதுக்க ஏமாற்று இன்வெஸ்ட்மெண்ட் இன்சுரன்ஸ் பேர்வழியள் வேற..... சொல்லி வேலை இல்லை மோனே....
அப்ப இந்த பணக்காரங்கள் மட்டும் எப்படி மேலும் மேலும் பணக்காரங்கள் ஆகுறாங்கள்?
அவனுகள் உங்கட மாதிரி காசை பேங்கில போட்டு முடக்கி வைக்கிறேல்ல. காசுக்கு பதிலா இதையெல்லாம் வாங்குவாங்கள்.
* 🏠 காணி, பூமி, வீடுகள் (Real Estate)
* 🥇 தங்கம், வெள்ளி
* 🏢 பிசினஸ்
* 💰 கவர்ன்மென்டால அச்சடிக்க ஏலாத சாமான் எதுவோ, அது எல்லாத்தையும் வாங்கிப் போடுவாங்கள். கண்டியளோ??
ஏனெண்டா பணக்காரங்களுக்கு ஒரு சின்ன உண்மை தெரியும். காசைப் பாவிக்கிறவனைத் தேடித் தான் காசு ஓடி வரும்! சும்மா பெட்டிக்குள்ள பூட்டி வைக்கிறவனுக்கு வராது.
நீங்களும் இந்த எலிப் பொறியில இருந்து (Rat race) தப்ப வேணும் எண்டா, தயவுசெய்து இந்த நடுத்தர வர்க்கத்து புத்தியைக் கொஞ்சம் ஓரமா வைச்சிட்டு, முதலாளி மாதிரி யோசிக்கப் பழகுங்கோ!
பேங்கில காசைக் குவிக்கிறதை விட்டிட்டு, காசு தரக்கூடிய சொத்துக்களைச் சேருங்கோ.
காசைப் பெருக்கப் போறியளோ? இல்லாட்டி உங்கட காசை வைச்சு பேங்க்காரனைப் பணக்காரன் ஆக்கப் போறியளோ? நீங்களே முடிவு பண்ணுங்கோ! 😉
வங்கி நண்பர்கள் என்னுடன் கோவித்து மல்லுக்கட்ட வேண்டாம்.
🤷🏻♂️🤷🏻♂️🤷🏻♂️
10/03/2026
தாமதமாகிவிட்டது என்று நாம் தளர்ந்து போய் அமர்ந்திருக்கும் தருணங்களில், நம் காலடியில் இருக்கும் புற்களைக் கவனித்துப் பார்த்திருக்கிறோமா?
அவை ஒருபோதும் கடிகாரத்தைப் பார்த்து வளர்வதில்லை.
கவிஞர் வண்ணதாசனின் இந்த வரிகளில் ஒரு தீராத நம்பிக்கை ஒளிந்திருக்கிறது.
எத்தனையோ பொழுதுகளை நாம் வீணடித்து விட்டதாக ஒரு கணக்குப் போட்டு, 'இனி என்ன செய்ய முடியும்?' என்று கவலைப்படுவதிலேயே மீதமுள்ள நேரத்தையும் தொலைத்து விடுகிறோம்.
ஆனால், ஒரு சிறிய விதையை இன்று இந்த நொடியில் நீங்கள் நட்டாலும், அது தன் வாழ்வின் பயணத்தை இப்போதே தொடங்கத் தயாராக இருக்கிறது.
இன்றைய அதிகாலைப் பொழுது உங்களுக்குப் பிடிக்காமல் போயிருக்கலாம்.
மதிய வெயில் உங்களை வாட்டியிருக்கலாம்.
ஆனால், இந்த மாலை நேரத்தில் நீங்கள் எடுக்கும் ஒரு சிறு முயற்சி, இன்னும் எத்தனையோ சிகரங்களைத் தொட உங்களை அழைத்துச் செல்லும்.
ஒவ்வொரு அடியும் ஒரு புதிய தொடக்கம்தான்.
நேற்றைய இழப்புகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதை விட, இன்றைய கையிருப்பைக் கொண்டு நாம் எங்கு செல்லப் போகிறோம் என்பதுதான் முக்கியம்.
ஒரு தையல்காரர் கோணலாகிப் போன ஒரு தையலை மெல்லப் பிரித்துவிட்டு, மீண்டும் ஒரு நேர்த்தியான தையலைப் போடுவதைப் போல, நம் வாழ்வின் பக்கங்களை நாம் எப்போது வேண்டுமானாலும் புதிதாக எழுதத் தொடங்கலாம்.
