01/07/2026
“ரொசாரியன்ஸ் நிதியத்தின்” ஊடாக மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்படும்
-தொழிலதிபர் இராமையா விவேகானந்தராஜா தெரிவிப்பு
( மஸ்கெலியா நிருபர் )
ஹோலிரோசரி தமிழ் மகா வித்தியாலத்தில் கல்வி பயின்ற பழைய மாணவர்களின் பங்களிப்போடு “ரொசாரியன்ஸ் நிதியம்” உருவாக்கப்பட்டு மாணவர்களின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு உதவிகள் வழங்கப்படும் என நுவரெலியா ஹில்லினா பாம் (Hillina Farm) தொழிலதிபர் இராமையா விவேகானந்தராஜா தெரிவித்தார்.
மேற்படி வித்தியாலயத்தில் கடந்த ஆண்டு க.பொ.த. உயர்தரத்தில் 3 ஏ சித்திகளைப் பெற்று பல்கலைக் கழகத்துக்குத் தெரிவாகியுள்ள இரண்டு மாணவிகளையும் கற்பித்த ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் பரசுராமன் சங்கர் தலைமையில் நேற்று முன்தினம் (29) ஹோலிரோசரி ஆலய மண்டபத்தில் இடம்பெற்றபோது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
ரொசாரியன்ஸ் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் ஏ. செல்வநாயகம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் அருட்பணி பெனி யே.ச. முன்னாள் நோர்வூட் பிரதேச சபைத் தலைவர் குழந்தைவேல் ரவி, சமுக செயற்பாட்டாளர் எஸ்.கே. சந்திரசேகரன் உட்பட மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
எம்மால் செய்ய முடியாதது என்று எதுவும் கிடையாது, முயற்சி இருந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் காண முடியும், எனவே, மாணவர்கள் முடியாது என்ற வார்த்தையை மனதில் இருந்து நீக்கிக் கொண்டு கிடைக்கின்ற சந்தர்ப்பத்தை தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
1984 இல் எமது ரொசாரியன்ஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது. மாணவர்கள் நலன்சார்ந்த விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்டு வருகின்றோம். கடந்த ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த ஏ. யுகாஷினி, எஸ். பவித்திரா ஆகிய இரண்டு மாணவியர் பல்கலைக் கழகம் செல்கின்றமை பெருமைக்குரிய விடயமாகும். எதிர்காலத்தில் பல மாணவர்கள் உயர்கல்வி பெற வேண்டும் என்பதற்கு ஊக்கமளிக்கும் வகையிலேயே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் பல்கலைக்கழகக் கல்வியை நிறைவு செய்த பின்னர் வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொண்டு தம்மையும், தமது குடும்பங்களையும் பராமரிக்க வேண்டும் என்று நினைப்பது நியாயமானதே என்றாலும், யாரோ ஒருவரின் கீழ் ஒருவர் வேலை செய்யும் நிலைமை மாறி, எதிர்காலத்தில் எமது இளைஞர், யுவதிகள் ஒவ்வொருவரும் பலருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கக் கூடிய தொழில் தருநர்களாக வளர வேண்டும். அதற்கான பாடநெறிகளைத் தெரிவு செய்து உன்னத நிலைக்கு உயர திடசங்கற்பம் பூண வேண்டும்.
இந்த முயற்சிக்கு உறுதுணையாக பங்களிப்பு செய்யும் வகையில் பழைய மாணவர்களைக் கொண்டு “ரொசாரியன்ஸ் நிதியம்” உருவாக்கப்படவுள்ளது. ஹோலிரோசரி தமிழ் மகா வித்தியாலயம் உட்பட மலையகத்தில் உள்ள அனைத்து மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள், பரீட்சை வழிகாட்டல் செயலமர்வுகள், புலமைப் பரிசில் வழங்குதல், வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவுதல் போன்ற மாணவர்களின் நலன்கள் சார்ந்த பல்வேறு திட்டங்களை நடைமுறைப் படுத்தத் திட்டமிட்டுள்ளோம். எமது கல்லூரியில் கல்வி பயின்று உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தொழில் புரியும் நல்லுள்ளங்கள் மற்றும் நலன் விரும்பிகள் பங்களிப்பு செய்ய முன்வந்துள்ளமை குறிப்பிடத் தக்கது. மலையகத்தின் எதிர்காலம் சிறப்பதற்கு “ரொசாரியன்ஸ் நிதியம்” அதன் சேவையைத் தொடரும் என்றார்