01/02/2017
வீட்டு முறைப்படி செரிலாக்
இந்த செரிலாக் சித்த மருத்துவர் உமா வளவனின் ஆலோசனை படி இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட செரிலாக். எந்த வகையான இரசாயன பொருட்கள் கலப்படம் செய்யாமல் குழந்தைகளுக்கான ஒரு சிறந்த ஊட்டசத்துமிக்க இயற்கையான உணவு.
இந்த உணவை உங்கள் குழந்தைகளுக்கு உங்கள் வீட்டில் செய்து வைத்து கொள்ளவும். கடையில் வாங்க வேண்டாம். உங்களுக்கு தான் உங்கள் குழந்தை ஆரோக்கியம் முக்கியம்.
இந்த உணவை 9 மாத குழந்தை முதல் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகளுக்கு தாரளமாக கொடுக்கலாம்.
நல்ல தரமான சுத்தமான , புதிய பருப்பு வகைகளை பயன்படுத்தவும். எவர்சில்வர் பாத்திரம் மற்றும் பயன்படுத்தும் ஸ்பூன் ஈரத்தன்மை இல்லாமல் இருப்பது மிக மிக அவசியம்.
தேவையான பொருட்கள்
முளையிட்ட கேழ்வரகு 1 கப்
முளையிட்ட கம்பு 1 கப்
முழு முந்திரி பருப்பு 1/2 கப்
தோல் நீக்கிய பாதாம் பருப்பு 1/2 கப்
கோதுமை 1 / 2 கப்
ஓடுகள் நீக்கிய பிஸ்தா பருப்பு 1/2 கப்
வேர்கடலை 1/2 கப்
வால்நட் 1/2 கப்
பொட்டுகடலை 1/2 கப்
சுக்கு தூள் 1 தேக்கரண்டி
பாதாம் தோல் நீக்கும் செய்முறை
1. தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். மற்றுமொரு பாத்திரத்துல பாதாம் பருப்பை எடுத்து கொண்டு அதில் பாதாம் பருப்பு மூழ்கும் அளவுக்கு கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றி 15 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
2. பிறகு அந்த தண்ணீரை வடித்து விட்டு அதில் குளிரூட்டப்பட்ட தண்ணீரை ஊற்ற வேண்டும். பிறகு பாதாம் பருப்பின் மேலுள்ள தோலை இரண்டு விரல்களால் பிதுக்கினால் தானாக மேல் தோல் பிரிந்து விடும்.
பயிர்களை முளையிட வைப்பது
1. கேழ்வரகு மற்றும் கம்பை தனி தனியாக நன்றாக அலசி கொண்ட பிறகு அதை ஒரு பாத்திரத்துல போட்டு அது மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
2. 1 நாள் முழுவதுமாக ஊறவைக்க வேண்டும். பிறகு தண்ணீரை முழுவதுமாக வடித்து விட்டு அதை ஒரு சுத்தமான காட்டன் துணியில் கேழ்வரகு மற்றும் கம்பை தனி தனியாக இருக்கி கட்டி அதை 12 மணிநேரம் வைக்க வேண்டும். பயிர் முளைத்து இருப்பதை காணலாம்.
3. சில சமயங்களில் ( தட்பவெப்பநிலைக்கு ஏற்றவாறு ) முளை வருவதற்கு 1 அல்லது 2 நாட்கள் கூட ஆகிவிடும்.
செரிலாக் பொடி செய்முறை
1. ஒரு வடசட்டியில் எண்ணெய் விடாமல் முளையிட்ட பயிரை தனி தனியாக நன்றாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
2. ஒரு வடசட்டியில் எண்ணெய் விடாமல் கோதுமை , பருப்பு வகைகள், வேர்கடலை மற்றும் பொட்டுகடலை அனைத்தையும் தனி தனியாக வறுத்து எடுத்து தனியாக ஆற வைத்து கொள்ளவும்.
3. பிறகு நன்றாக ஆறிய உடன் அதை மிக்ஸியில் தனி தனியாக போட்டு நன்றாக நைசாக பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.
4. அதில் சுக்கு பொடியை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.
5. பருப்பு வகைகளை அரைக்கும் போது அதிக நேரம் அரைக்க கூடாது, அவ்வாறு அரைத்தால் எண்ணெய் வந்து விடும்.
6. பிறகு அனைத்தையும் ஒன்றாக கலந்து எவர்சில்வர் டப்பாவில் போட்டு பிரிஜ்ல பத்திர படுத்தி வைத்து கொள்ளவும்.
செரிலாக் செய்முறை
வீட்டு முறை செரிலாக் பொடி 1 மேஜைக்கரண்டி
பனை கற்கண்டு பொடித்தது 2 தேக்கரண்டி
தண்ணீர் 1 கப்
பசுநெய் 1 தேக்கரண்டி
1. தண்ணீரை நன்றாக சிறுதீயில் கொதிக்க வைக்க வேண்டும். அதில் பொடித்து வைத்துள்ள பனை கற்கண்டை போட்டு கொதிக்க விட்டு அதில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்.
2. அந்த சமயத்துல செரிலாக் பொடியை தண்ணீர் கொண்டு கட்டியில்லாமல் பேஸ்ட் போல் ஆக்கிகொள்ள வேண்டும்.
3. பிறகு இந்த பேஸ்டை கொதிக்கும் பனை கற்கண்டு கரைசலில் ஊற்றி கரண்டியால் கலக்க வேண்டும். இந்த கரைசலை 5 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
4. இப்பொழுது இந்த கலவை கேழ்வரகு கூழ் பததிற்கு வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு அதில் பசுநெய்யை போட்டு நன்றாக கலக்கி ஆறவைத்து.
5. குழந்தை உண்ணும் அளவிற்கு சூடு வந்த உடன் குழந்தைக்கு பரிமாறவும்.