கையிலிருக்கும் பேனாவைத் திறக்கத் தயங்காதீர்கள். அந்த முதல் கோடுதான் ஒரு மாபெரும் காவியத்தின் தொடக்கமாக இருக்கப்போகிறது.
இன்னும் எவ்வளவு தூரம் போக முடியும் என்று மலைக்கத் தேவையில்லை. மெல்ல நடக்கத் தொடங்குங்கள்.
நீங்கள் நடக்கும் அந்தப் பாதையே உங்களுக்குப் புதிய வழிகளைக் காட்டும்.
காலம் கடந்துவிட்டதாக யார் சொன்னது? இதோ, இந்த நொடியில் இருந்துதான் உங்கள் வசந்த காலம் தொடங்குகிறது.
எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம். தொடங்குங்கள்.
👍🏻👍🏻👍🏻
08/02/2026
வேலை செய்யும் இடத்தில்…
ஒருவன் அளவுக்கு மீறிய
சுதந்திரத்துடன் நல்லவன் போல்
நம்மை பிரமிக்க வைக்கிறான் என்றால்..
1) அவன் அங்கு திருட்டுதனம்(அ)
துரோகம் செய்கிறான் (அ)
செய்ய போகிறான்😜
2)மற்ற அனைவரையும் குற்றம் சொல்லி,
தானே நல்லவனாக கூறி,
அங்கு ஏமாற்றி வாழ்கிறான்🤪
3) வசதியாக வாழ…
முழு அடிமை என்பது பெருமையே
என நினைத்து வாழ பயிற்சி எடுத்தவன் அவன்😄
28/01/2026
முள்ளம்பன்றிக் கோட்பாடு!
முள்ளம்பன்றிகளால் ஒன்றோடு
ஒன்று நெருங்கி வாழ முடியாது.
அவற்றில் காணப்படும் முட்கள்
காரணமாக எதிரிகள் மட்டுமல்ல,
சொந்த குட்டிகளைக் கூட
அரவணைக்க முடியாது.
குளிர்காலம் வந்து விட்டால் முட்களின் குத்துக்களை தாங்கிய வண்ணம் அவைகள் வெப்பத்தைத் தேடி நெருக்கமாக வந்து ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும்.
வெப்பம் கூடும் போது குளிர்ச்சியை தேடி
தூரமாகிவிடும். இப்படியே கிட்ட வருவதும்
தூர செல்வதுமாக அவைகளின்
குளிர்கால இரவுகள் கழிகின்றன.
அதிகம் நெருங்குவதால் காயங்கள் அதிகரிக்கும், அதிகம் விலகுவதால்
உயிருக்கு ஆப்பத்தாகிவிடும்.
மனிதர்களுடான நமது உறவுகளும் இப்படித்தான் இருக்க வேண்டும். நம்மில் யாரும் முட்கள் இல்லாதவர்கள் இல்லை.
வலிகளை சுமக்காமல் உறவுப் பாலத்தை கட்டியமைக்க முடியாது.
குறைகள் இல்லாத நண்பன் தேடியவன்
காலமெல்லாம் தனித்து வாழ வேண்டி வரும்.
குறைகள் இல்லாத துணையை தேடியவன்
காலமெல்லாம் திருமணம் முடிக்காமல்
வாழ வேண்டி வரும்.
சச்சரவு இல்லாத சகோதரன் தேடியவன்
காலமெல்லாம் தேடிக்கொண்டே இருப்பான்.
குறைகள் இல்லாத உறவினர்களை எதிர்பார்த்து வாழ்பவன் காலமெல்லாம் உறவுகளை துண்டித்து வாழ வேண்டி வரும்.
குறைகளையும், பிழைகளையும் சுமக்காமல் வாழ்க்கை வண்டி நேராக பயணிக்காது.
மகிழ்ச்சியாக வாழ விரும்பினால்
எல்லாவற்றுக்கும் விளக்க தேடிப் போகாதீர்கள்.
எல்லாவற்றையும் அலசி ஆரயாதீர்கள். எல்லாவற்றையும் பகுப்பாய்வு செய்யதீர்கள்.
மாணிக்கமா, மரகதமா என்று தேடிப் பார்த்தவனுக்கு சுட்ட செங்கல் என்று
தெரிய வந்த கதை போல் ஆகிவிடும்.
