08/03/2024
#நியாயம்_வழங்குங்கள்_யுவர்_ஆனர்...
இனிமேல் மூவர் குழு அமைத்தால் தான் உண்மை விளங்குமா ? அந்த ஒரு நபர் குழு என்னவாயிற்று?
சுமார் பத்து நாட்களாக மனதாலும் உடலாலும் வருந்தி தங்கள் போராட்டத்தின் பயணத்தை மேற்கொண்டு வரும் ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சர் வேண்டுகோள் வைத்துள்ளார்.
தேர்வு காலத்தில் மாணவர்கள் இருக்கின்றனர் என்று இப்போது தான் அவருக்கு தெரிகிறதா எனத் தெரியவில்லை. பத்தாயிரம் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு செல்லவில்லையே ... அதனால் மாணவர்களது கற்றல் என்னவாகும் ... எத்தகைய பிரச்சனைகள் இருந்தால் ஆசிரியர்கள் இப்படியான போராட்டக்களத்தில் இறங்குவார்கள் என்ற சிந்தனை ஏன் இவருக்கும் சார்ந்த கல்வி அலுவலர்களுக்கும் தெரியவில்லை?
மாவட்டம் தோறும் பெற்றோர்களை சந்திக்கிறோம் என விழா எடுத்து வருகிறார்களே , அதற்கு ஆசிரியர்களை வரவழைக்கிறார்களே ,
கலைத்திருவிழா நடத்துகிறார்களே, அதற்கு ஆசிரியர்களை அனுப்புகிறார்களே...
அப்போது கல்வி பாதிக்கப்படாதா என்று கேட்கிறார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒரு இடைநிலை ஆசிரியர். நியாயமான கேள்வி.
திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக்குளி என்ற இடத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மட்டும் எல்லாக் குழந்தைகளையும் ஒன்றாக அமர வைத்து இந்த பத்து நாட்களும் பார்த்துக் கொண்டு இருக்கிறாராம். அது அந்த மாவட்டத்தின் சிறந்த பள்ளிகளுள் ஒன்று , மாணவர்கள் எண்ணிக்கையும் அதிகம். அங்கு பணிபுரியும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் போராட்டத்தில் இருப்பதால் ஒற்றைத் தலைமை ஆசிரியர் மட்டுமே இருக்கிறார் என்று பெற்றோர் ஒருவர் கூறினார்.
நியாயமான முறையில் உட்கார்ந்து பேசினால் இந்த பிரச்சனை 15 நிமிடத்தில் முடிந்து விடக் கூடிய ஊதியப் பிரச்சனை.
சம வேலைக்கு சம ஊதியம் என்பது அனைவருக்குமான சமூக நீதி. அதை வழங்க இத்தனை இடையூறுகளை உருவாக்குகிறதே துறையும் அரசும்.
ஊடகங்களால் ஒரு ஐந்து நிமிடத்தில் இந்த பிரச்சனையைத் தெளிவாகக் காட்ட முடியும் போது அரசு தரப்பில் ஏன் வருடக்கணக்கில் இழுத்து அடிக்கின்றனர்?
இதே ஆசிரியர்கள் டிசம்பர் மாதம் இதே காரணத்திற்காகப் போராட்டம் செய்த போது முதல்வர் கவனத்திற்கு சென்றது தானே.
அத்தனை திட்டங்கள் வகுத்து , அவற்றுக்கு கோடிக் கணக்கில் நிதி ஒதுக்குகிறீர்களே , யாரோ தன்னார்வலர்களும் தனியார் அமைப்புகளும் அந்த நிதியைப் பெறுகின்ற போது, இப்படி உழைக்கும் ஆசிரியர்களை மதிக்காமல் அந்த ஆசிரியர்களின் ஊதியத்தில் நீதியை நிலைநாட்டாமல் அவர்கள் வயிற்றில் அடிப்பது எந்த விதத்தில் சமூக நீதி ?
ஒரு காலத்தில் ஆசிரியர் சமூகம் பெற்ற ஊதியம் மிகவும் குறைவு. போராட்டத்தில் நின்று எத்தனையோ தியாகங்கள் செய்து தான் இந்த ஊதியம் பெற்று வருகின்றனர் இன்றைய ஆசிரியர்கள். அன்றைய போராட்டங்களை முன்னெடுத்த ஆசிரியர்களில் குறிப்பாக இன்றைய தொடக்கக் கல்வி ஆசிரியர்கள்
(இடைநிலை ஆசிரியர்கள்) ஆனால் அன்று எட்டாம் வகுப்பு வரை கற்பித்த இடைநிலை ஆசிரியர்கள் தான் இன்றியமையாத பங்கு வகித்தனர் என்பதை யாரும் மறுக்க முடியாது. அவர்கள் போட்ட அடித்தளம் தான் இன்றுள்ள அனைத்து ஆசிரியர்களின் ஊதிய விகிதங்கள் என்பதை நினைவில் கொண்டு எல்லா ஆசிரியர் அமைப்புகளும் அவர்களுக்கு தோள் கொடுக்க வேண்டும்.
பள்ளிக் கல்வித் துறையின் மாண்புமிகு அமைச்சருக்கு, அறிக்கை தரவே ஒன்பது நாட்கள் பிடிக்கிறது அதே போல
இன்னும் அறிக்கை மட்டுமே கொடுத்து பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்று புதியதாக யாரை நம்ப வைப்பது எனத் தெரியவில்லை.
கல்வியின் அடித்தளம் என்பது ஆசிரியர்களையும் சேர்த்துதான் என அரசு உணர வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கையை உண்மையாகவே காது கொடுத்துக் கேட்டு நியாயம் வழங்குங்கள் யுவர் ஆனர் 😞.
*சு.உமா மகேஸ்வரி*
அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அமைப்பு