யாரையும் அளவுக்கதிகம் தெரிந்தது
கொள்ள முற்படாதீர்கள்.
முகத்துக்கு முன்னால் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதோடு நாம் நின்றுகொள்வது நமக்கு நல்லது.
தொலைவில் இருக்கும் வரை நாயும்,நரியும் ஒன்றாகத்தான் தெரியும்.
அருகில் இருந்தால் மட்டுமே நாயின் நல்ல எண்ணமும்..
நரியின் தந்திர குணமும் புரியும்..
சில மனிதர்களும் அது போன்றே,
கணிப்பது கொஞ்சம் கடினம் தான்..💔🤝
17/01/2026
உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டது ஏன்?
கெவின் கார்ட்டர் உலக புகழ்பெற்ற
புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களை போன்றே இவருக்கும் நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற ஆசையும் ஆர்வமும் இருந்தன. இந்த ஆர்வம் அவரை நாடு, நகரம், கிராமம், காடு, மலை என்று கொண்டு சென்றது.
1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன்
சூடானுக்குக் கொண்டு சென்றது. அப்போது சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது. குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள் உண்ண உணவின்றி, பருகநீரின்றி பசி, தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தனர். பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின் நிலைகளைக் காமிராவில் பதிவு செய்ய கெவின் தொலைதூர கிராமங்கள் வரை சென்றார். இறுதியாக அவர் முயற்சி கைகூடியது. ஒரு நாள் தன் காமிராவை தோளில் தொங்க விட்டுக் கொண்டு உள்ளத்தை உலுக்கக் கூடிய படத்துக்கான காட்சியைத் தேடியலைந்து கொண்டிருந்தபோது அப்படிப்பட்ட காட்சி தென்பட்டது.
பசி பஞ்சத்தால் அடிபட்ட நோஞ்சான் நிலையில் உள்ள ஒரு சிறுமி நடக்கக் கூட இயலாத நிலையில், எலும்புக் கூடு போன்ற தன்னுடலை தவழ்ந்து இழுத்துக் கொண்டு மெல்ல மெல்ல
ஊர்ந்து செல்வதைக் கண்டார்.
அந்தச் சிறுமி ஐக்கிய நாடுகளின் சபையின் சார்பாக அமைக்கப்பட்டு இருந்த உணவு வழங்கும் முகாமை நோக்கி தள்ளாடியபடி தவழ்ந்து கொண்டிருந்தது உண்மையிலேயே இதயத்தைப் பிழியக் கூடியதாக இருந்தது. தோளில் இருந்து காமிராவை இறக்கி கோணம் பார்த்த கெவினுக்கு இன்னொரு வியப்பும் காத்திருந்தது.
ஆம்; அந்த எலும்பும் தோலுமான சிறுமிக்கும்ப் பின்னாலேயே சிறிது தொலைவில் ஒரு பிணம் தின்னிக்கழுகும் சிறுமியின் மீது பார்வையை நிலை நிறுத்திக் கொண்டு இருந்தது. எப்போது சிறுமியின் உடலை விட்டு உயிர்
பிரியும்; மீதியுள்ள அந்தத் தோலையும் அதைச்சுற்றி இருக்கும் சிறிது மாமிசத்தையும் எப்போது சாப்பிடலாம் எனக் காத்திருந்தது பிணம் தின்னிக்கழுகு.
கெவின் கேமரா லென்சை கண்ணுக்கு ஒத்திக் கொண்டார்; சிறுமியையும் கழுகையும் ஒரே பிரேமில் அடக்கிக் கொண்டு ‘க்ளிக்’ செய்தார். இப்போது அவரது புகைப்படக்கருவியில் மிக அரிதினும் அரிதான படம் பதிவாகி விட்டது. இதை விற்றால் நல்ல விலை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் காமிராவைத் தோளில் மாட்டிக் கொண்டு தனது வண்டியை ஸ்டார்ட் செய்தார்; பறந்து விட்டார். இந்த அரிதான படத்தை ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கைக்கு விற்று
விட்டார்.
இந்தப் புகைப்படம் 1993 மார்ச் திங்கள் 26 ஆம் நாள் காலை நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்ததும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பத்திரிக்கை அலுவலகத்திற்கு தொலைப்பேசி மூலம் தொடர்புக் கொண்டனர்.
அனைவரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டனர். புகைப்படத்தில் உள்ள சிறுமி என்ன ஆனாள்? அவள் உயிருடன் பிழைத்தாளா அல்லது இறந்து விட்டாளா? இந்தக் கேள்விக்கான பதில் பத்திரிக்கையின் தொலைப் பேசி ஆப்ரேட்டரிடமோ படத்தை எடுத்த கெவின் கார்ட்டர்டமோ இல்லை.
1994,மே 23 அன்று பெரும் கை தட்டல்களுக்கு இடையே கெவின் கார்ட்டர் கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் பிரமாண்டமான அரங்கத்தில் இந்த அரிதான புகைப்படத்திற்கான புலிட்சர் விருதப் பெற்றுக்கொண்டார் இந்த விருது புகைப்படத் துறையில் நோபல் விருதுக்கு இணையானது.
விருது பெற்ற சில நாட்களுக்குப்பின் கெவின் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார். கெவினுக்கும் அங்கு இருந்த பிணம்தின்னிக் கழுகுக்கும் என்ன வேற்றுமை? இரண்டும் ஒரே விதமாகத்தான் செயல்பட்டுள்ளனர்.
‘குறைந்தபட்சம் புகைப்பட நிபுணர் கெவின் அந்த சிறுமிக்கு ஒரு வாய் தண்ணீர் தந்து உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்; அல்லது தனது வலுவான கைகளினால் அந்தச் சிறுமியைத் தூக்கிச் சென்று உணவளிக்கும் அமைப்பு அலுவலகத்தின் வாயிலிலாவது சேர்த்து இருக்கலாம்; கல்லெடுத்து வீசி அந்தக் கழுகையாவது விரட்டி இருக்கலாம்; ஆனால் இவற்றில் எதையும் செய்யாமல் வெறும் ஒரு படத்தை எடுத்தார்; அதை அதிக விலை தந்த பத்திரிக்கைக்கு விற்று விட்டார் என்று ஒருவர் அவர் மீது குற்றம் சாட்டியதுதான் காரணம்.
இரண்டு மாதங்களுக்குப் பின் கடற்கரைக்கு அருகில் அவரது கார் நின்று கொண்டிருந்தது. அதில் அவர் பிணமாகக் கிடந்தார். கெவின் தற்கொலை செய்துகொண்டார். அவரது பிணத்திற்கு அருகில் காவல்துறைக்கு ஒரு கடிதம் கிடைத்தது. அதில் சில வரிகளே இருந்தன.
முதல் வரி I am Really, Really Sorry...
நாம் எவராக இருந்தாலும்
சரி, நம்மிடம் மனிதம் இல்லையெனில்
நாமும் மிருகத்திற்கே
ஒப்பாவோம்...
27/12/2025
சமூகத்தில் நாம் சந்திக்கும் சில மனிதர்கள் மிகவும் கவர்ச்சிகரமானவர்களாகவும், அன்பானவர்களாகவும் தொடக்கத்தில் தெரிவார்கள். ஆனால், பழகப் பழகத்தான் அவர்களின் பின்னால் இருக்கும் Narcissistic Personality Disorder வெளிப்படும்.
இவர்களின் மிக முக்கியமான ஆயுதம் என்னவென்றால், ஒருவரைத் திட்டமிட்டுச் சீண்டி, அவரைச் சண்டைக்கு இழுத்து, இறுதியில் அவரையே குற்றவாளியாக்குவது.
இந்த Narcissistsகள் தங்களுக்குத் தேவையான கவனத்தைப் பெற எதையும் செய்வார்கள்.
குறிப்பாக, மற்றவர்களின் பலவீனமான இடத்தைத் தொட்டுப் பேசுவது, மறைமுகமாக அவமானப்படுத்துவது அல்லது பொய்களைப் பரப்புவது மூலம் ஒருவரை அதீத கோபத்திற்கு உள்ளாக்குவார்கள். இதை அவர்கள் மிக நிதானமாகவும், ரகசியமாகவும் செய்வார்கள்.
தொடர்ச்சியாகச் சீண்டப்படும் நபர், பொறுமை இழந்து ஒரு கட்டத்தில் கத்தும்போது அல்லது கோபமாகப் பேசும்போது, narcissistsகள் சட்டென மாறிவிடுவார்கள்.
இப்போது அவர்கள் சத்தமிட மாட்டார்கள்; மாறாக, அமைதியாக மாறி, "பார், இவன் எவ்வளவு மோசமானவன், எப்படி கத்துகிறான்" என்று சுற்றியிருப்பவர்களிடம் காட்டிவிடுவார்கள்.
இங்கு சீண்டப்பட்டவரின் கோபம் மட்டுமே வெளியில் தெரியும், அந்த கோபத்திற்குக் காரணமான இவர்களின் செயல் மறைந்துவிடும்.
சண்டையின் முடிவில், தாங்கள் தான் பெரும் பாதிப்புக்குள்ளானது போலவும், மற்றவர் தன்னை மனரீதியாகத் துன்புறுத்துவது போலவும் ஒரு பிம்பத்தை உருவாக்குவார்கள்.
அனுதாபத்தைத் தேடுவதன் மூலம் தங்களை ஒரு "அப்பாவி"யாகச் சித்தரித்துக் கொண்டு, உண்மையாகப் பாதிக்கப்பட்டவரை ஒரு "அரக்கனாக" உலகுக்குக் காட்டுவார்கள்.
இவர்களின் நோக்கம் என்னவெனில் தங்கள் மீதான தவறுகளைத் திசைதிருப்புவது, மற்றவரின் நற்பெயரைக் குலைப்பது , சுற்றியிருப்பவர்களின் கவனத்தையும் அனுதாபத்தையும் முழுமையாகத் தன்பக்கம் ஈர்ப்பது.
இப்படிப்பட்ட மனிதர்களிடம் சிக்கிக்கொண்டால், நம்மை நாமே தற்காத்துக் கொள்ளும் ஒரே வழி "உணர்ச்சிகளைக் காட்டாமல் இருப்பது" (Grey Rock Method).
அவர்கள் எதிர்பார்க்கும் கோபத்தையோ, அழுகையையோ நாம் காட்டாதவரை, அவர்களால் நம்மை ஒரு கருவியாகப் பயன்படுத்த முடியாது.
ஒருவரின் கோபத்தை விட, அந்தக் கோபத்தைத் தூண்டிய அவர்களின் வஞ்சகமே மிகப்பெரிய ஆபத்தானது என்பதை சமூகம் உணர வேண்டும்.
05/12/2025
கொழுந்து பறித்து சிறுகச் சிறுகச் சேர்த்த பணம் இன்று உரிமையாளர் இன்றி அனாதையாய் கிடக்கிறது
இந்தப் பணத்தால இதை சம்பாதிச்சவனையும் காப்பாற்ற முடியல இந்த பணத்தை பாதுகாத்தவனையும் காப்பாற்ற முடியல இந்த பணத்தை யாருக்காக சம்பாதிச்சானோ அவர்களை கூட இந்த பணத்தால் காப்பாற்ற முடியல இதுதான் வாழ்க்கை பணத்தை தேடி ஓடாதீர்கள் வாழ்க்கை ஒரு குறுகிய காலம்தான் வாழ்வதை அழகாக வாழ்ந்து விடுங்கள்.
இருக்கும் வரை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டு, உதவி செய்து, புண்ணியம் சேர்த்து யாருக்கும் தொந்தரவு இல்லாமல் அழகாக, அமைதியாக வாழ்வோம்…
25/11/2025
திருமணமாகி இத்தனை வருடங்கள் ஆகின்றன, ஆனால் நீ ஒரு முறையாவது என்னைப் பார்த்து "ஐ லவ் யூ" என்று சொல்லவில்லை" என்றாள் அவள்.
அதற்கு அவன் சொன்னான்: உனக்கு ஞாபகம் இருக்கிறதா? ஒரு முறை நாங்கள் தெருவில் நடந்து கொண்டிருந்தபோது திடீரென மழை பொழிந்தது. உடனே நான் என் மேலங்கியைக் கழற்றி உன்னை மூடினேன். உன்னை பாதுகாப்பாக அழைத்து வந்தேன். நான் மழையில் நனைந்ததால் நோய்வாய்ப்பட்டேன், உனக்கு எதுவும் ஆகவில்லை."
அதற்கு அவள்: ஆம், எனக்கு நினைவிருக்கிறது என்றாள்.
உனக்கு ஞாபகம் இருக்கிறதா? ஒரு முறை நாங்கள் எங்கள் மகளைப் பார்த்துவிட்டு
வரும் வழியில் உனது பாதங்கள் வலித்தது.
உன்னால் நடக்க முடியவில்லை. நான் உன்னை என் தோளில் சுமந்து சென்றேன்" என்றான்.
அதற்கு அவள்: ஆம், எனக்கு நினைவிருக்கிறது என்றாள்.
உனக்கு ஞாபகம் இருக்கிறதா? நாங்கள் கண் மருத்துவரிடம் சென்ற போது, எனக்கு கண் பார்வை மங்கப் போகிறது என்று மருத்துவர் சொல்ல, நான், "பரவாயில்லை
எனக்கு வேறு இரு கண்கள் இருக்கின்றன. அதுதான் என் மனைவி. அவள்தான் என் கண்ணின் மணி" என்றேன்.
அதற்கு அவள்: ஆம், எனக்கு நினைவிருக்கிறது என்றாள்.
அதற்கு அவன்: இவைகள் அன்பின் வடிவங்கள் இல்லையா? என்றான்.
அதற்கு அவள்: நிச்சயமாக, நீ என்னை காதலிக்கிறாய் என்று எனக்குத் தெரியும். ஆனால் அதனை சொல்லில் நான் கேட்க ஆசைப்படுகிறேன்" என்றாள்.
அந்த நேரத்தில் அவன்: முதலில் நீ படிக்கட்டிலிருந்து விழுந்து விடாதபடி என் கையை நன்றாக பற்றிப் பிடித்துக்கொள்! என்றான்.
இப்போது புரிகிறதா? நான் உன் மீது எவ்வளவு அக்கறையாக இருக்கிறேன், உன் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்ககறேன் என்று' என்றான்.
காதல் என்பது பெயர்ச்சொல் அல்ல, அது வினைச்சொல். காதல் என்பது வெறும் வார்த்தைகள் அல்ல, அது நடத்தைகள். காதலில் வார்த்தைகளை விட நடத்தைதான் மிக முக்கியம். வார்த்தைகளில் "ஐ லவ் யூ" சொல்லிக்கொண்டு தொடங்கிய எத்தனை பல தொடர்புகள் முதல் நடத்தையில் தோல்வி கண்டு முறிந்து விட்டன.
வார்த்தைகளில் மாத்திரம் இல்லாமல் நடத்தைகளிலும் தொடரும் காதல் மாத்திரம் தான் நீடுழி வாழும்.
இது யார் எழுதியது எனத் தெரியாது......!
*பிடித்தது படித்து பகிர்ந்து கொண்டேன் *
03/11/2025
காதலென்பது உயிர்ப்பு தான்...!!
நம்பிக்கையோடு கொஞ்சம் காதலித்தே வாழ்வதில்
கொட்டிக்கிடக்கிறது சந்தோசங்கள்.
சேர்வதா பிரிவதா என்ற தேடல் இல்லாமல்
குடுப்பதும் பறிப்பதும் என்ற கணக்கிலடங்காமல்
நேசத்தை கொடுத்து மகிழ்வித்து மகிழ்ந்திருக்கும் காதல் எல்லாம் வயது கடந்த இளமையோடு துள்ளிக்குதிக்கும்.
நேசிப்புகளுக்கு வயது இருப்பதில்லை.
காதலித்துக்கொண்டிருப்தில் ஒரு அலாதி சுகமே...
இந்த உலகின் ஏதாதோ ஒரு மூலையில் தன்னை மறுபடி ரசிக்கவைக்கும், தனக்குள் சிரிக்கவைக்கும், யாருக்காகவோ அழவைக்கும் எல்லாமும் நிறைந்த சக்தி காதலுக்கே உண்டு...
காதலை அப்படியே தின்று வாழ்தல் பெருவரமே...
இழப்பிலும் பிரிவிலும் இழந்துவிடாத நிரந்தர காதல்களெல்லாம் மனதின் தாஜ்மஹால்களாய் எழுந்து பிரகாசிக்கிறது…
காதல் உடல்தாண்டி வயது தாண்டி மனம்சுமக்கும் மெல்லிய மயிலறிகின் தடவல்கள்…
உலகின் ஆகச்சிறந்த உன்னதங்கள்…
கடவுளையும் இறப்பையும் சொர்க்கத்தையும் நரகத்தையும் கண்முன்காட்டும் பிறப்பின் பயன்கள்...
இணைந்தாலும் இல்லாவிட்டாலும் உயிருக்குள் இணைந்து கிடக்கும் அற்புதங்கள்…
கொஞ்சம் வெட்கம் கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் ரசனை என உயிர்ப்பித்து தரும் உன்னதங்கள்...
காதலை விடவும் ஏதுமிருப்பதில்லை நாம் உயிர்ப்புடன்இருப்பதை உணர்வதற்கு...!!
🖤🖤🖤 I’ll